உன் சமையல் அறையில் (2014) - விமர்சனம்

பிரகாஷ் ராஜ் தயாரிக்கும் படங்கள் தரமானவையாக இருக்கும் என்ற பொதுக்கருத்துக்கு மீண்டும் வலு சேர்த்திருக்கிறது "உன் சமையல் அறையில்'.

லால், ஸ்வேதா மேனன் நடிப்பில் மலையாளத்தில் மெஹா ஹிட்டான "சால்ட் அன்ட் பெப்பர்' படத்தின் ரீமேக். தமிழுக்கு ஏற்ப மசாலா சேர்த்துள்ளதால் "தலப்பாகட்டு பிரியாணி' போல வாசம் கமகமக்கிறது.

படத்தோட கதை என்னனா ...

வாழ்க்கை என்பதே சாப்பிடுவதற்காகத்தான் என நம்பும் பிரகாஷ் ராஜ். 45 வயது ஆகியும் திருமணம் செய்துகொள்ளப் பிடிக்காமல், பிரம்மச்சாரியாக நண்பர் குமாரவேலுவைத் துணைக்கு வைத்துக்கொண்டு வாழ்கிறார்.

நண்பரின் பலவித வற்புறுத்தலுக்குப் பின்பு, பெண் பார்க்கப்போகும் இடத்தில் சாப்பிட்ட வடையில் மனதைப் பறிகொடுத்து, பெண்ணுக்குப் பதிலாக சமையல்காரரை (தம்பி ராமையா) கையோடு வீட்டுக்கு அழைத்து வருமளவுக்கு, சாப்பாடுதான் வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் பிரகாஷ் ராஜுக்கு.

டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான சிநேகா, தகுந்த வரன் கிடைக்காததால், திருமணம் செய்து கொள்ளாமல் முதிர்கன்னியாக இருக்கிறார். பிரகாஷ் ராஜ், சிநேகாவுக்கு இடையே, ராங் கால் ஒன்றினால் ஏற்படும் மோதல் நட்பாகி, கொஞ்சம் கொஞ்சமாகக் காதலாகிறது. இருவரும் சந்தித்துப் பேச நினைக்கும்போது, வயதானவன் என சிநேகா நினைத்து விடுவாரோ எனத் தயங்கி, தனக்குப் பதிலாக தனது மருமகனை (நவீன்) அனுப்புகிறார் பிரகாஷ் ராஜ்.

அதே போல சிநேகாவும் தனக்குப் பதிலாக தனது அறை நண்பியை (மேக்னா) அனுப்புகிறார். இருவருக்கும் இடையே காதல் பற்றிக் கொள்ள, பிரகாஷ் ராஜ் - சிநேகா காதல் என்னவானது என்பதை காமெடி, கொஞ்சம் செண்டிமெண்ட் சேர்த்து தாளித்துக் கதை சொல்லி இருக்கிறார் இயக்குநர் பிரகாஷ் ராஜ்.

படத்துல எனக்கு பிடித்த சில ....

பிரகாஷ் ராஜ்
வடையை ரசித்து ஆழமாக ருசிக்கும் ஒரு காட்சிபோதும் பிரகாஷ் ராஜின் அபரிமிதமான நடிப்பை விவரிக்க. 45 வயதான ஒருவரின் உளவியலை அப்படியே மனக்கண் முன்பாக நிறுத்துகிறார் பிரகாஷ் ராஜ். பிரகாஷ் ராஜ் - சிநேகா இடையேயான காதல் காட்சிகளில் இருக்கும் உயிர்ப்பு, நவீன் - மேக்னா காதல் காட்சிகளில் இல்லை.

சிநேகா
படத்தின் இரண்டாம் பாதி தொய்வடைவது இவர்களின் காதல் காட்சிகளால்தான். பெண்களுக்குத் திருமணம் தாமதமானாலோ, தடைபட்டாலோ சமூகம் என்ன சொல்லும் என்பதை சிநேகாவின் விம்மி வெடிக்கும் அழுகை உணர்த்துகிறது. வெல்டன் சிநேகா!


இசை இளையராஜா
படத்தில் இன்னொரு ஹீரோ இளையராஜாவின் இசை. இசையில் ராஜாங்கமே நடத்தி இருக்கிறார். நான்கு பாடல்களும் காதுக்கு இனிமையாக அமைந்து "ராஜா ஆல்வேஸ் ராஜா' என்று நிரூபிக்கின்றன. "இந்தப் பொறப்பு தான்' பாடல், உணவு வகைகளின் ருசிகளைச் சொல்லி ரசிக்க வைக்கிறது. "ஈரமாய்' பாடலில் காதல் வழிந்தோடி நம்மைச் சிலிர்க்க வைக்கிறது. "காற்று வெளியில்' பாடலில் இளையராஜாவின் குரல், கேட்பவர்களை உருக வைக்கிறது.

படத்திற்குப் பெரிய பலம் ப்ரீத்தாவின் ஒளிப்பதிவு. நம் வீட்டு சமையல் அறைக்குள் வழிமாறி நுழைந்து விட்டோமோ என தடுமாற வைக்கிறது இவரது ஒளிப்பதிவு.

படத்தில் வரும் காட்டுவாசி பாத்திரம்தான் வலிந்து திணிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் காட்சிகள் இல்லாமல் போயிருந்தால் படம் இன்னும் அழகாக இருந்து இருக்குமே...

எப்போதாவது ஒரு தடவைதான் இதுபோன்ற "ஃபீல் குட்' படங்கள் தமிழில் வரும். அந்த வகையில் ஆபாசம், வன்முறை இல்லாமல் வெளிவந்துள்ள "உன் சமையல் அறையில்' நாம் அனைவருமே ஒருமுறை வலம் வரலாம்.

கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
மொத்தத்தில் 'உன் சமையல் அறையில்' - ஃபீல் குட் படம்!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & CinimaExpress



சைவம் (2014) - விமர்சனம்

தலைவா படத்திற்கு பிறகு இயக்குனர் விஜய் இயக்கும் படம் 'சைவம்'. தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி இயக்குனர் ஏ.எல்.விஜய் தெவத்திருமகள் போல மீண்டும் ஒரு உணர்வுப்பூர்வமான கதையை கையில் எடுத்திருக்கிறார்.

"சைவம்" முழுக்க முழுக்க குடும்பக் கலாச்சாரத்தை முன்னிறுத்தும் படம். எல்லாத் தரப்பு மக்களையும் கவரும் விதத்தில் வெளிவந்திருக்கிறது.

படத்தோட கதை என்னனா ...

வேலை நிமித்தமாக வெளியூரிலும், வெளிநாட்டிலும் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சொந்தங்கள், திருவிழாவுக்காக சொந்த ஊருக்கு வருகிறார்கள். நீண்ட நாட்கள் கழித்து சந்தித்துக் கொண்டதால், சந்தோஷமும் கொண்டாட்டமுமாக கலகலப்பாக இருக்கிறது வீடு.

ஒருநாள் கோயிலுக்குச் சென்றிருக்கும் சமயத்தில், குழந்தை சாராவின் பாவாடையில் தீப்பற்றிக் கொள்ள, பதைபதைக்கும் தாத்தா நாசர் தன் கையிலிருக்கும் அர்ச்சனைத் தட்டைத் தவறவிடுகிறார். அதைப் பார்த்த அர்ச்சகர், "பாவாடையில் தீப்பற்றுவதும், அர்ச்சனைத் தட்டு தவறுவதும் நல்லதல்ல' என்று சொல்லி, "கடவுளுக்கு ஏதோ வேண்டுதல் மிச்சமிருக்கிறது. அதை உடனடியாக நிறைவேற்றுங்கள்' என்கிறார்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் அனைவரும் கோயிலுக்குச் சென்றிருந்தபோது, விபத்தில் இருந்து தப்பிப் பிழைக்கிறார்கள். விபத்தில் இருந்து காத்ததற்காக எல்லைச்சாமிக்கு சேவலொன்றை நேர்ந்து விடுகிறார்கள். ஆனால், அந்த வேண்டுதலை நிறைவேற்றாமல் மறந்துவிடுகிறார்கள். அதை சாராவின் பாட்டி நினைவு படுத்த, அந்த வருட திருவிழாவில் சேவலைப் பலி கொடுத்து வேண்டுதலை நிறைவேற்ற முடிவு செய்கிறார்கள்.

மறுநாள் காலையில் பார்த்தால் சேவலைக் காணவில்லை. சேவலைத் தேடி வீடு வீடாக, தெருத் தெருவாக அனைவரும் சுற்றுகின்றனர். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. அனைவரும் சோகத்தில் மூழ்கி இருக்க, திருவிழா நாளும் வருகிறது. சேவல் கிடைத்ததா? அதைப் பலிகொடுத்து வேண்டுதலை நிறைவேற்றினார்களா? என்பது சுவாரஸ்யமான நகைச்சுவைக் கதை

படத்துல எனக்கு பிடித்த சில ....

குழந்தை நட்சத்திரம் சாரா
படத்தின் நாயகன், நாயகி எல்லாமே சாராதான். சேவலிடம் அன்பு காட்டுவது, அதைப் பலிகொடுக்க விடாமல் காப்பாற்றப் போராடுவது, தன் அத்தை மகன் செய்த தவறுக்குத் தான் தண்டனை அனுபவிப்பது, நிதர்சனத்தைப் பெரியவர்களுக்கு உணர்த்துவது என "லவ் யூ சாரா!'

நாசர்
சாராவின் தாத்தாவாக நாசர் வழக்கம்போல ஜெயித்திருக்கிறார். சொந்தங்கள் சேர்ந்த மகிழ்ச்சியில் கிராமத்து தாத்தாக்களைக் கண்முன் நிறுத்துகிறார். நாசரின் மகன் லுத்புதீன் பாஷா இந்தப் படத்தில் நாசருக்குப் பேரனாக அறிமுகமாகியிருக்கிறார்.


சாராவின் பாட்டி, பெரியப்பா, பெரியம்மா, அப்பா, அம்மா, அத்தை, அவர்களுடைய குழந்தைகள் என எல்லோருமே தங்களுக்குத் கொடுக்கப்பட்ட பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

சிறுவன் ரே பாலின் அட்டகாசங்கள் அதிர வைக்கின்றன. வேலைக்காரராக வரும் ஜார்ஜ், அவருடைய மனைவியாக நடித்திருக்கும் மாலதி இருவரின் நடிப்பும் அட்டகாசம்.

சண்முகராஜனின் வெற்றிலைக் காமெடி, கோழியைத் தேடிச் செல்லும்போது நிகழும் கலாட்டாக்கள் என சிரிப்புச் சரவெடிக்குப் பஞ்சமே இல்லை.

இயக்குநர் விஜய்
அருமையான திரைக்கதையை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் விஜய். செண்டிமெண்டான கதையை கலகல காமெடி கலந்து படமாக்கியுள்ளார். ரசிகர்கள் வயிறு குலுங்கச் சிரிக்கிறார்கள். ஆபாச வசனங்கள், குத்துப்பாட்டு, பஞ்ச், ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள் என எதுவுமே இல்லாமல் வெற்றிக் கோட்டைத் தொட்டிருக்கிறார். சேவலைக் காக்க சாரா படும் கஷ்டங்களைப் பார்க்கும்போது, நமக்கும் அந்தப் பதட்டம் தொற்றிக் கொள்கிறது.

இசை ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அழகாக இருக்கின்றன. நா.முத்துக்குமாரின் வரிகளில், உத்ரா உன்னிகிருஷ்ணனின் குரலில் "அழகே... அழகே...' பாடல் மனதுக்கு இதமாக அமைவதோடு, வாழ்வின் ரசனையையும் உணர்த்திச் செல்கிறது. நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் பிரமாண்ட வீடும், கிராமமும் ஓவியங்களாகத் தெரிகின்றன.

கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
மொத்தத்தில் 'சைவம்' - குடும்ப உறவுகளை, உணர்வுகளை வலியுறுத்தும் படம்!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & CinimaExpress



Metro (2013) - ஹாலிவுட் பட விமர்சனம்

மெட்ரோ ரெயில் திட்டம் இன்னும் முழுசா முடியல; அதுக்குள்ள அதுல நடந்த ஊழல் பற்றிய சினிமாவான்னு அதிர்ச்சி அடைஞ்சிடாதீங்க. இது வெளிநாட்டு மெட்ரோ ரெயில் ப்ராஜக்டில் நடந்த ஊழலைப் பற்றி வந்திருக்கும் வெளிநாட்டுப் படம்.

ரஷ்யாவில் சுரங்கப்பாதைக்குள் விபத்தில் சிக்கும் மெட்ரோ ரெயில், அதில் பயணித்த பயணிகளின் நிலை, மீட்பு போராட்டம் என பரபரப்பான காட்சிகளை பதிவு செய்திருக்கும் ஆக்சன் படம் மெட்ரோ.

படத்தோட கதை என்னனா ...

நாயகன் செர்ஜி புஸ்கிபலிஸ் தன் மனைவி ஸ்வெட்லானா கோட்சென்கோவா மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். ஆனால் இவர் மனைவி ஸ்வெட்லானா தன் காதலன் அனடோலியுடன் நெருக்கமாக இருந்து வருகிறார். ஒருநாள் அதிகாலையில் மெட்ரோ ரெயில் புறப்படுவதற்கு முன் அதன் வழித்தடத்தில் நீர் கசிவதை காண்கிறார் ஒரு பணியாளர். இதை மேலதிகாரிகளிடம் கூறுகிறார். ஆனால் அவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை.

இதை தடுக்காவிட்டால் பெரும் ஆபத்து ஏற்படும் என்று உணர்கிறார் பணியாளர். அதிகாரிகளோ, இவர் குடித்து விட்டு உளறுவதாக கூறுகிறார்கள். இந்த சர்ச்சைக்கு மத்தியில் பலதரப்பட்ட மக்கள் செல்லும் மெட்ரோ ரெயில் காலையில் புறப்படுகிறது. அதில் செர்ஜி தன் மகளை ஸ்கூலுக்கு அழைத்துச் செல்கிறார். மேலும் அதில் ஸ்வெட்லானாவின் காதலன் அனடோலியும் பயணம் செய்கிறார்.

மெட்ரோ ரெயில் புறப்பட்டு சென்று கொண்டிருக்கும் வழியில் நீர் கசிவதை பார்த்து அதிர்ச்சியடைகிறார் ஓட்டுனர். பயத்தில் திடீரென பிரேக் பிடிக்கிறார். இதனால் மெட்ரோ ரெயில் ஓடுதளத்தில் இருந்து விலகி விபத்துக்குள்ளாகிறது. இதில் பலருக்கு காயமும் சிலர் உயிரிழக்கவும் நேரிடுகிறது. இதில் செர்ஜி மற்றும் மகள், அனடோலி மற்றும் சிலர் சிறு காயங்களோடு உயிர் பிழைக்கிறார்கள்.


பிழைத்தவர்கள் சிலர் மெட்ரோ ரெயில் செல்லும் பாதையில் தப்பித்து செல்கிறார்கள். செல்லும் வழியில் நீர் கசிவதால் மின்சாரம் பாய்ந்து பலர் உயிர் இழக்கிறார்கள். ஆனால் செர்ஜி, அவருடைய மகள், அனடோலி, மற்றும் ஒரு காதல் ஜோடி மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிறகு மெட்ரோ ரெயிலை விட்டு செல்கிறார்கள். ஒரு பக்கம் நீர் கசிந்து கொண்டே வருகிறது. இவர்கள் செல்லும் வழியில் மெட்ரோ ரெயிலின் ஒரு பாகம் அதிக நீர் வரத்தால் துண்டிக்கப்பட்டு இவர்கள் மேல் மோத வருகிறது. அதிலிருந்து தப்பித்து ஒரு குகைக்குள் மாட்டிக் கொள்கிறார்கள்.

உயிர் பிழைத்தவர்கள் சிலர் அடுத்த ஸ்டேசனுக்கு சென்று விடுகிறார்கள். மேலும் போலீசுக்கு தகவல் கொடுத்து மீட்பு பணிகளை தொடங்க வற்புறுத்துகிறார்கள். மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும், அதிகமாக நீர் கசிந்து வருவதாலும் மீட்பு பணிகள் செய்ய முடியாமல் போகிறது.

இறுதியில் குகைக்குள் மாட்டியிருக்கும் செர்ஜி, மகள், அனடோலி, மற்றும் அவர்களுடன் இருப்பவர்களை போலீசார் மீட்டார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

செர்ஜி புஸ்கிபலிஸ்
படத்தில் நாயகன் செர்ஜி அளவான நடிப்பை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். தன் மகளுக்கு எதுவும் ஆகக் கூடாது என்று துடிப்பது, அவள் தன்னை விட்டு சென்று விடக்கூடாது என்று உருகுவது போன்ற காட்சிகளில் இவரின் நடிப்பு பாராட்ட வைக்கிறது. சிறுமியாக வருபவர் அழகாக நடித்திருக்கிறார்.


ஸ்வெட்லானா கோட்சென்கோவா
நாயகி ஸ்வெட்லானா தன் மகள் பற்றி பதறும் காட்சியில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இயக்குனர் ஆண்டன் மெகர்டிச்வ்
பின்னணி இசை படத்திற்கு மேலும் பலம். ஒளிப்பதிவு ரசிக்கும்படியாக உள்ளது. மெட்ரோ ரெயில் விபத்தை தத்ரூபமாக காட்டியிருக்கிறார்கள். மெட்ரோ ரெயிலை மட்டுமே வைத்து அதில் காதல், பாசம் என அனைத்தையும் கலந்து கொடுத்த இயக்குனர் ஆண்டனை பாராட்டலாம்.

கோழி இடும் முட்டைகள் : 3 / 5
மொத்தத்தில் 'மெட்ரோ' - ஆபத்து!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Maalaimalar.com



பப்பாளி (2014) - விமர்சனம்

அரசூர் மூவிஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.அம்பேத்குமார் + ஏ.ரஞ்ஜீவ்மேனன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் பப்பாளி. இந்த படத்தில் செந்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் புகழ் பெற்ற சரவணன் மீனாட்சி தொடரின் நாயகன்.

கதாநாயகியாக இஷாரா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சரண்யா நடிக்கிறார். இளவரசு, ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, ஜெகன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் கௌரவ வேடத்தில் நிரோஷா நடித்திருக்கிறார்கள் .

விஜய் எபிநேசர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ஒளிப்பதிவு செய்ய, யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். 3

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் A.கோவிந்த மூர்த்தி. இவர் வெற்றி பெற்ற கருப்பசாமி குத்தகைதாரர், வெடிகுண்டு முருகேசன் போன்ற நகைச்சுவை படங்களை இயக்கியவர்.

படத்தோட கதை என்னனா ...

சாலையோரம் டிபன் கடை நடத்தி வருகிறார் இளவரசு. இவருடைய மகனான நாயகன் மிர்ச்சி செந்தில் பட்டப்படிப்பு முடித்து விட்டு ஐஏஎஸ் தேர்வு எழுதுவதற்காக பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டு அருகே உள்ள நாயகி இஷாராவை கண்டதும் காதல் வயப்படுகிறார். அவரிடம் தன் காதலை சொல்ல, அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து இருவரும் காதலித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இஷாரா தன் தாய் சரண்யாவிடம் செந்திலை அறிமுகப்படுத்தி வைக்கிறார். செந்திலை பார்த்தவுடன் சரண்யாவுக்கு பிடித்துவிட, காதலுக்கு பச்சைக் கொடி காட்டுகிறார். அப்போது செந்தில் தனது லட்சியமான ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப்பெற வேண்டும் என்று தெரிவிக்கிறார். இதைக்கேட்ட சரண்யா, தன் வாழ்வில் நடந்த கதையை கூறுகிறார்.

'என் கணவர் நரேன் என்னைத் திருமணம் செய்வதற்கு முன் பெரிய விஞ்ஞானியாக வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்கு முன் என்னை திருமணம் செய்து கொண்டதால் இருவீட்டாரின் எதிர்ப்பால் அவரால் அவருடைய லட்சியத்தை அடைய முடியவில்லை.

இன்று வரை அதை நினைத்து அவர் வருத்தப்படுகிறார். என்னால் தான் அவரால் விஞ்ஞானியாக முடியவில்லை என்று நான் நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன். அதேபோல் உங்கள் வாழ்க்கையும் வீணாகிவிடக்கூடாது, உங்கள் லட்சியத்திற்கு என் மகள் முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது’ என்று செந்திலிடம் கூறுகிறார்.

இதைக்கேட்ட செந்தில், உங்கள் பெற்றோர்கள் உங்களை வெறுத்து ஒதுக்கியதால்தான் உங்கள் கணவரால் லட்சியத்தை அடைய முடியவில்லை. உங்கள் பெற்றோர்கள் செய்த தவறை நீங்களும் செய்யாதீர்கள். எங்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள். நான் நிச்சயமாக தேர்வு எழுதி வெற்றிப்பெறுவேன் என்று கூறுகிறார்.

செந்திலின் கருத்தை ஏற்றுக் கொண்ட சரண்யா தன் முடிவை மாற்றிக் கொண்டு, செந்தில் ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றிப்பெற ஒத்துழைப்பு தர முடிவு செய்கிறார். அதே சமயம் செந்திலின் தந்தையான இளவரசு, ஓட்டலுக்கு ஆசைப்பட்டு செந்திலை வேறொரு ஓட்டல் முதலாளியின் பெண்ணுக்கு திருமணம் செய்ய முடிவு செய்கிறார்.

இத்திருமணத்தை நிறுத்த வேறு வழியில்லாமல் தன் மகள் இஷாராவுக்கும், செந்திலுக்கும் திருமணம் செய்து வைக்கிறார் சரண்யா. பின்பு தன் மாப்பிள்ளையை எப்படியாவது ஐஏஎஸ் ஆக்க வேண்டும் என்று சரண்யா மற்றும் அவரது கணவர் நரேன் முயற்சி செய்கிறார்கள். இந்த முயற்சியை இளவரசு தடுக்க முயற்சி செய்கிறார்.

இத்தனை தடைகளையும் கடந்து செந்தில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப்பெற்றாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

மிர்ச்சி செந்தில்
படத்தில் செந்தில் தன் யதார்த்தமான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு வலுவூட்டியிருக்கிறார். நடனம், காமெடி, காதல், சென்டிமென்ட் என நடிப்பை நன்றாக செய்திருக்கிறார். தன்னுடைய தோல்விகளை நினைத்து ஒவ்வொரு முறையும் சரண்யாவிடம் அழுது வருத்தப்படும் காட்சியில் நமக்கே லேசான சோகத்தை வரவழைத்துவிடுகிறார். இன்னும் நிறைய படங்கள் கிடைத்து நடித்தால் ஒரு லெவலுக்கு வரலாம்.

இஷாரா
நாயகி இஷாரா, நடுத்தர குடும்பப் பெண்ணாக பளிச்சிடுகிறார். காதல் காட்சிகளில் ரசிகர்களை கவரும் வண்ணம் நடித்துள்ளார். பாடல் காட்சிகளில் அழகாக இருக்கிறார். பாடல் காட்சிகளில் கொஞ்சம் கண்ணியம் காத்து, சில காட்சிகளில் அதைக் காற்றில் பறக்கவிட்டும் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகி பெரிய அளவில் நம்மை கவரவில்லை என்றாலும் உறுத்தவும் இல்லை.

சரண்யா பொன்வண்ணன்
சரண்யா பொன்வண்ணன் தமிழ் சினிமாவில் அன்னையாக பல படங்களில் நடித்து பாராட்டுகளை பெற்று வந்தார். தற்போது அன்னையாக மட்டுமல்லாமல் சிறந்த மாமியாராகவும் வலம் வருவார் என்பதற்கு இப்படம் உதாரணம். படத்தின் பெரும் பகுதியை இவருடைய கதாபாத்திரமே தாங்கிச் செல்கிறது. அதை உணர்ந்து நடிப்பை திறம்பட செய்திருக்கிறார். போனில் அவர் பாடும் ‘சொய்… சொய்… புபுபுப்…’ பாடல் அமர்க்களம்..!

சிங்கம்புலி
காமெடி கதாபாத்திரத்தில் வரும் சிங்கம்புலி ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக கதாநாயகியை துரத்தித் துரத்தி காதல் செய்யும் காட்சிகள், காதலையும் அரசியலையும் ஒப்பிட்டு பேசும் வசனங்கள் அருமை.


இளவரசு
நரேன், இளவரசு ஆகியோர் கொடுத்த வேலையை திறம்பட செய்திருக்கிறார்கள். அதிலும் தன மகன் தன்னை எதிர்த்து திருமணம் செய்து, தன கனவை தரைமட்டமாக்கிவிட்டான் என்பது தெரிந்ததும் இளவரசுவின் அட்ராசிட்டி இருக்கிறதே.. சூப்பர்..

இசை - விஜய் எபிநேசர்
விஜய் எபிநேசர் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் திறம்பட செய்திருக்கிறார். விஜயின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் பலம். ‘மனைவி வீட்டில் வாழப்போகும் பையா…’ ரீமிக்ஸ் சூப்பர்!

இயக்குனர் கோவிந்த மூர்த்தி
குடும்பக்கதையை மையமாக எடுத்துக் கொண்ட இயக்குனர் கோவிந்த மூர்த்தி, அதில் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்களிடம் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார். ஐஏஎஸ் தேர்வு எழுத முயற்சி செய்பவர்களுக்கு இப்படம் நல்ல ஊக்கமாக இருக்கும்.

இதுவரை ஒருவனின் வெற்றிக்கு அவனது பெற்றோர்களோ, அண்ணனோ, நண்பர்களோ அல்லது மனைவியோ, காதலியோ உதவி செய்வதாக வந்த படங்களை பார்த்திருப்பீர்கள். ஆனால் இங்க ஒரு மருமகனின் வெற்றிக்காக ஒட்டுமொத்த மாமனார் குடும்பமும் துணை நிற்பது என்பது தமிழ் சினிமாவுக்கு புதுசு.

கோழி இடும் முட்டைகள் : 3 / 5
மொத்தத்தில் 'பப்பாளி' - கசப்பும் இனிப்பும் கலந்த சுவை!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Maalaimalar.com



மெட்ராஸ் (2014) – இசை விமர்சனம்

வட சென்னை கதைக்களத்தினை தாங்கிவரும் ‘மெட்ராஸ்’ படத்தில் நாயகனாக கார்த்தி, நாயகியாக கத்ரினா தெரேசா நடிக்கின்றனர். இப்படத்தினை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா தயாரிக்க ‘அட்டக்கத்தி’ ரஞ்சித் இயக்குகிறார்.

பல வெற்றிப்படங்களை கொடுத்துவந்த கார்த்திக்கு சகுனி, அலெக்ஸ்பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற படங்கள் ஏறுமுகத்தில் அமையவில்லை. எனினும் 'பிரியாணி' ஓரளவுக்கு பரவாயில்லை ரகம். கார்த்தி இப்போது எதிர்பார்ப்பது ஒரு உடனடி வெற்றி அதனால் - ‘மெட்ராஸ்’!

சந்தோஷ் நாராயணன் ‘குக்கூ’ ஆல்பத்தில் பெருமான்மை மக்களை ஈர்த்த இசையமைப்பாளர். அவருடைய அடுத்த ஆல்பமாக, ‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன. அதே வேகத்தில் சூப்பர் ஹிட் பட்டியலிலும் சேர்ந்துள்ளன.

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.


சரி சரி படத்த பத்தி சொன்னது போதும். கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம்...

படத்தில் மொத்தம் 6 பாடல்கள்.

1. சென்னை வட சென்னை...

கபிலன் எழுதிய பாடல். ஹரிஹர சுதன், மீனாக்ஷி ஐயர் கூட்டணி எக்ஸ்ட்ரா எனர்ஜி சேர்க்க முதல் முறை கேட்கும் போதே மனதில் ஒட்டிக் கொள்ளும் ஒரிஜினல் ‘சென்னை ஆந்தம்’. எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இது.

சென்னையில் வாழ்வோரும் சரி, அங்கே பிழைக்க வருவோரும் சரி, விரும்பி ரசிக்கக்கூடிய வரிகள். ‘எங்க ஊரு மெட்ராஸ், இதுக்கு நாங்க தான அட்ரஸ்’ துவக்கத்திலேயே சென்னை கெத்தாக தொடங்கும் பாடல் ‘முள்ளுத் தச்சக் கூட்டுக்குள்ள, காக்கா குஞ்சா வாழ்ந்தாக் கூட’ என சென்னை பூர்வ குடிகளின் சோகத்தை கூட ஜாலியாய் சொல்லி செல்கிறது.


2. ஆகாயம் தீப்பிடிச்சா...

கபிலன் எழுதிய பாடல். பிரதீப்குமார் இதனைப் பாடியுள்ளார். இந்த பாடலும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

‘ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா’ என குறும்பு கற்பனையாய் தொடங்கும் பாடல் ‘வாடகைக்கு காதல் வாங்கி வாழவில்லை யாரும்’ என சீரியஸ் ஆகிறது. கபிலன் வரிகளுக்கு பிரதீப்குமாரின் குரல் மற்றும் கிட்டார் இனிமைக் கூட்ட ஆல்பத்தின் காதல் கீதமாய் ஒலிக்கிறது இந்தப் பாடல்.

அழகான மெட்டுடன் நல்ல வரிகள் சேர்ந்துகொள்ள, வித்தியாசமான இசைக் கோப்பினால் தன்னுடைய பாணி தனியானது என்று நிரூபித்துள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். சபாஸ்!!!


3. நான் நீ...

இந்தப் பாடலை உமா தேவி என்பவர் எழுதியுள்ளார். ஏற்கெனவே பல சூப்பர் ஹிட் பாடல்களைத் தந்த குரலுக்குச் சொந்தக்காரரான சக்திஸ்ரீயுடன் தீஷிதா இணைந்து பாடியுள்ளார்.

‘நான் பறவையின் வானம், பழகிட வா, வா நீயும்’ என்று பெண் மனதின் மென்மையை தூவுகிறது உமா தேவியின் வரிகள்.


4. காகித கப்பல்..

சென்னை சம்பந்தப்பட்ட படம் என்றால், கானா பாலா இல்லாமல் எப்படி? அவருடைய தனித்துவமான குரலில் அக்மார்க் சென்னை ஸ்லாங்கில் அமைந்த பாடல்.

எப்போதும் கேட்கும் கானா பாடல் போலத் தோன்றினாலும் ‘காசு கையில் வந்தாலும், கஷ்டத்துல வாழ்ந்தாலும், போக மாட்டோம் மண்ண விட்டு’ என உரிமைக் குரல் ஒலிக்கிறது. சென்னை வாழ்க்கையை விவரிக்கும் வித்தியாசமான வரிகள் மக்களைச் சட்டென்று கவர்ந்துகொள்ளும்வகையில் இந்தப் பாடலில் பதிவாகியுள்ளன.



5. இறந்திடவா நீ பிறந்தாய்...

இதுவும் கானா பாலா பாடல்தான். அவரது வழக்கமான பாணியிலிருந்து சற்றே மாறுபட்டு அமைந்துள்ள இந்தப் பாடல் தத்துவார்த்தமான பல விஷயங்களை எளிமையாகச் சொல்லிச் செல்கிறது. இதற்கும் சந்தோஷ் நாராயணனின் இசை இதமான சுகம் தரும்வகையில் அமைந்துள்ளது.

ஒப்பாரி பாடல் தொனியில் ஆரம்பமாகும் பாடல் இல்லாமையை அழுத்தமாய் பதிவு செய்கிறது. இடையில் ஒலிக்கும் ‘தப்பு சத்தம்’ எனர்ஜிக் கொடுத்தாலும் தினம் கடந்துப் போகும் பாடல் போல் இருப்பது சோர்வு தருகிறது.


5. தீம் மியூசிக்... - 2

‘காளி லவ்’ & ‘சுவர்’ என வரும் இரண்டு ‘தீம்’களும் ஆல்பத்துக்கு கூடுதல் பலம்.



பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
மொத்தத்தில் 'மெட்ராஸ்' பாடல்கள் ரசிக்கும்படி இருக்கு!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Images, Vuin.com & Ottran.in



Brick Mansions (2014) - ஹாலிவுட் பட விமர்சனம்

பிரஞ்சு மொழியில் 2004-இல் வெளிவந்த திரில்லர் கம் அதிரடி ஆக்சன் திரைப்படம் 'District B13'. அதன் ஆங்கில மொழி ரீமேக்கில் வெர்சன் தான் 'Brick Mansions 2014'(பிரிக்ஸ் மேன்சன்ஸ்).

இந்த புதிய வெர்சனில் பால் வாக்கர், டேவிட் பெல்லி, ரஸா, கத்தாலினா டெனிஸ், ஆயிஷா இஸ்ஸா & கார்லோ ரோடா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை இயக்கியவர் 'Camille Delamarre'. இந்த படம் தான் 'பால் வாக்கர்' நடித்த கடைசிப்படம். இந்த படத்திற்கு பிறகு தான் விபத்தில் பால் வாக்கர் பலியானார்.

'District B13' படத்தோடு ஒப்பிடும்போது 'Brick Mansions' ஒரு நல்ல படமே! இந்த படம் தமிழில் 'செங்கல் கோட்டை முரட்டு சிங்கங்கள்' என டப் செய்யப்பட்டு வெளிவந்தது.

படத்தோட கதை என்னனா ...

'பிரிக் மேன்சஸ்' பகுதி இனக்கலவரங்களாலும், போதை பொருள் கடத்தல் கும்பல்களாலும் சீரழிந்து போய் கிடக்கிறது. இதனால், அந்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அரசாங்கம் அறிவிக்கிறது. இருந்தாலும், பிரிக் மேன்சன் பகுதியை அழித்து, அங்கு மிகப்பெரிய நகரத்தை உருவாக்க அந்நகர மேயர் முடிவெடுக்கிறார்.

இந்நிலையில், பிரிக் மேன்சன் பகுதியில் இருக்கும் போதைக் கும்பலை ஒழிக்க அதே ஊரில் வசிக்கும் டேவிட் பெல்லி முயற்சி செய்கிறார். அவர்களிடமிருந்து போதை பொருளை திருடி, அதை அழிக்கிறான். இதனால், அந்த போதை பொருள் கடத்தல் கும்பல் இவனை தீர்த்துக்கட்ட முடிவெடுக்கிறது. பெல்லியை பிடிப்பதற்காக அவனது காதலியை கடத்திவந்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்கிறார்கள்.


அவளை மீட்கச் செல்லும் வேளையில், டேவிட் பெல்லி போதை கும்பலின் தலைவன் ரஸாவை துப்பாக்கி முனையில் கடத்தி வருகிறான். அவனை போலீசில் ஒப்படைக்க, போலீசோ போதை கும்பல் தலைவனுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். ரஸாவை விடுதலை செய்துவிட்டு, பெல்லியை ஜெயிலில் அடைக்கின்றனர்.

போலீஸ் அதிகாரியான பால் வாக்கரும் போதை பொருள் கடத்தல் கும்பல்களை தேடி அழித்து வருகிறார். இந்நிலையில், போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவனான ரஸாவின் ஆட்கள் அரசாங்கத்திடமிருந்து மிகப்பெரிய சக்திவாய்ந்த அணுகுண்டை கடத்தி வந்துவிடுகின்றனர். அதை வைத்து மிகப்பெரிய வியாபாரம் செய்ய முடிவெடுக்கின்றனர்.

அதனை மீட்கவும், போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனை பிடிக்கவும் பால் வாக்கர் நியமிக்கப்படுகிறார். இவருக்கு உதவியாக பிரிக் மேன்சன்ஸ் பகுதியை நன்கு தெரிந்திருக்கும், சிறையில் இருக்கும் டேவிட் பெல்லியை அழைத்துச் செல்லுமாறு அதிகாரிகள் கூறுகின்றனர்.

இருவரும் சேர்ந்து போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனை பிடித்தார்களா? பயங்கர சக்தி வாய்ந்த அணுகுண்டை எப்படி மீட்டார்கள்? என்பதே மீதிக்கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

பால்வாக்கர் & டேவிட் பெல்லி
படத்தில் பால்வாக்கர், டேவிட் பெல்லி என இரு நாயகர்கள். இருவரும் சண்டைக் காட்சியில் அசத்தியிருக்கிறார்கள். குறிப்பாக டேவிட் பெல்லி கட்டிடத்துக்கு கட்டிடம் குரங்கு மாதிரி தாவி குதிப்பது பிரமிக்க வைக்கிறது. பால் வாக்கருக்கு போலீஸ் உடை அவ்வளவாக எடுபடவில்லை. படத்தில் இடம்பெறும் கார் சேசிங் காட்சிகள் அபாரம்.

கத்தாலினா டெனிஸ்
டேவிட் பெல்லியின் காதலியாக வரும் கத்தாலினா டெனிஸ் அழகாக இருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் பிரமாதமாக நடித்திருக்கிறார்.

ரஸா
போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக வரும் ரஸா வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.

படத்தில் விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய கதாபாத்திரங்களே நடித்திருக்கின்றனர். படம் முழுக்க ஆக்சன் காட்சியும், எந்நேரமும் துப்பாக்கி குண்டு சத்தம் கேட்பதுமாக இருப்பதால் கொஞ்சம் போரடிக்கிறது. கார் சேசிங் காட்சிகளை பிரம்மாண்டமாக காட்டியிருப்பது படத்திற்கு பலம்.

கோழி இடும் முட்டைகள் : 2.5 / 5
மொத்தத்தில் 'Brick Mansions' - ஆக்ரோஷம்!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Maalaimalar.com



Enders Game (2014) - ஹாலிவுட் பட விமர்சனம்

'எண்டர்ஸ் கேம்' 2014-ஆம் ஆண்டு திரைக்கு வந்த அறிவியல் மற்றும் அதிரடி திரைப்படம். இந்த திரைப்படத்தை கோவின்ஹூட் எழுதி இயக்கயுள்ளார்.

இந்த திரைப்படத்தில் ஆசா பட்டர்பீல்ட், ஹாரிசன் ஃபோர்டு, ஹைலீ ஸ்டெயின்ஃபீல்ட், வயோலா டேவிஸ், அபிகாயில் பிரெஸ்லின் மற்றும் பென் கிங்க்ஸ்லி நடித்துள்ளார்கள்.

படத்தோட கதை என்னனா ...

உலகத்தை அழிக்க வேற்று கிரகவாசிகள் தாக்குதல் நடத்துகிறார்கள். இதில் உலகத்தில் நிறைய உயிர் சேதமும், பொருட் சேதமும் ஏற்படுகிறது. ஆனாலும் வேற்று கிரகவாசிகளால் உலகத்தை கைப்பற்ற முடியவில்லை. அவர்கள் தங்கள் உலகத்திற்கு சென்றுவிடுகிறார்கள். ஆனால் மீண்டும் அவர்கள் உலகத்தை கைப்பற்ற திரும்பி வருவார்கள் என மனிதர்கள் நம்புகிறார்கள்.

வேற்று கிரகவாசிகள் இங்கு வருவதற்கு முன்னால் நாம் அங்கு சென்று அவர்களை அழித்து விடலாம் என்று பூமியில் திட்டம் தீட்டுகிறார்கள். அதனால் சிறுவர்களை தேர்வு செய்து அவர்களை தயார் படுத்தலாம் என்று எண்ணுகிறார்கள்.

இதற்காக ஒரு தேர்வுக் குழு அமைக்கப்படுகிறது. தேர்வில் எல்லாத் திறமைகளும் கொண்ட எண்டரும் கலந்து கொள்கிறான். அவனை தேர்வு செய்த தேர்வுக்குழு, அவனை ஒரு அணிக்கு தலைவன் ஆக்குகிறது. இதுபோன்ற பல அணிகளை கொண்டு விண்வெளியில் ஒரு போட்டி நடத்துகிறார்கள். அதில் வெற்றி பெறும் அணி வேற்று கிரக வாசிகளை அழிக்க தேர்வு செய்யப்படும் என்று தேர்வுக்குழு முடிவெடுக்கிறது.

இந்த போட்டியின்போது ஏற்பட்ட தகராறில் மற்றொரு அணியின் தலைவனை எண்டர் தெரியாமல் கொன்று விடுகிறான். இதனால் மன வேதனை அடைந்து இந்தப்போட்டிக்கு தான் தகுதி அற்றவன் என்று நினைத்த எண்டர், உலகத்திற்கு திரும்புகிறான். பயிற்சித் தலைவனான ஐரும், எண்டரை சமாதானம் செய்கிறார். அந்த சமாதானத்தை ஏற்க மறுக்கிறான் எண்டர்.

இறுதியில் எண்டரை பயிற்சி தலைவர் சமாதானம் செய்தாரா? வேற்று கிரக வாசிகளை அழித்தார்களா? என்பதே மீதிக்கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

அசே பட்டபில்டு
எண்டராக நடித்திருக்கும் அசே பட்டபில்டு திறமையாக நடித்திருக்கிறார். குறிப்பாக தேர்வின் போதும், பயிற்சியின் போதும் திறமையாக செயல்பட்டு வியப்பில் ஆழ்த்துகிறார்.

ஹாரிசன் போர்ட்டு
படைத்தலைவனாக வரும் ஹாரிசன் போர்ட்டு, ஐரும் கதாபாத்திரத்தில் மிளிர்கிறார்.

இயக்குனர் கோவின் ஹூட்
படத்தில் சிறுவர்களை நடிக்க வைத்து அவர்களிடம் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் கோவின் ஹூட். டொனால்ட் ஒளிப்பதிவில் விண்வெளியில் நடக்கும் பயிற்சி விளையாட்டு பார்ப்பவர்கள் கண்களுக்கு விருந்தூட்டுகிறது.

ஸ்டீவ் ஜப்லோன்ச்கின் இசையும் மற்றும் பின்னணி இசையும் படத்திற்கு மேலும் பலம்.

கோழி இடும் முட்டைகள் : 3 / 5
மொத்தத்தில் 'எண்டர்ஸ் கேம்' - அசத்தல் கேம்!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Maalaimalar.com



கமலின் நான்கு புதிய படங்கள் - குஷியில் ரசிகர்கள்!

கமல்ஹாசன் தற்போது 'விஸ்வரூபம் 2, உத்தம வில்லன்' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். மேலும் இரண்டு புதிய ரீமேக் படங்களில் நடிக்கிறார்.

1. விஸ்வரூபம் 2

விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தின் பெருமளவுப் பணிகளை கமல்ஹாஸன் முடித்துவிட்டாலும், அவரால் படத்தை முழுமையாக முடிக்க முடியவில்லை. காரணம், படத்தின் இன்னொரு தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு உள்ள நெருக்கடிதான் என்கிறார்கள்.

விஸ்வரூபம் முதல் பாகத்தில் இடம்பெற்ற நடிகர், நடிகைகள் மட்டுமன்றி, இரண்டாம் பாகத்தில் வேறு சில நடிகர், நடிகைகளும் நடித்துள்ளனர். பூஜா குமார் மற்றும் ஆன்ட்ரியா நாயகிகளாக நடித்துள்ளனர்.

சில பேட்ச் வேலைகள் மட்டுமே உள்ளன. தயாரிப்புக்கு பிந்தைய வேலைகளில் நடைபெற்று வருகின்றன. முடிந்ததும் எந்த நேரமும் படம் வெளியாகலாம்.

உத்தம வில்லன் படம் வெளியாகி இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான் கமல்ஹாஸனின் விஸ்வரூபம் 2 வெளியாகும் என கமல் ஹாஸன் உறுதிப்படுத்தியுள்ளார்.

2. உத்தம வில்லன்

உத்தம வில்லன் ரமேஷ் அரவிந்தின் இயக்கத்தில், லிங்குசாமியின் தயாரிப்பில் திரைக்கு வெளிவரவிருக்கும் நகைச்சுவைத் திரைப்படம். இந்தப் படத்தில் முதன்முறையாக கமல் வித்தியாசமான வில்லன் வேடத்தில் வருகிறார். கமலுக்கு ஜோடியாக ஆண்ட்ரியாவும், பூஜா குமாரும் நடித்திருக்கின்றனர். கூடவே இயக்குனர்கள் கே.பாலசந்தரும், கே.விஸ்வநாத்தும் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

படத்தின் கதை, திரைக்கதையை கமல்ஹாசனே எழுதியிருக்க, ஷியாம் தத் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் சங்கர் எடிட்டிங் செய்கிறார்.

3. 'த்ரிஷ்யம்' தமிழ் ரீமேக்

மோகன்லால், மீனா மற்றும் பலர் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் த்ரிஷ்யம். தமிழில் திரிஷ்யம் ரீமேக்கில் கமல் மோகன்லால் வேடத்தில் நடிக்கிறார்.

ஆனால் நடிகை மீனா வேடத்தில் நடிக்கப் போவது யார் என்ற கேள்விக்கு மட்டும் விடை தெரியாமல் இருந்தது. தற்போது அந்த வேடத்தில் நடிகை கவுதமி நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் த்ரிஷ்யம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வளம்வரவுள்ளார்.

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் த்ரிஷ்யம் படத்தின் ரீமேக் ஜூலை 15 ந்தேதி தொடங்குகிறது. இந்தப் படத்தையும் இந்த ஆண்டே வெளியிட்டுவிட கமல் திட்டமிட்டுள்ளாராம்.

4. 'மனம்' தமிழ் ரீமேக்

தெலுங்கில் நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா, நாகசைதன்யா நடிப்பில் வெளியாகியுள்ள 'மனம்' படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல் நடிக்கயிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் அப்படத்தை பார்த்து ரசித்த கமல், நாகேஸ்வரராவின் நடிப்பு தன்னை வெகுவாக பாதித்ததாக குறிப்பிட்டிருந்தார். ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் நடித்த அந்த படத்தை பார்த்து முடித்ததும், தமிழ் ரீமேக்கில் தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டாராம் கமல்.

நாகேஸ்வரராவ் நடித்த வேடத்தில் கமல் நடிக்க, நாகார்ஜூனா வேடத்தில் மாதவன் நடிக்கிறாராம். ஏற்கனவே சுந்தர்.சி இயக்கிய அன்பே சிவம் மற்றும் மன்மதன் அம்பு படங்களில் அவர்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும், நாகசைதன்யா வேடத்துக்கு அப்படம் தொடங்கும் நேரத்தில் இன்னொரு இளவட்ட நடிகரிடமும் கால்சீட் கேட்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.

இரண்டு மாத இடைவெளியில் அடுத்து அடுத்து கமல் படங்கள் வெளிவருவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & EniyaTamil



வடகறி (2014) விமர்சனம்

மு.க.அழகிரி மகன் தயாநிதி அழகிரி தயாரிப்பில் ஜெய் & சுவாதி நடித்த படம் "வடகறி".

ஒரு சாதாரணமானவனுக்கு ஒரு நாளில் ஒரு சோதனை ஏற்பட்டால் அதிலிருந்துவிடுபட அவன் என்ன பாடுபடுகிறான் என்பதுதான் கதை.

படத்தின் தலைப்புக்கும் கதைக்கும் வழக்கம் போல எந்த சம்பந்தமும் கிடையாது.

படத்தோட கதை என்னனா ...

சென்னையின் குடிசைப் பகுதியில் தனது அண்ணன் அருள்தாஸ், அண்ணி கஸ்தூரி ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார் ஜெய். இவருக்கு மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை கிடைக்கிறது. சாதாரண செல்போனை வைத்திருக்கும் ஜெய், தனக்கு வேலை கிடைத்துவிட்டதால், முதல் சம்பளத்தில் நல்ல செல்போனாக வாங்கவேண்டும் என்று திட்டம் போடுகிறார்.

முதல் மாத சம்பளத்தை வாங்கி, தனது அண்ணனிடம் கொடுக்கிறார். அவரோ, ஜெய்யிடம் வெறும் ரூ.2000 மட்டுமே கொடுக்கிறார். அதை வைத்து பெரிய போனை வாங்க முடியாது என்பதால் குறைந்த விலையில் ஒரு கொரியன் மொபைலை வாங்கிக் கொள்கிறார்.

அந்த மொபைலுக்கு அழைப்புகள் வரும்போதெல்லாம் அதிக சத்தத்துடன் வருவதால் இவரை சுற்றியுள்ளர்கள் இவர்மீது எரிச்சலடைகின்றனர். அதனால், அந்த போனை எப்படியாவது மாற்றவேண்டும் என்று முடிவு செய்கிறார்.

இதற்கிடையில், ஜெய்யின் நண்பன் பாலாஜி குடியிருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசிக்கும் தோழியின் வீட்டுக்கு வரும் சுவாதியை அந்த ஏரியாவில் உள்ள அனைவருமே ஜொள் விடுகின்றனர். ஒருநாள் பாலாஜி வீட்டிற்கு செல்லும் ஜெய்யும், சுவாதியை பார்த்தவுடனேயே காதலில் விழுகிறான்.

ஆனால், அவளுக்கு வேறொரு காதலன் இருக்கிறான், அதனால் அவளது தோழியை காதலிக்குமாறு அறிவுரை கூறுகிறான் பாலாஜி. அதை ஏற்றுக்கொள்ளும் ஜெய், சுவாதியின் தோழியை ரூட் விடுகிறார்.

இந்நிலையில், ஒருநாள் கடைக்கு செல்லும் ஜெய், அங்கு விலையுயர்ந்த செல்போன் ஒன்று அனாதையாக இருப்பதை பார்க்கிறார். அதைப் பார்த்ததும் எடுத்து வைத்துக் கொள்கிறார் ஜெய்.


ஒருநாள், சுவாதியின் தோழியிடம் சென்று தனது காதலை சொல்லப்போகும் ஜெய், அவள் மூலமாக சுவாதிக்கு காதலன் இல்லை என்பதை அறிகிறான். உடனே, சுவாதியை காதலிப்பதாக அவளது தோழியிடமே சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். கோபமடைந்த தோழி, சுவாதியிடம் சென்று சண்டை போடுகிறாள். இந்த சண்டையால் வெறுப்படைந்த சுவாதி, தோழியை கடுப்பேத்துவதற்காக ஜெய்யிடம் நெருங்கி பழகுகிறார். நாளடைவில் இருவருக்குள்ளும் காதல் வருகிறது.

இந்நிலையில் ஜெய் கண்டெடுத்த போனுக்கு ஒரு நபர் போன் செய்து, கொடுத்த சரக்கை எப்ப வந்து ஒப்படைப்பாய்? சீக்கிரம் வந்து கொடுத்துவிடு என்று சொல்லிவிட்டு கட் செய்துவிடுகிறார். யார் அவர்? என்ன சரக்கு? என்று எதுவும் தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார் ஜெய்.

இதற்கிடையில் அவரது அண்ணனின் நேர்மையை அறியும் ஜெய், தானும் அதேபோல் இருக்க நினைக்கிறார். அதனால், அந்த மொபைல் போனை உரியவரிடம் ஒப்படைக்க நினைக்கிறார். அப்போது, ஜெய்க்கு ஏற்கெனவே போன் செய்த நபர் மீண்டும் போன் செய்கிறார். அப்போது, அவரிடம் முகவரியைக் கேட்டு, அங்கு சென்று ஒப்படைக்கப்போகும் ஜெய்யை அந்த நபரின் கூட்டாளிகள் அடித்து துவம்சம் செய்கின்றனர்.

அவர்கள் யார்? ஜெய்யை அவர்கள் தாக்க என்ன காரணம்? என்பதை பிற்பாதியில் விளக்கியிருக்கிறார்கள்.

படத்துல எனக்கு பிடித்த சில ....

ஜெய்
வழக்கம்போல் ஜெய் வழக்கம்போல் இப்படத்திலும் தனது அப்பாவி முகத்தை படம் முழுக்க பதிவு செய்திருக்கிறார். எல்லா காட்சிகளுக்கும் ஒரேமாதிரியான ரியாக்ஷனை காட்டி சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறார். பார்க்க சற்று குண்டாகி அழகாக இருந்தாலும், நடிப்பில் தேறவில்லை.

சுவாதி
நாயகி சுவாதி அழகாக இருந்தாலும், இவருக்கு படத்தில் நடிப்பதற்குண்டான வாய்ப்பு மிக குறைவாக வழங்கப்பட்டிருப்பது வருத்தமே. நடிக்க அதிக வாய்ப் பில்லாவிட்டாலும் நுட்பமான முறையில் உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் கவர்கிறார்.


ஆர்.ஜே. பாலாஜி
படத்தின் தலைப்போடு வரும் ஆர்.ஜே. பாலாஜி எப்.எம்.இல் இருக்கும் ஞாபகத்தில் இப்படம் முழுக்க பேசிக்கொண்டே இருக்கிறார். ஆனால், கேட்கத்தான் முடியவில்லை. எப்போது நடிக்க ஆரம்பிப்பார் என்று தெரியவில்லை. படத்தில் இடம்பெறும் காட்சி ஒன்றில், பாலாஜி அடிக்கும் காமெடிக்கு ஜெய், ஜோக்கடிச்சியா? நாளைக்கு சிரிக்கிறேன் என்று சொல்லும் வசனம், இந்த படத்தில் பாலாஜிக்கு சரியாக பொருந்தும்.

இயக்குனர் சரவணராஜன்
டத்தில் நடித்திருக்கும் யாருக்கும் வலுவான கதாபாத்திரம் இல்லை. எந்த கதாபாத்திரமும் ரசிகர்களை கவரவில்லை. மருத்துவத்தில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்ட நினைத்த இயக்குனர் சரவணராஜனுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம். ஆனால், அதை கதையோட்டத்தில் அழுத்தமாக பதிவு செய்யாமல் கோட்டை விட்டுவிட்டார். இடையில் வரும் தொய்வுகளை நீக்கியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டிய படம், திரைக்கதையின் வேகத்தடைகளாலும் தர்க்க ரீதியான ஓட்டைகளாலும் தடுமாறுகிறது. உச்சக்காட்சியில் வரும் திருப்பம் செயற்கையாகவே இருக்கிறது.

விவேக் சிவா- மெர்வின் சாலமோன்
விவேக் சிவா- மெர்வின் சாலமோன் ஆகியோர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையும் பரவாயில்லை. வெங்கடேஷ் ஒளிப்பதிவு பாடல் காட்சிகளில் இதமாக இருக்கிறது.

சன்னி லியோன்
சன்னி லியோன் ஆட்டம் போடும் பாடலும், அந்த பாடலை படமாக்கியவிதம் சரியில்லை. படத்தின் மற்ற பாடல்களைப் போலவே இதுவும் திரைக்கதையுடன் ஒட்டவில்லை. செல்போனை வைத்து எடுக்கப்பட்டுள்ள பாடல் காட்சிப் படுத்தப்பட்டுள்ள விதம் அருமை.

கோழி இடும் முட்டைகள் : 3 / 5
மொத்தத்தில் 'வடகறி' - சுவையில்லை!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Maalaimalar.com



தெனாலிராமன் கதைகள் 2

கதை 1 : பிறந்த நாள் பரிசு

மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. ஆடம்பரமாக விழா நடந்தது.

அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர்.
தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை.

அதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது.

அவையினர் கேலியாகச் சிரித்தனர்.

அரசர், "ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன?" எனக் கேட்டார்.

"அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும். அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும்போல இருங்கள்!" என்றான்.

அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தைவிட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, "ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை. பொக்கிஷப் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே விசேடங்களை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது," என உத்தரவிட்டார்.

தெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும் பாராட்டினர்.

கதை 2 :கிடைத்ததில் சம பங்குபங்கு

ஒருநாள் கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடக நாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத் தவிர மற்ற எல்லா முக்கியப்பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் அரசியும் மற்றும் சில பெண்களும் கலந்து கொள்வதால் தெனாலிராமன் இருந்தால் ஏதாவது கோமாளித்தனம் செய்து நிகழ்ச்சியை நடைபெறா வண்ணம் தடுத்துவிடுவான் என எண்ணி தெனாலிராமனை மட்டும் நாடக அரங்கினுள் விட வேண்டாமென்று வாயிற்காப்போனிடம் கண்டிப்புடன் சொல்லி விட்டார் மன்னர்.

இதை அறிந்தான் தெனாலிராமன் எப்படியாவது அரங்கத்தினுள் சென்று விடுவது என தீர்மானித்துக் கொண்டான்.

நாடகம் நடைபெறும், அரங்கின் வாயிலை நெருங்கினான் தெனாலிராமன். உள்ளே செல்ல முற்பட்டான். வாயில் காப்பானோ அவனை உள்ளே விட மறுத்து விட்டான். மீண்டும் மீண்டும் கெஞ்சினான். வாயிற்காப்போன் மசியவில்லை.

இந்நிலையில் தெனாலிராமன் ஒரு தந்திரம் செய்தான். "ஐயா, வாயிற்காப்போரே என்னை உள்ளே விட்டால் என்னுடைய திறமையால் ஏராளமான பரிசு கிடைக்கும். அதில் பாதியை உனக்குத் தருகிறேன்" என்றான். இதைக் கேட்ட வாயிற் காப்போன் முதலில் சம்மதிக்காவிட்டாலும் பின்னர் கிடைப்பதில் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டான்.

அரங்கத்தினுள் செல்ல வேண்டுமானால் மீண்டும் இன்னொரு வாயிற் காப்போனை சமாளிக்க வேண்டியிருந்தது. அவனும் தெனாலிராமனை உள்ளே விட மறுத்தான். முதற் வாயிற் காப்போனிடம் சொல்லியதையே இவனிடமும் சொன்னான். இவனும் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டுவிட்டான்.

ஒருவருக்கும் தெரியாமல் தெனாலிராமன் ஓர் மூலையில் போய் உட்கார்ந்து கொண்டான்.

அப்போது கிருஷ்ணன் ஆக நடித்தவன் வெண்ணை திருடி கோபிகைகளிடம் அடி வாங்கும் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. உடனே மூலையில் இருந்த தெனாலிராமன் பெண் வேடம் அணிந்து மேடையில் தோன்றி கிருஷ்ணன் வேடம் போட்டு நடித்தவனை கழியால் நையப் புடைத்து விட்டான். கிருஷ்ண வேடதாரி வலி பொறுக்கமாட்டாமல் அலறினான்.

இதைப்பார்த்த மன்னர் கடுங்கோபமுற்று மேடையில் பெண் வேடமிட்டுள்ள தெனாலிராமனை அழைத்து வரச்செய்தார் பின் "ஏன் இவ்வாறு செய்தாய்" என வினவினார். அதற்குத் தெனாலிராமன் "கிருஷ்ணன் கோபிகைகளிடம் எத்தனையோ மத்தடி பட்டிருக்கிறான் இப்படியா இவன் போல் அவன் அலறினான்" இதைக் கேட்ட மன்னருக்கு அடங்காக் கோபம் ஏற்பட்டது.

தெனாலிராமனுக்கு 30 கசையடி கொடுக்குமாறு தன் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இதைக் கேட்ட தெனாலிராமன் "அரசே இப்பரிசை எனக்கு கொடுக்க வேண்டாம். ஏனென்றால் எனக்குக் கிடைக்கும் பரிசை ஆளுக்குப் பாதி பாதி தருவதாக நம் இரண்டு வாயிற்காப்போன்களிடம் உறுதியளித்து விட்டேன். ஆகையால் இப்பரிசினை, அவர்கள் இருவருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுங்கள்" என்று கேட்டுக் கொண்டான்.

உடனே மன்னர் அவ்விரு வாயிற்காப்போன்களையும் அழைத்து வரச்செய்து இது குறித்து விசாரித்தார். அவ்விருவரும் உண்மையை ஒத்துக் கொண்டார்கள். அவ்விருவருக்கும் தலா 15 கசையடி கொடுக்குமாறு மன்னர் பணித்தார். மேலும் தெனாலிராமனின் தந்திரத்தைப் பாராட்டி அவனுக்குப் பரிசு வழங்கினார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Rammalar



The Raid 2 (2014) - ஹாலிவுட் பட விமர்சனம்

தி ரெய்ட் - தமிழில் பல படங்களில் வந்த கதை தான். ஆனால் எடுத்திருக்கும் விதம் தாம் பிரமாண்டத்தை ஏற்படுத்தியுள்ளது.


‘இதுவரை இப்படி ஒரு வன்முறை பொங்கும் படத்தை பார்த்ததே இல்லை’ என்று பிரபல ஹாலிவுட் விமர்சகர்ளே கதறுகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

படத்தோட கதை என்னனா ...

இந்தோனேசிய காவல்துறையில் ரகசிய போலீசாக செயல்படுபவர் ராமா. அவருக்கு, அந்நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவில் மிகப்பெரிய குற்றங்களில் ஈடுபடும் நிழல் உலக தாதாவின் கொள்ளை கும்பலை பிடிக்கும் வேலை தரப்படுகிறது. அந்த தாதா கும்பலுக்கு காவல்துறையில் உள்ள கறுப்பு ஆடுகளும் உதவி செய்கின்றன.

தாதா கும்பலை பிடிப்பது சவாலான விஷயம் என கருதும் ராமா, அக்கும்பல் தலைவனின் மகன் உகாக்கிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவன் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறான் என்பதறிந்து அவனைக் கொண்டே அக்கும்பலை பிடிக்க திட்டமிடுகிறார். அதன்படி, உகாக்கின் நம்பிக்கையை பெற குற்றவாளியை போல் சிறைக்குள் நுழைகிறார் ராமா.

இரண்டு வருட சிறை வாசத்திற்கு பின் ராமா, உகாக்கின் நண்பனாக வெளிவந்து தாதா கும்பலில் இணைகிறார். அதில் இருந்தவாறு கொள்ளை கும்பலின் மொத்த நெட்வொர்க்கையும், காவல்துறையில் உள்ள கறுப்பு ஆடுகளையும் கண்டுபிடித்து தனது முயற்சியில் வெற்றி பெற்றாரா? என்பதே மீதிக்கதை.


படத்துல எனக்கு பிடித்த சில ....

இகோ உவேய்ஸ்
சற்றே வளர்ந்த தலைமுடி, கடுகடு பார்வை என இகோவின் தோற்றம் எந்நேரமும் சீறிப்பாய காத்திருக்கும் ஏ.கே. 47 தோட்டா போல துரு துருவென இருக்கிறது. சிறை வளாகத்தில் நடக்கும் சேற்று சண்டை, கார் சேஸ், ரயில் ரணகளம், கிச்சன் கொடுவா கத்திக்குத்து என ஆக்சன் பிரியர்கள் போதும் என்று சொல்லுமளவிற்கு ரத்தக்குழம்பை பரிமாறி இருக்கிறார்கள்.

இகோவிடம் கும்பல் கும்பலாக மல்லுக்கு நிற்பவர்கள் மொத்தமாய் போய் 'காரியம்' செய்யாமல் தனித்தனியே சென்று உதை வாங்குவது ஹீரோயிசத்திற்கு பயன்பட்டாலும், இயல்பில் இருந்து விலகி நிற்கிறது.


அரிபின் புத்ரா
கொள்ளை கும்பல் தலைவனின் மகனாக வரும் உகாக்கும் (அரிபின் புத்ரா) தன் பங்குக்கு சண்டைக்காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.
தன்னிடம் சிக்கும் ஐந்து நபர்களின் கழுத்தினை சிறு கத்தியால் சாவகாசமாக நடமாடிக்கொண்டே அரிபின் புத்ரா அறுத்து தள்ளும் காட்சி வன்முறையின் உச்சம் எனலாம்.

இயக்குனர் கேரேத் இவான்ஸ்
படம் முழுவதும் சண்டை காட்சிகள் தான் நிறைந்துள்ளது. இந்த வருடத்தின் வன்முறை நிறைந்த படமாக இப்படம் காட்சியளிக்கிறது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த கேரேத் இவான்ஸ் படத்தின் கதையை உருவாக்கியதுடன் தானே இயக்கம் செய்து முத்திரை பதித்திருக்கிறார். படம் முழுவதும் ஆக்சன் காட்சிகளை வைத்து சண்டை பிரியர்கள் ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார்.

பின்னணி இசை, ஒளிப்பதிவு என சகல துறைகளிலும் ரத்தத்தை சிந்தி உழைத்திருக்கிறார்கள். குறிப்பாக இறுதியில் ஜூலி, பேஸ்பால் கொலையாளிடமும், இன்னொரு நபருடன் போடும் கொடுவாக்கத்தி சண்டையும் உச்சக்கட்ட அதிரடி. வெவ்வேறு களத்தில் கடும் சவால்கள் நிறைந்த சண்டைக்காட்சிகளை இருக்கும் வெல்ஷ்மேனுக்கு பலத்த விசில் அடிக்கலாம்.

கோழி இடும் முட்டைகள் : 3 / 5
மொத்தத்தில் 'The Raid 2' - சண்டை களம்.!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Maalaimalar.com



கத்தி vs காப்பி

ஏ.ஆர்.முருகதாஸ் காம்பினேஷனில் தயாராகி வரும் 'கத்தி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்தநாளான நேற்று ஜூன் 22-ம் தேதி வெளியிடப்பட்டது.


கருப்பும், வெள்ளையுமாக ஒரு தினசரி பேப்பரை கட்டிங் செய்தது போல உள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. கத்தி பட போஸ்டரும் சில போஸ்டர்களிலிருந்து காப்பி அடிக்கப்பட்டது என பரபரப்பாய் பேசப்பட்டது. சில ஆதாரங்கள் காண்பிக்கப்பட்டது அதில் ஒன்று இதோ...


கத்தி டீசர் வீடியோ அமெரிக்க பேப்பர் விளம்பரத்தின் அப்பட்டமான காப்பி! ஆதாரத்துடன் மாட்டிக்கொண்ட அனிமேஷன் பிஸ்தாக்கள்!

சரி இது பேஸ் டைப்போகிராபி என்ப்படும் ஒரு ஸ்டைல் தான்.. இது போல பலவிளம்பரங்கள் வந்துவிட்டன என்ற வகையில் இதை நாம் அந்த அளவுக்கு திட்ட வேண்டாம் கண்டுகொள்ளாமல் போகலாம் என நினைத்த போது தான் இன்னொரு விசயம் நம் கவனத்திற்கு வந்தது.

நேற்று போஸ்டருடன் ஒரு புதுமையான அருமையான டீசர் அனிமேசனும் வெளியானது. சென்னை நகரை அப்படியே நியூஸ்பேப்பரில் செதுக்கும் ஐடியாவில் உருவான டீசர். அட என நாம் ஆச்சர்யப்பட்டு நாமும் அதைப்பற்றி செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால் அந்த 'அட' ஒருநாள் ஆவதற்குள் 'அடச்சீ' என்றாகிவிட்டது. காரணம் அது அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் என் பத்திரிக்கையின் விளம்பரத்தின் அப்பட்டமான காப்பி என்பதால் தான்.

யோவ் விஜய் படம்னா எதையாச்சும் நெகடிவ்வா பேச ஆரம்பிச்சுடுவீங்களே என கோபம் கொப்பளிக்கும் முன்பாக இந்த வீடியோவே பாருங்கள்.



இப்போது கத்தி படத்தின் டீசர் வீடியோவை பாருங்கள்



இதில் நடிகர் விஜய்யை விமர்சிப்பதற்கு ஒன்றுமில்லை. அவர் படத்தில் இப்படி காப்பியடித்திருக்கிறார்கள் என்ற அவமானம்தான் அவருக்கு. ஆனால் இதில் விமர்சிக்கப்படவேண்டியது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தான்.

இந்திய அளவில் பெரும் டைரக்டராய் உருவாகியிருக்கும் முருகதாஸ் இதுபோன்ற மட்டமான சர்ச்சைகளை தன் படத்திற்கு விரும்பமாட்டார் என் நம்புகிறோம். ஆனால் இதை அவர் தெரிந்தே செய்திருந்தால் அது கண்டிக்கத்தக்கது. அல்லது இது அவருக்கு தெரியாமல் பல லட்சங்களை வாங்கிக்கொண்டு இதை செய்து கொடுத்த அனிமேசன் பிஸ்தாக்களின் உட்டாலக்கடி வேலையாக இருந்தாலும் இதற்கு கிரியேட்டிவ் ஹெட்டான டைரக்டராய் அவர்தான் பொருப்பு. எனவே இனி இதுபொன்ற சங்கடங்களை தவிர்பாரா?
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Source : soundcameraaction.com



நண்டு (1981) விமர்சனம்

'நண்டு' பட பாடல்களை அடிக்கடி கேட்பதுண்டு. ஆனால் படத்தை பார்த்ததில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று தான் படத்தை பார்க்க நேர்ந்தது. அது என்ன நண்டு? தலைப்பே ஆச்சர்யம் அளித்தது...!

சாவின் தவிர்க்க முடியாத இருப்பை, ஊசி போல சொருகி சொன்ன படம். எழுத்தாளர் சிவசங்கரியில் நாவலை படமாக எடுத்திருக்கிறார் நம் இயக்குனர் மகேந்திரன்.

வாழ்க்கையை யதார்த்தமாக பதிவு செய்த வெகு சில படங்களில் இந்த படமும் ஒன்று!

இத்திரைப்படத்தில் சுரேஷ், அஸ்வினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

படத்தோட கதை என்னனா ...

கதை லக்னோவில் தொடங்குகிறது. பெரிய இடத்து பையன் ராம். பொறுப்பற்ற அப்பா... குடும்பத்தில் மற்றவர்கள் அன்பான்வர்கள்.. பையன் ஆஸ்த்மா நோயாளி... அப்பாவின் டார்ச்சர் பொறுக்க முடியாமல், அங்கிருந்து கிளம்பி சென்னையில் வேலை கிடைத்து வந்து விடுகிறான்.

அங்கே ஓர் ஒண்டு குடித்தனத்தில் புரோக்கர் குமரிமுத்து சேர்த்து விடுகிறார். சென்னை ஆஃபிசில் வேலை செய்யும் சக ஊழியர் சீதாவும் அதே வீட்டில்தான் தன் குடும்பத்துடன் வசிக்கிறார் என்பது தெரிந்து மகிழ்கிறான் ராம்.

ராமை விரும்பும் வீட்டு ஓனர் மகள் மற்றும் சீதா இடையே சீதா ஜெயிகிறாள். கல்யாணம் செய்யபோகும் போது... சீதாவின் அக்கா வீட்டுகாரர் வில்லனாக வர, அதையும் மீறி திருமணம் நடந்து, குழந்தை பிறந்து, மாமனார்-மாமியாரை காணும் கனவுடன் ராமுடன் லக்னோ வருகிறாள் சீதா. வந்த இடத்தில் மாமனாரை தவிர மற்றவர் அன்பாக பழக... அங்கிருந்து புறப்பட்டு சென்னை வரும் வழியில் ஆஸ்துமா தொல்லையால் மிகவும் அவதிபடுகிறான் ராம்.

அதன் பிறகு அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன..? சீதா தனது கணவர் குடுப்பத்தோடு இணைந்தாளா என்பது தான் மீதி கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

இயக்குனர் மகேந்திரன்

சிதாவின் அம்மா, சீதா அக்கா, அவள் கணவன், வீட்டு ஓனர், LIC ஏஜண்ட் வெண்ணிற ஆடை மூர்த்தி, வீட்டு ஓனர் மகள், அங்கு இருக்கும் மற்ற பெண்கள், சீதாவின் தோழி, அவள் தகப்பன், என பிரதான கேரக்டர்களும் அவர்கள் குணாதிசயங்களும் ( ராமின் குடும்பம் உட்பட ), வெறும் பத்து நிமிடங்களில் நமக்கு அறிமுகமாகி விடுகின்றன என்பதில்தான் மகேந்த்ரன் நிற்கிறார்.

குளிக்க தண்ணீர் கிடைப்பதில் பிரச்சனை என்பதும் ஒரு பிரச்சனைதான்... ஆனால் அங்கும்கூட யாராவது உதவக்கூடும்... அந்த நேரத்தில் அது பேருதவி...

ஓர் ஆணுடன் பேசினால், புரணி பேசுபவர்கள் இருந்தால், ஆதரவு கொடுப்போரும் எங்காவது இருப்பார்கள்... திருமணத்தை பேசி முடிக்கும் நல்லிதயங்கள் தொலைவில் இருந்து வரக்கூடும்... அதைக்கெடுக்கும் சதிகாரர்கள் கூடவே இருக்கக்கூடும்...

வந்த மருமகளை வாயார வரவேற்கும் மாமியாரும், துரத்தும் மாமனாரும் ஒரே இடத்தில் இருக்கக்கூடும்... இப்படி சீதாவின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் வெகு இயல்பாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

வட இந்திய காட்சி வசனங்களை எப்படி கையாண்டார்கள் என்பது இன்னொரு சுவாரஸ்யம்... கதாபாத்திரங்கள் ஹிந்தியில் பேசுவார்கள்..ஆனால் குரல் தமிழில் ஒலிக்கும்..அதாவது நமக்கும் புரிந்து விடும்..அவர்கள் எப்படி தமிழ் பேசுகிறார்கள் என்ற கேள்வியும் வராது..


கதைக்கு உயிர்கொடுத்தவர்கள்

செந்தாமரை, வெண்ணிற ஆடை மூர்த்தி, வனிதா , குமரிமுத்து , வீட்டுஓனர், ரிக்‌ஷா ஓட்டுப்வர் என ஒவ்வொரு கேரக்டரும் செதுக்கப்பட்டுள்ளது... தேவை இன்றி ஒரு காட்சியும் இல்லை... ஒரு கேரக்டரும் இல்லை

கதானாயகன் சுரேஷ்.... நாயகி அஸ்வினி... இருவரும் செம க்யூட்டாக நடித்து இருக்கிறார்கள்.

இளையராஜா

ராஜா சார் சும்மா இசை ராஜாங்கம் நடத்தி இருப்பார் இந்த படத்தில். பின்னணி இசை இந்த படத்துக்கு மிகப்பெரிய பலம். இளையராஜாவின் இசை பல இடங்களில் மனதை வருடுகிறது. எனக்கு பிடித்த பாடல்கள் இதோ ....

அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா....

பிறகு,

மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே
மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே....

இந்த படத்தில் இரண்டு முழு நீள ஹிந்தி பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ் படத்தில் ஹிந்தி பாடல்கள். ஒரு புதிய முயற்சியை அப்போதே செய்து அசத்தியிருக்கார் இயக்குனர்.


பிரச்சனைகள் என்றும் ஓயப்போவதில்லை... ஆனால் வாழ்க்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்பதே படத்தின் மெசேஜ்!

கோழி இடும் முட்டைகள் : 4 / 5
மொத்தத்தில் 'நண்டு' - இனிய பாடல்கள் + நகைச்சுவை என அருமையான பொழுதுபோக்கு படம்!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Pichaikaaran.



இராமேஸ்வரம் திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்!

இராமேஸ்வரம் தல வரலாறு

ராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றான். ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணல்களால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்.எனவே ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இந்நகருக்கு "ராம ஈஸ்வரம்" என்று பெயர் ஆனது. மக்கள் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றர்.

22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்

1. மகாலெட்சுமி தீர்த்தம் : இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்கத்தில் உள்ளது. இதில் ஸனானம் செய்தால் சகல ஐஸ்வர்யமும் பெறலாம்.

2. சாவித்திரி தீர்த்தம், 3. காயத்ரி தீர்த்தம், 4. சரஸ்வதி தீர்த்தம் :
இம்மூன்று தீர்த்தங்களும் அனுமார் கோவிலுக்கு மேல்புறம் உள்ளது. இம்மூன்று தீர்த்ங்களில் ஸ்னானம் செய்வதால் மத சடங்குகளை விட்டவர் சந்ததியில்லாதவர் இஷ்ட சித்தி அடையலாம்.

5. சேது மாதவ தீர்த்தம் : இது மூன்றாம் பிரகாரத்தின் மேற்கு பகுதியில் உள்ள தெப்பக்குளம். இதில் ஸ்ரீராபிரானால் சகல லெட்சுமி விலாசமும், சித்த சக்தியும் பெறலாம்.

6. நள தீர்த்தம் : மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு தென்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் சுரிய தேஜசை அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.

7. நீல தீர்த்தம் : மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு வடபுறம் உள்ளது. இதில் நீராடுவதால் சமஸ்தயாக பலனையும் அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.

8. கவாய தீர்த்தம் : இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் சக்குசாயம், கோபம் மனைவலினம், தேக ஆரோக்கியம் கிடைக்கும்.

9. கவாட்ச தீர்த்தம் : இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் கவாய தீர்த்தத்திற்கு அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் நரகத்திற்கு செல்ல மாட்டார்கள். மன வலிமை, தேக ஆரோக்கியம், திட சரீரம் கிடைக்கும்.

10. கந்நமாதன தீர்த்தம் : சேது மாதவர் சன்னதியின் முன்பகுதியில் கவாய், கவாட்ச தீர்த்தங்களுக்கு அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் மகாதரித்திரம் நீங்கி ஐஸ்வர்ய சித்தியும் பெற்று பிரம்ம ஹத்தியாதிபாப நிவர்த்தி பெறுவர்.

11. சங்கு தீர்த்தம் : இராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் தெற்கு பக்கத்தில் இரண்டாம் பிரகாரத்தில் இதில் நீராடுவதால் செய்நன்றி மறந்த சாபம் நீங்கப் பெறும்.

12. சக்கர தீர்த்தம் : இராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் உள்ள இரண்டாம் பிரகாரத்தின் வடபுறம் உள்ள கருவூலத்தின் கீழ்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் ஊனம், குருடு, செவிடு ஆகியவை நீங்கி சௌக்கியம் அடைவர்.

13. பிரம்மாத்திர விமோசன தீர்த்தம் : இது இரண்டாம் பிரகாரம் வடக்கு பக்கத்தில் பைரவர் சன்னதி அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் பிரம்மஹத்தயாதி தோஷங்களும், பாவங்களும் நிவர்த்தியாவதடன், பில்லி சுனியமும் நீங்கும்.

14. சூர்ய தீர்த்தம் : இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் அமைந்துள்ளது. இத்திர்த்தத்தில் நீராடுவதால் திரிகாலஞானமும் உண்டாவதுடன் ரோகங்கள் நிவர்த்தியாகும்.

15. சந்திர தீர்த்தம் : இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தின் மேற்கு பக்கம் உள்ளது. இதில் நீராடுவதால் ரோக நிவர்த்தி அகலும்.

16. கங்கா தீர்த்தம் 17. யமுனா தீர்த்தம் 18. காயத்ரி தீர்த்தம் :
இம்மூன்று தீர்தத்தங்களும் திருக்கோவில் இரண்டாம் பிரகாலத்தில் அமைந்தள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் உள்ள சூரியன், சந்திரன் தீர்த்தத்திற்கு எதிரில் அமைந்துள்ளது. இவைகளில் நீராடுவதனால் பிணி, மூப்பு, சாக்காடு ஆகியவைகளும் அஞ்ஞானமும் நீங்கி முக்தி அடையலாம்.

19. சாத்யாம்ருத தீர்த்தம் : திருக்கோவில் அம்பாள் சன்னதியின் மூலஸ்தான நுழைவாயிலின் அருகே உள்ள அஷ்டலட்சுமி சன்னதியின் தெற்கு பக்கம் உள்ளது. இதில் நிராடினால் தேவதாகோபம் பிராம்மணசாபம் நிவர்த்தியாவதுடன், சூரியமூர்த்தி, மோட்ச பிராப்தி ஆகியவை கிடைக்கும்.

20. சிவ தீர்த்தம் : இந்த தீர்த்தம் சுவாமி சன்னதி நுழைவாயில் மற்றும் அம்மன் சன்னதி நுழைவாயில் ஆகியவற்றுக்கு இடையே நந்தி தேவருக்கு தென்புறம் அமைந்துள்ளது. இதில் ஸ்னானம் நீராடினால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

21. சர்வ தீர்த்தம் : இந்த தீர்த்தம் முதல் பிரகாரத்தில் இராமநாதசுவாமி சன்னத முன் உள்ளது. இதில் நிராடினால் பிறவிக்குருடு, நோயம் நரை திரையும் நீங்கி வளமடையலாம். கோவிலுக்கு வெளியே பல தீர்த்தங்கள். இவை புயலாலும், ஆக்கிரமிப்பாலும் பாதிக்கப்பட்டதால் இவற்றில் நீராட இயலாது.

22. கோடி தீர்த்தம் : இந்த தீர்த்தமானது இராமர் லிங்கப் பிரதிஷஙடை செய்தபோது அபிஷேகத்திற்கு நீர் தேவைப்பட்டது. அதனால் ராமநானவர் தன் அம்பின் நுனியை பூமியில் வைத்து அழுத்தினதால் அந்த இடத்தில் பூமியைப் பிளந்து கொண்டு நீர் வந்தது. அதுவே கோடி தீர்த்தம் எனப்படுகிறது. இந்நீரானது இராமநாதசுவாமி மற்றும் எல்லா சுவாமி அம்பாள் ஆகியவர்கள் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படவதால் பக்தர்கள் இத்தீர்த்தத்தில் நேரடியாக தாங்களே தீர்தத்தை எடுத்து குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு கட்டணம் உண்டு. பக்தர்கள் இத்திர்த்தத்தில் நீராட இரண்டாம் பிரகாரம் வடபகுதியில் உள்ள பைரவர் சன்னதி முன்புறம் உள்ள கோமுக் மூலம் தீர்த்தத்தை விடுவார்கள், அதன் மூலம் நீராடலாம்.

கோடி திர்த்தத்தில் நிராடியபின் இவ்வூரில் இரவு தங்கலாகாது என்பது சம்பிரதாயம்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். மேலும் ஒரு like ஒரு comment போடுங்கள். நன்றி!!!
Thanks : MoreTamil & Wikipedia



ரஜினி சொன்ன குட்டி கதை - 05


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் செல்லும் பொது மேடைகளில் குட்டி கதைகளை சொல்வதுண்டு. அவ்வாறு சொன்ன குட்டிகதைகளின் தொகுப்பே இந்த பதிவு.

ஒருவருக்கு ஒரு தடவைக்கு மேல் உதவி செய்யாதே!

ஒரு ஊரில் இரண்டு பேர் தவம் இருந்தார்கள்.

அவர்கள் கனவில் கடவுள் தோன்றி, “நான் சொல்லும் இடத்துக்குப் போ. அங்கே ஒரு குரு இருப்பார். நீங்கள் கேட்டதை கொடுப்பார்” என்றார்.

அதன்படி அவர்கள் இரண்டு பேரும் அந்த குருவை சந்திச்சாங்க. “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று குரு கேட்டார். ஒருத்தன் சொன்னான், ‘எனக்கு பணம், பெயர், புகழ், பட்டம், பதவி வேண்டும்’னு. ‘எடுத்துக்கொள்” என்று குரு சொன்னார்.

இன்னொருத்தன், ‘எனக்கு நிம்மதி மட்டும் போதும்’ என்றான். ‘எடுத்துக்கொள்’ என்றார் குரு.

5 வருடங்கள் கழித்து அந்த குரு, பணம் கேட்ட சிஷ்யனைச் சந்திச்சார். ‘எனக்கு பணம் வந்தது. ஆனால் நிம்மதி இல்லை’ன்னு சொன்னான்.

நிம்மதி வேணும்னு கேட்டவன்கிட்ட போனார் குரு. அவனோ, ‘எனக்கு நிம்மதி இருக்கு. சந்தோஷம் இல்லை’ன்னு சொன்னான்.

பணம் கேட்டவனைப் பார்த்து, ‘நீ சம்பாதிச்ச பணத்தை நீயே வச்சிக்கிட்டே. அதனால்தான் நிம்மதி இல்லை”ன்னு குரு சொன்னார்.

அடுத்த 5 வருடங்கள் கழித்து அந்த குரு அவனை சந்தித்தபோது, “நீங்க சொன்னபடி நிறையபேருக்கு உதவிகள் செய்தேன். ஆனால் உதவி பெற்றவர்களே மீண்டும் மீண்டும் வந்து உதவி கேட்கிறார்களே”ன்னான்.

“ஒருவனுக்கு ஒரு தடவைக்கு மேல் உதவி செய்யாதே. புதுசு புதுசாக வருகிறவர்களுக்கு உதவி செய். அல்லது பணத்தை கொண்டு போய் ஆற்றில் போடு” ன்னு குரு சொன்னார்.

“பணம் நிறைய வந்தாலும், இஷ்டப்பட்ட தொழிலை செய்தால்தான் நிம்மதி கிடைக்கும். அதைச் செய்…”, என்று குரு அறிவுரை சொன்னார்.



கஷ்டப்படாம சம்பாதிக்க ஆசைப்பட்டா!

மதுரைக்குப் போக வேண்டிய ஒருத்தன் பாக்கெட்டில் 350 ரூபாய் வைத்திருந்தான். மதுரைக்குப் போக 300 ரூபாய் பஸ் செலவு. மீதி 50 ரூபாயை சாப்பாட்டுக்கு வைத்திருக்கிறான். ஒரு ஹோட்டலுக்கு போகிறான். ஹோட்டலுக்கு வெளியில் சாப்பாடு இலவசம். அதற்கு பணம் உங்களோடு பேரன் கொடுப்பான் என்று எழுதியிருந்தது.

ஹோட்டலுக்கு போய் கேட்கிறான். என்னங்க சாப்பாடு இலவசம்னு போட்டிருக்கீங்க, பேரன் வந்து பணம் கொடுப்பான் என்று எழுதியிருக்கீங்க. எனக்கு 4 வயது பையன் இருக்கான். நான் சாப்பிட முடியுமா என்று கேட்கிறான். சாப்பிடுங்க. உங்கள் பேரன் வந்து பணம் கொடுப்பான் என்று ஹோட்டல் முதலாளி சொல்கிறார்.

ஹோட்டல் முதலாளி சொன்ன பின்னர் சிக்கன், மட்டன் அது இதுன்னு எவ்வளவு சாப்பிட முடியுமோ ஃபுல்லா சாப்பிடுறான். சாப்பிட்டு எழுந்து கிளம்பும்போது, ஹோட்டல் முதலாளி பணம் கேட்கிறார். சாப்பிட்டவன் சொல்கிறான், என் பேரன் வந்து பணம் கொடுப்பான்.., என்று.

அது இருக்கட்டும். உங்கத் தாத்தா சாப்பிட்டத்துக்கு நீதானே பணம் கொடுக்கணும். அப்படின்னு சொல்லி பாக்கெட்ல இருந்த பணம், கையில் இருந்த வாட்ச், இடுப்பில் இருந்த வெள்ளி கயிறு உட்பட அனைத்தையும் ஹோட்டல் முதலாளி கழட்டிக்கொள்கிறார்.

இப்படித்தான் கஷ்டப்படாம நாம எதுக்காவது ஆசைப்பட்டா, நம்ம கையில் இருப்பது எந்த வழியில் போகும்னு தெரியாது. அதனால வசதியா இருக்கிறவங்க, இலவச உதவிகளை ஏமாத்தி வாங்கினா… உங்க கையில இருக்கிறது எந்த வழியில போகும்னு உங்களுக்கே தெரியாது!

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். மேலும் ஒரு like ஒரு comment போடுங்கள். நன்றி!!!



Elysium (2013) - ஹாலிவுட் பட விமர்சனம்

'District 9' என்ற படத்தை இயக்கிய 'Neill Blomkamp' என்கிற இயக்குனரின் இன்னொரு மகத்தான அறிவியல் படம் 'Elysium'. இதில் மேட் டேமனும், ஜுடி பாஸ்டரும் நடித்துள்ளார்கள். ஒரு வழிய நேற்று தான் இந்த படம் பார்க்க முடிந்தது.

படத்தோட கதை என்னனா ...

2154 ஆம் வருடம் உலகில் உள்ள வசதி படைத்த மக்கள் எல்லோரும் பூமியை விட்டு சற்று தள்ளி மனிதர்களால் உருவாக்கப்பட்ட "எலிசியம்" என்னும் விண்வெளி தளத்தில் குடியிருக்கிறார்கள். பூமி மனீதர்கள் வாழத் தகுதியற்ற நிலமாக மாறுகின்றது. ஜனத்தொகை பெருக்கம், நோய்கள் என உலகம் சீரழிகிறது. வறுமையும் பஞ்சமும் தலைவிரித்தாடும் இடமாக இருக்கிறது. ஆனால், எலிசியத்திலோ ஆடல், பாடல் கேளிக்கைகள், நீச்சல் குளம் வசதியான வாழ்க்கை, எல்லாவற்றையும் விட எல்லா வகையான நோய், உடல் குறைகள் நீக்கும் உபகரணங்கள் இருப்பதால் இங்குள்ள மக்கள் நோயின்றி நீண்ட ஆயுளுடன் வாழ்கின்றனர்.

பூமியில் இருந்து "எலிசியம்" வரும் மனிதர்களை கொன்றும் சிறை பிடித்தும் அராஜக ஆட்சி செய்கின்றனர். அரசாங்கத்தின் அடிமையாக இருக்கும் நாயகன் மேக்ஸ் ஒரு கட்டத்தில் அரசாங்கத்தின் அலட்சிய போக்கால் உயிரை இழக்கும் அபாய நிலைக்கு தள்ளப் படுகிறான். அவர் உயிர் வாழ 5 நாட்கள் மட்டுமே கொடுக்கப்படுகிறது.

உயிர் பிழைக்க வேண்டுமென்றால் எலிசியத்துக்கு செல்ல வேண்டும். இதனால் திருட்டுத்தனமாக எலிசியதிற்கு விண்கலம் அனுப்பும் ஆட்களின் உதவியுடன் எலிசியம் செல்ல முயல்கிறான். அவனை தடுக்க எலிசியத்தின் செக்ரட்டரி அனுப்பிய அடியாள் ஒருவன் அவனைத் துரத்துகிறான். அவர்களிடம் தப்பித்து எலிசியம் சென்றானா, தன்னையும் பூமியையும் அவனால் காப்பாற்ற முடிந்ததா என்பதே மீதிக்கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

மேட் டேமன்
ஆரம்ப காட்சிகளில் ரோபோக்களிடம் கலாய்ப்பதாகட்டும், பின்னர் உடல்நிலை மோசமாகி தளர்ந்த நடையுடன் போராடுவதாகட்டும் செம்ம ஆக்டிங்

ஜூடி பாஸ்டர்
மேட் டேமன்-க்கு ஈடு கொடுக்கும் வண்ணம் செம்ம ஆக்டிங். ஆட்சியை தன்வயப்படுத்த சதித்திட்டம் தீட்டுவதும் பின் தன் தவறுக்கு உணரும் போதும் அசத்தல் பெர்பார்மென்ஸ்

வேக்னர்
வில்லன் ஸ்பைடராக வேக்னர் நம்மை மிரட்டுகிறார். அதுவும் வெடிகுண்டு வெடித்து முகத்தை இழந்த இவருக்கு எலிசியத்தில் முகம் மீண்டும் வளரும் காட்சியில் மிரண்டு தான் போகிறோம். அவன் பயன்படுத்தும் அதிநவீன ஆயுதங்கள் வாவ்.


நீல் ப்ளோம்கம்
படத்தில் எந்தெந்த காட்சிகள் செட் போட்டு எடுக்கப்பட்டது எது கிராபிக்ஸ் என்று பிரித்தறிய முடியாத வண்ணம் பிரமாதமான முறையில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. அந்த பிரம்மாண்டமான எலிசியத்தை கண்ணில் காட்டி பிரமிக்க வைத்த காட்சி. மனித மூளையையே ஹார்ட் டிஸ்காக பயன்படுத்திக் கொள்ளும் கிரியேட்டிவிட்டியும் ரசிக்க வைத்தன.

இயந்திர உலகத்திலே மெஷின்கள் நம்மை ஆளப்போகும் காலம் வெகு தூரம் இல்லை என்பதை சொல்லாமல் உணர்த்தும் காட்சிகள்.மேக்சுக்கும் ஸ்பைடருக்கும் நடக்கும் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி. லுக்கேமியாவால் பாதிக்கப்பட்ட சிறுமி கதை சொல்லும் காட்சியும் அருமை.

கோழி இடும் முட்டைகள் : 3.0 / 5
மொத்தத்தில் 'Elysium' - ஒரு நல்ல சயன்ஸ் பிச்சன் மூவி
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Kovaiaavee.



என்னமோ ஏதோ (2014) – பாடல் விமர்சனம்

கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா என்று அடுத்தடுத்த ஆண்டுகளில் பிரபலமான சினிமா பாடல்களைத் தந்து வரும் டீ.இமானின் அடுத்த படம் ‘என்னமோ ஏதோ’. கோ படத்தில் வரும் பாடலின் முதல்வரியே படத்தின் தலைப்பாகி விட்டது. கெளதம் கார்த்திக்கின் இரண்டாவது படம்.


சினிமா படப்பிடிப்புக்கான உபகரணங்களை வழங்கும் நிறுவனமான ரவிபிரசாத் புரொடக்ஷன் நிறுவனம் தெலுங்கில் ஹிட்டான "அலா மொதலயிந்தி" என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்து வருகிறது. கௌதம் கார்த்திக் ஹீரோ, அவருக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்திசிங், நிகிதா பட்டேல் என்ற இரண்டு ஹீரோயின்கள் நடித்து வருகிறார்கள். இருவருமே தமிழுக்கு புதுசு என்றாலும் தெலுங்கு தேசத்தில் பாப்புலர் ஆனவர்கள்.

பிரபு, ரேணுகா முக்கிய கேரக்டரில் வருகிறார்கள். இப்படத்தை ரவி தியாகராஜன் இயக்குகிறார். இசை: இமான், ஒளிப்பதிவு: கோபி ஜெகதீஸ்வரன் பாடல்: மதன் கார்க்கி.

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.

சரி சரி படத்த பத்தி சொன்னது போதும்... கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம்...

மொத்தம் 8 பாடல்கள். அதில் 5 பாடல்கள், 2 கரோக்கி, ஒரு இன்ஸ்ட்ருமெண்டல் ட்ராக்.பார்க்கலாம் எப்படி பாடல்கள் வந்திருக்கிறதென!

1. மொசலே.. மொசலே.. : தீபக், ஏ.வி.பூஜா.

டி.இமான் கிடார் பயன் படுத்துவது மிகவும் குறைவு. இப்பாடலில் கிடாரும், நாதஸ்வரமும் சேர்ந்து கலக்கியிருக்கிறார் மனுஷன். நல்லதொரு பெப்பி நம்பர். தீபக் குரலும், பூஜாவின் குரலும் வெஸ்ட்டேர்ன் பாடலுக்கு நச் செலெக்‌ஷன்! அக்மார்க் டி.இமான் பாடல்! பாடல் போகப் போகப் பிடிக்கலாம்.

2. முட்டாளாய்.. முட்டாளாய்.. : டி.இமான், மரியா ரா வின்செண்ட்.

ஹிட் ஆகக் கூடிய அதிரடி மெட்டும் மென்இசையும் கலந்த பாடல்.


‘மாற்றங்கள் எனக்குள் ஆராய்கிறேன்.. சத்தியமாய் இது பூமி இல்லை.. ’ என காதல் படுத்தும் பாட்டைபாடலாக்கியிருக்கிறார்கள். பாடலில் டி.இமான் குரல் அவ்வளவு பொருத்தம். மரியா ராப் நச் நச் நச்!! கடவுளே.. கடவுளே.. பாடலை ஞாபகப்படுத்துகிறதே இமான் சார்??

3. நீயென்ன அப்பாட்டக்கரா.. : அனிருத், ஹர்ஷிதா க்ரிஷான்.

சந்தானத்தின் பிரபல வசனமான ‘அப்பாடக்கரை’ வைத்தே ஒரு பாட்டை எழுதிவிட்டார்கள்.

‘ நீ அப்பிடி பண்ணுற.. அவ்ளோ பெரிய அப்பாடக்கரா..?’ என காதலன் காதலி இருவரும் மாத்தி மாத்தி கேட்டுக்கிட்டா அது இப்பாடல்! அனிருத்தின் குரல் செம… கேஷுவலாக பாடுவதே இவரின் பெரிய ப்ளஸ். ஹர்ஷிதா குரலும் பாஸ் மார்க். ‘உன்னோட பேரை பாஸ்வேர்ட்டாக வைத்திருந்தேன்.. நீ போனால் வேறு பேரா இல்லை..?’ என வரிகளும் ரசிக்க வைக்கிறது.

அந்தப் பாடலில் அசத்தலாக ஸ்கோர் செய்திருப்பவர் பாடகி ஹர்ஷிதா தான்.


4. புதிய உலகை.. : வைக்கோம் விஜயலட்சுமி.

கும்கி படத்தில் வரும் ‘ஒண்ணும் புரியல..’ பாடலையும் கொஞ்சம் ’சின்னஞ்சிறிய வண்ணப்பறவை..’ பாடலையும் மிக்ஸ் செய்தால் இப்பாடல் ரெடி! ஜஸ்ட் பாஸ்!

மயக்கும் குரலைக்கொண்ட வைக்கம் விஜயலட்சுமியை தமிழுக்குக் கொண்டுவந்துள்ளார் இமான். விஜயலட்சுமியின் காந்தக் குரலுக்காகவே அந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்கலாம்.

5. ஷட் அப் யுவர் மெளத் : ஷ்ருதி ஹாசன், தீபக்.

பாடலின் முதல் வரியை பார்த்ததுமே தெரிந்திருக்கும் எப்படிப்பட்ட பாடல் என்று. ஷ்ருதியின் குரல் வாவ்வ்வ்வ்……!!!!!! தீபக்கின் குரலும் பாடலுக்கு அத்தனை பொருத்தம்! சூப்பர் ஹிட் அடிக்கும் இப்பாடல்!

இதை விட ஒரு இன்ஸ்ட்ரூமெண்டலும், ’புதிய உலகை’ பாடலுக்கும், ’ நீயென்ன பெரிய..’ பாடலுக்கும் கரோக்கிகள் இருக்கின்றன ஆல்பத்தில்!


கோழி இடும் முட்டைகள் : 2.5 / 5
மொத்தத்தில் என்னமோ ஏதோ சுமாரா தான் இருக்கு !

படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!!!

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Images & Tamilss.com



Related Posts with Thumbnails
 
back to top