நண்டு (1981) விமர்சனம்

'நண்டு' பட பாடல்களை அடிக்கடி கேட்பதுண்டு. ஆனால் படத்தை பார்த்ததில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று தான் படத்தை பார்க்க நேர்ந்தது. அது என்ன நண்டு? தலைப்பே ஆச்சர்யம் அளித்தது...!

சாவின் தவிர்க்க முடியாத இருப்பை, ஊசி போல சொருகி சொன்ன படம். எழுத்தாளர் சிவசங்கரியில் நாவலை படமாக எடுத்திருக்கிறார் நம் இயக்குனர் மகேந்திரன்.

வாழ்க்கையை யதார்த்தமாக பதிவு செய்த வெகு சில படங்களில் இந்த படமும் ஒன்று!

இத்திரைப்படத்தில் சுரேஷ், அஸ்வினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

படத்தோட கதை என்னனா ...

கதை லக்னோவில் தொடங்குகிறது. பெரிய இடத்து பையன் ராம். பொறுப்பற்ற அப்பா... குடும்பத்தில் மற்றவர்கள் அன்பான்வர்கள்.. பையன் ஆஸ்த்மா நோயாளி... அப்பாவின் டார்ச்சர் பொறுக்க முடியாமல், அங்கிருந்து கிளம்பி சென்னையில் வேலை கிடைத்து வந்து விடுகிறான்.

அங்கே ஓர் ஒண்டு குடித்தனத்தில் புரோக்கர் குமரிமுத்து சேர்த்து விடுகிறார். சென்னை ஆஃபிசில் வேலை செய்யும் சக ஊழியர் சீதாவும் அதே வீட்டில்தான் தன் குடும்பத்துடன் வசிக்கிறார் என்பது தெரிந்து மகிழ்கிறான் ராம்.

ராமை விரும்பும் வீட்டு ஓனர் மகள் மற்றும் சீதா இடையே சீதா ஜெயிகிறாள். கல்யாணம் செய்யபோகும் போது... சீதாவின் அக்கா வீட்டுகாரர் வில்லனாக வர, அதையும் மீறி திருமணம் நடந்து, குழந்தை பிறந்து, மாமனார்-மாமியாரை காணும் கனவுடன் ராமுடன் லக்னோ வருகிறாள் சீதா. வந்த இடத்தில் மாமனாரை தவிர மற்றவர் அன்பாக பழக... அங்கிருந்து புறப்பட்டு சென்னை வரும் வழியில் ஆஸ்துமா தொல்லையால் மிகவும் அவதிபடுகிறான் ராம்.

அதன் பிறகு அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன..? சீதா தனது கணவர் குடுப்பத்தோடு இணைந்தாளா என்பது தான் மீதி கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

இயக்குனர் மகேந்திரன்

சிதாவின் அம்மா, சீதா அக்கா, அவள் கணவன், வீட்டு ஓனர், LIC ஏஜண்ட் வெண்ணிற ஆடை மூர்த்தி, வீட்டு ஓனர் மகள், அங்கு இருக்கும் மற்ற பெண்கள், சீதாவின் தோழி, அவள் தகப்பன், என பிரதான கேரக்டர்களும் அவர்கள் குணாதிசயங்களும் ( ராமின் குடும்பம் உட்பட ), வெறும் பத்து நிமிடங்களில் நமக்கு அறிமுகமாகி விடுகின்றன என்பதில்தான் மகேந்த்ரன் நிற்கிறார்.

குளிக்க தண்ணீர் கிடைப்பதில் பிரச்சனை என்பதும் ஒரு பிரச்சனைதான்... ஆனால் அங்கும்கூட யாராவது உதவக்கூடும்... அந்த நேரத்தில் அது பேருதவி...

ஓர் ஆணுடன் பேசினால், புரணி பேசுபவர்கள் இருந்தால், ஆதரவு கொடுப்போரும் எங்காவது இருப்பார்கள்... திருமணத்தை பேசி முடிக்கும் நல்லிதயங்கள் தொலைவில் இருந்து வரக்கூடும்... அதைக்கெடுக்கும் சதிகாரர்கள் கூடவே இருக்கக்கூடும்...

வந்த மருமகளை வாயார வரவேற்கும் மாமியாரும், துரத்தும் மாமனாரும் ஒரே இடத்தில் இருக்கக்கூடும்... இப்படி சீதாவின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் வெகு இயல்பாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

வட இந்திய காட்சி வசனங்களை எப்படி கையாண்டார்கள் என்பது இன்னொரு சுவாரஸ்யம்... கதாபாத்திரங்கள் ஹிந்தியில் பேசுவார்கள்..ஆனால் குரல் தமிழில் ஒலிக்கும்..அதாவது நமக்கும் புரிந்து விடும்..அவர்கள் எப்படி தமிழ் பேசுகிறார்கள் என்ற கேள்வியும் வராது..


கதைக்கு உயிர்கொடுத்தவர்கள்

செந்தாமரை, வெண்ணிற ஆடை மூர்த்தி, வனிதா , குமரிமுத்து , வீட்டுஓனர், ரிக்‌ஷா ஓட்டுப்வர் என ஒவ்வொரு கேரக்டரும் செதுக்கப்பட்டுள்ளது... தேவை இன்றி ஒரு காட்சியும் இல்லை... ஒரு கேரக்டரும் இல்லை

கதானாயகன் சுரேஷ்.... நாயகி அஸ்வினி... இருவரும் செம க்யூட்டாக நடித்து இருக்கிறார்கள்.

இளையராஜா

ராஜா சார் சும்மா இசை ராஜாங்கம் நடத்தி இருப்பார் இந்த படத்தில். பின்னணி இசை இந்த படத்துக்கு மிகப்பெரிய பலம். இளையராஜாவின் இசை பல இடங்களில் மனதை வருடுகிறது. எனக்கு பிடித்த பாடல்கள் இதோ ....

அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா....

பிறகு,

மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே
மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே....

இந்த படத்தில் இரண்டு முழு நீள ஹிந்தி பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ் படத்தில் ஹிந்தி பாடல்கள். ஒரு புதிய முயற்சியை அப்போதே செய்து அசத்தியிருக்கார் இயக்குனர்.


பிரச்சனைகள் என்றும் ஓயப்போவதில்லை... ஆனால் வாழ்க்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்பதே படத்தின் மெசேஜ்!

கோழி இடும் முட்டைகள் : 4 / 5
மொத்தத்தில் 'நண்டு' - இனிய பாடல்கள் + நகைச்சுவை என அருமையான பொழுதுபோக்கு படம்!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Pichaikaaran.



இராமேஸ்வரம் திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்!

இராமேஸ்வரம் தல வரலாறு

ராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றான். ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணல்களால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்.எனவே ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இந்நகருக்கு "ராம ஈஸ்வரம்" என்று பெயர் ஆனது. மக்கள் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றர்.

22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்

1. மகாலெட்சுமி தீர்த்தம் : இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்கத்தில் உள்ளது. இதில் ஸனானம் செய்தால் சகல ஐஸ்வர்யமும் பெறலாம்.

2. சாவித்திரி தீர்த்தம், 3. காயத்ரி தீர்த்தம், 4. சரஸ்வதி தீர்த்தம் :
இம்மூன்று தீர்த்தங்களும் அனுமார் கோவிலுக்கு மேல்புறம் உள்ளது. இம்மூன்று தீர்த்ங்களில் ஸ்னானம் செய்வதால் மத சடங்குகளை விட்டவர் சந்ததியில்லாதவர் இஷ்ட சித்தி அடையலாம்.

5. சேது மாதவ தீர்த்தம் : இது மூன்றாம் பிரகாரத்தின் மேற்கு பகுதியில் உள்ள தெப்பக்குளம். இதில் ஸ்ரீராபிரானால் சகல லெட்சுமி விலாசமும், சித்த சக்தியும் பெறலாம்.

6. நள தீர்த்தம் : மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு தென்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் சுரிய தேஜசை அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.

7. நீல தீர்த்தம் : மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு வடபுறம் உள்ளது. இதில் நீராடுவதால் சமஸ்தயாக பலனையும் அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.

8. கவாய தீர்த்தம் : இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் சக்குசாயம், கோபம் மனைவலினம், தேக ஆரோக்கியம் கிடைக்கும்.

9. கவாட்ச தீர்த்தம் : இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் கவாய தீர்த்தத்திற்கு அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் நரகத்திற்கு செல்ல மாட்டார்கள். மன வலிமை, தேக ஆரோக்கியம், திட சரீரம் கிடைக்கும்.

10. கந்நமாதன தீர்த்தம் : சேது மாதவர் சன்னதியின் முன்பகுதியில் கவாய், கவாட்ச தீர்த்தங்களுக்கு அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் மகாதரித்திரம் நீங்கி ஐஸ்வர்ய சித்தியும் பெற்று பிரம்ம ஹத்தியாதிபாப நிவர்த்தி பெறுவர்.

11. சங்கு தீர்த்தம் : இராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் தெற்கு பக்கத்தில் இரண்டாம் பிரகாரத்தில் இதில் நீராடுவதால் செய்நன்றி மறந்த சாபம் நீங்கப் பெறும்.

12. சக்கர தீர்த்தம் : இராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் உள்ள இரண்டாம் பிரகாரத்தின் வடபுறம் உள்ள கருவூலத்தின் கீழ்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் ஊனம், குருடு, செவிடு ஆகியவை நீங்கி சௌக்கியம் அடைவர்.

13. பிரம்மாத்திர விமோசன தீர்த்தம் : இது இரண்டாம் பிரகாரம் வடக்கு பக்கத்தில் பைரவர் சன்னதி அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் பிரம்மஹத்தயாதி தோஷங்களும், பாவங்களும் நிவர்த்தியாவதடன், பில்லி சுனியமும் நீங்கும்.

14. சூர்ய தீர்த்தம் : இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் அமைந்துள்ளது. இத்திர்த்தத்தில் நீராடுவதால் திரிகாலஞானமும் உண்டாவதுடன் ரோகங்கள் நிவர்த்தியாகும்.

15. சந்திர தீர்த்தம் : இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தின் மேற்கு பக்கம் உள்ளது. இதில் நீராடுவதால் ரோக நிவர்த்தி அகலும்.

16. கங்கா தீர்த்தம் 17. யமுனா தீர்த்தம் 18. காயத்ரி தீர்த்தம் :
இம்மூன்று தீர்தத்தங்களும் திருக்கோவில் இரண்டாம் பிரகாலத்தில் அமைந்தள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் உள்ள சூரியன், சந்திரன் தீர்த்தத்திற்கு எதிரில் அமைந்துள்ளது. இவைகளில் நீராடுவதனால் பிணி, மூப்பு, சாக்காடு ஆகியவைகளும் அஞ்ஞானமும் நீங்கி முக்தி அடையலாம்.

19. சாத்யாம்ருத தீர்த்தம் : திருக்கோவில் அம்பாள் சன்னதியின் மூலஸ்தான நுழைவாயிலின் அருகே உள்ள அஷ்டலட்சுமி சன்னதியின் தெற்கு பக்கம் உள்ளது. இதில் நிராடினால் தேவதாகோபம் பிராம்மணசாபம் நிவர்த்தியாவதுடன், சூரியமூர்த்தி, மோட்ச பிராப்தி ஆகியவை கிடைக்கும்.

20. சிவ தீர்த்தம் : இந்த தீர்த்தம் சுவாமி சன்னதி நுழைவாயில் மற்றும் அம்மன் சன்னதி நுழைவாயில் ஆகியவற்றுக்கு இடையே நந்தி தேவருக்கு தென்புறம் அமைந்துள்ளது. இதில் ஸ்னானம் நீராடினால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

21. சர்வ தீர்த்தம் : இந்த தீர்த்தம் முதல் பிரகாரத்தில் இராமநாதசுவாமி சன்னத முன் உள்ளது. இதில் நிராடினால் பிறவிக்குருடு, நோயம் நரை திரையும் நீங்கி வளமடையலாம். கோவிலுக்கு வெளியே பல தீர்த்தங்கள். இவை புயலாலும், ஆக்கிரமிப்பாலும் பாதிக்கப்பட்டதால் இவற்றில் நீராட இயலாது.

22. கோடி தீர்த்தம் : இந்த தீர்த்தமானது இராமர் லிங்கப் பிரதிஷஙடை செய்தபோது அபிஷேகத்திற்கு நீர் தேவைப்பட்டது. அதனால் ராமநானவர் தன் அம்பின் நுனியை பூமியில் வைத்து அழுத்தினதால் அந்த இடத்தில் பூமியைப் பிளந்து கொண்டு நீர் வந்தது. அதுவே கோடி தீர்த்தம் எனப்படுகிறது. இந்நீரானது இராமநாதசுவாமி மற்றும் எல்லா சுவாமி அம்பாள் ஆகியவர்கள் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படவதால் பக்தர்கள் இத்தீர்த்தத்தில் நேரடியாக தாங்களே தீர்தத்தை எடுத்து குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு கட்டணம் உண்டு. பக்தர்கள் இத்திர்த்தத்தில் நீராட இரண்டாம் பிரகாரம் வடபகுதியில் உள்ள பைரவர் சன்னதி முன்புறம் உள்ள கோமுக் மூலம் தீர்த்தத்தை விடுவார்கள், அதன் மூலம் நீராடலாம்.

கோடி திர்த்தத்தில் நிராடியபின் இவ்வூரில் இரவு தங்கலாகாது என்பது சம்பிரதாயம்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். மேலும் ஒரு like ஒரு comment போடுங்கள். நன்றி!!!
Thanks : MoreTamil & Wikipedia



Related Posts with Thumbnails
 
back to top