Showing posts with label சூது கவ்வும். Show all posts
Showing posts with label சூது கவ்வும். Show all posts

சூது கவ்வும் (2013) - விமர்சனம்

"பீட்ஸா", "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" படங்களை தொடர்ந்து வித்தியாசமான, அதேநேரம் வெற்றிபெறும் கதையம்சம் உடைய படங்களிலேயே நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு, அடுத்து வெற்றித் தேடித்தர வெளிவந்திருக்கும் ‌மற்றுமொரு படம்தான் "சூதுகவ்வும்".

தமிழ் சினிமா பார்க்காத கதைகளாகப் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் சேதுபதிக்கும், அவரிடம் சொன்ன கதையை அப்படியே திரையில் வார்த்தெடுத்திருக்கும் புதிய இயக்குநர் நளன் குமாரசாமிக்கும் முதல் வாழ்த்துகளைச் சொல்லிவிடுவோம்.


படத்தோட கதை என்னனா ...

காதல் பிரச்சினையில் வேலை பார்க்கும் இடத்தில் கைகலப்பாகி வேலை இழந்த ஒருவன், விலையுயர்ந்த சொகுசு காரை ஓட்டவேண்டும் என்ற ஆசையில், பைவ் ஸ்டார் ஓட்டல் வேலையை தொலைத்த மற்றொருவன், நயன்தாராவுக்கு கோயில் கட்டி, பொதுமக்களிடம் தர்மஅடி வாங்கி சென்னைக்கு வரும் இன்னொருவன் ஆகிய மூவரும் ஒரே அறையில் நண்பர்களாக தங்கியிருக்கிறார்கள்.

மறுமுனையில் சிறு சிறு கடத்தல் வேலைகளை செய்து பணம் சம்பாதிக்கும் விஜய் சேதுபதி, பெரிய இடத்தில் கை வைக்கக்கூடாது, மிரட்டக்கூடாது, மாட்டிக்கொண்டால் அடிபணிந்துவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 5 விதிமுறைகளின்படி கடத்தல் வேலைகளை செய்துவருகிறார். இவருக்கு அவ்வப்போது ஐடியா சொல்பவராக, ‘மாமா மாமா’ என்று ஒரு நிழல் உருவமாக வலம் வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.

வேலையை இழந்த மூன்று நண்பர்களும் ஒருநாள் பாரில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருக்கும்போது, அங்கு மது அருந்திக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கும், இன்னொரு கும்பலுக்கும் தகராறு வருகிறது. இந்த தகராறில் நண்பர்கள் கூட்டமும் தாக்கப்பட, அங்கிருந்து தப்பித்து விஜய் சேதுபதியிடம் சேர்ந்து வெளியேறுகிறார்கள்.

மூவரையும் தன்னுடைய இடத்துக்கு அழைத்துச் செல்லும் விஜய் சேதுபதி, தன்னுடைய கடத்தல் வேலைகளுக்கு அவர்களை பயன்படுத்த முடிவெடுக்கிறார். இதற்கு நண்பர்களில் இரண்டு பேர் சம்மதிக்க ஒருவன் மட்டும் பின்வாங்குகிறான். பின்னர் அவனும் வந்து இணைகிறான். மூவரும் இணைந்து சின்ன சின்ன கடத்தல் வேலைகளை செய்து பணம் சம்பாதித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நேர்மையான அரசியல்வாதியாக வரும் எம்.எஸ்.பாஸ்கரால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர் ஒருவர், எம்.எஸ்.பாஸ்கரின் மகனை கடத்தி அந்த பழியை தீர்த்துக் கொள்ள நினைக்கிறார். இந்த கடத்தல் வேலைக்கு விஜய் சேதுபதி கும்பலை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார். முதலில் மறுக்கும் விஜய் சேதுபதி, பின்பு ஒத்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.

இதன்படி, ஒருநாள் அரசியல்வாதியின் மகனை கடத்த திட்டமிடுகிறார்கள். ஆனால், இவர்களுக்கு முன்னதாக வேறொரு கும்பல் அவனை கடத்திச் சென்றுவிடுகிறது. அவர்கள் செல்லும் இடத்தை அறிந்துகொள்ளும் விஜய் சேதுபதி கும்பல், மறுநாள் போலீஸ் உடை அணிந்து அங்கு சென்று பார்க்கின்றனர்.

அங்கு மயக்க நிலையில் தனியாக இருக்கும் அரசியல்வாதியின் மகனை தூக்கிக் கொண்டு வருகின்றனர். அவனை கடத்தியதும் அரசியல்வாதிக்கு போன் போட்டு மகனை கடத்திவிட்டதாகவும், விடவேண்டுமென்றால் 2 கோடி ரூபாய் பணம் தரவேண்டும் என்றும் மிரட்டுகிறார்கள். ஆனால், இதற்கு அடிபணியாத அரசியல்வாதி போலீஸ் உதவியை நாடுகிறார்.

இதனால் பயந்துபோன விஜய் சேதுபதி கும்பல், அவனை விட்டுவிட துணிகிறது. ஆனால், அரசியல்வாதியின் மகனோ, தன்னுடைய அப்பா மூலம் பணம் கேட்டால் கிடைக்காது. தன்னுடைய யோசனையின்படி செய்தால் பணம் கிடைக்கும். கிடைக்கும் பணத்தில் ஆளுக்கு பாதி எடுத்துக் கொள்ளலாம் என்ற நிபந்தனையின்படி பணத்தை வாங்க ஐடியா கூறுகிறான்.

அதற்கு விஜய் சேதுபதியும் ஒத்துக்கொள்கிறார். அரசியல்வாதியின் மகன் ஐடியாப்படி பணத்தையும் வாங்கி விடுகின்றனர். இறுதியில் பங்கு பிரிக்கும்போது பிரச்சினை வர, விஜய் சேதுபதி கும்பலை விபத்தில் சிக்கவைத்து அங்கிருந்து பணத்துடன் தப்பிவிடுகிறான் அரசியல்வாதியின் மகன்.

இதற்கிடையில் தன்னுடைய மகனை கடத்திய கடத்தல் கும்பலை பிடிக்க ஒரு சைகோ போலீஸ்காரரை நியமிக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். இறுதியில், பணத்தோடு ஓடிச்சென்ற அரசியல்வாதியின் மகனிடமிருந்து விஜய் சேதுபதி கும்பல் பணத்தை வாங்கினார்களா? இந்த கடத்தல் கும்பல் போலீஸிடம் சிக்கினார்களா? என்பதே மீதிக்கதை.


படத்துல எனக்கு பிடித்த சில ....

விஜய்சேதுபதி
அடர்ந்த தாடி, லேசாக நரைத்த முடி என 40 வயது மதிக்கத்தக்க வயதான தோற்றத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய்சேதுபதி. இவர், இதுவரை நடித்த படங்களில் நாயகியை கட்டிப் பிடித்து நடிப்பது போன்ற காட்சி இல்லாத குறையை இந்த படத்தின் மூலம் நிவர்த்தி செய்து கொண்டார் போலும்.

படத்தின் முதல் பாதி முழுவதும் அரைகுறை உடையுடன் நாயகியை மடியில் தூக்கி வைத்துக் கொண்டே சுற்றுகிறார். படத்தில் கூறும் வசனம்போல், படம் முழுக்க மனுஷன் வாழ்ந்திருக்கிறார் என்ற பொறாமையை நம்முள் ஏற்படுத்தியிருக்கிறார். படத்திற்காக கொஞ்சம் குண்டாகியிருக்கிறார்.

கடத்திவிட்டு பணம் பெறுவதற்காக இவர் பேசும் வசனங்கள் ரசிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல், வயிறு குலுங்க சிரிக்கவும் வைக்கிறது.

யோக் ஜெப்பி
சைகோ போலீஸ் பிரம்மாவாக வரும் யோக் ஜெப்பி படத்தில் பேசாமலேயே மிரட்டுகிறார். எந்த ஒரு செயலுக்கும் முகபாவனையிலேயே தனது முடிவை சொல்லிவிடும் இவரை, கடைசியில் சிரிப்பு போலீசாக மாற்றியதுதான் ஏமாற்றம்.

ராதா & ராதாரவி
முதலமைச்சராக வரும் ராதாரவி, அமைச்சரின் மனைவியாக வரும் ராதா என அனைவரும் தங்கள் நடிப்பை திறம்பட செய்திருக்கிறார்கள்.

ஹீரோயின் சஞ்சிதா ஷெட்டி
அழகாக இருக்கிறார். ‘மாமா மாமா’ என்று விஜய் சேதுபதியுடனேயே வலம்வந்து நம்மையும் வசீகரிக்கிறார்.

எம்.எஸ்.பாஸ்கர்
நேர்மையான அரசியல்வாதியாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், வெள்ளைச்சட்டை, தோளில் துண்டு, மிடுக்கான தோற்றம், மிரட்டும் தொணியில் பார்வை என நடிப்பில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

கருணாகரன்
எம்.எஸ்.பாஸ்கர் மகனாக நடித்திருக்கும் கருணாகரனின் திருட்டு முழிப் பார்வையும், குரூரத்தனமான இவருடைய செய்கையும் நம்மை வெகுவாக ரசிக்க வைக்கின்றன.



இயக்குனர் நலன் குமாராசாமிஒரு கடத்தல் கதையை சீரியஸாகவும், அதே நேரத்தில் காமெடியாகவும் சொல்லிய இயக்குனர் நலன் குமாராசாமிக்கு பாராட்டுக்கள்.

இந்த படத்தின் நிஜ ஹீரோவே திரைக்கதைதான். யூகிக்க முடியாத கதை, கதாபாத்திரங்கள் போக்கை எல்லா இடத்திலும் என்ஜாய் செய்யமுடியும் என்பதை திரைக்கதை மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

அதேபோல், படத்தில் கேரக்டருக்கு தகுந்தாற்போல் அவர்களது பெயரையும் தேர்வு செய்திருப்பது இயக்குனரின் திறமையை காட்டுகிறது. படத்திற்கு மிகப்பெரிய பலமே வசனங்கள்தான். விஜய் சேதுபதியின் 5 விதிமுறைகள், கடத்திய பிறகு பெற்றோரிடம் பணத்தை பெறுவதற்காக பேசும் வசனங்கள் எல்லாம் ரசிக்கவைக்க கூடியவை.

மேலும், ‘கடத்தல் வேலைக்கு குருட்டுத்தனமான முட்டாள் தனம் வேண்டும், முரட்டுத்தனமான புத்திசாலித்தனம் வேண்டும்’ என்பது போன்ற அறிவார்த்தமான வசனங்களும் ஆங்காங்கே பளிச்சிடுகின்றன.

இசை சந்தோஷ் நாராயணன்
படத்திற்கு மற்றொரு பெரிய பலம் சந்தோஷ் நாராயணனின் இசை. பாடல்களும், பிண்ணனி இசையும் படத்தை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. அந்த அளவுக்கு கலகலப்பூட்டும் இசை. ‘காசு துட்டு மணி மணி’ கவர்கிறது.

ஒளிப்பதிவாளர் தினேஷும் தனது பணியை செவ்வனே செய்திருக்கிறார்.

கோழி இடும் முட்டைகள் : 3.5 / 5
சூது கவ்வும் - நிச்சயம் வெல்லும். லாஜிக் பார்க்காமல் சிரித்து விட்டு வரலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



சூது கவ்வும் (2013) - பாடல் விமர்சனம்

திருக்குமரன் எண்டர்டைன்மெண்ட்ஸ்நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் 'சூது கவ்வும்'.

தென்மேற்கு பருவக்காற்று, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்களின் மூலம் வெற்றியை குவித்த விஜய் சேதுபதியின் அடுத்த படம் சூது கவ்வும். இவருக்கு ஜோடியாக சஞ்சிதா செட்டி நடிக்க படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தினை நலன் குமாரசாமி இயக்கி இருக்கிறார். நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் நலன் குமாரசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தை நலன் குமாரசுவாமி இயக்க, ஞானவேல் ராஜா வெளியிடுகிறார். வெளியாகியிருக்கும் டீசர், படத்தை பார்க்கத் தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது. வித்தியாசமான நடிப்பு இல்லா விட்டாலும் தனக்கேற்ற திரைக்கதையை தேர்வு செய்து வெற்றி காண்பது விஜய் சேதுபதி தாரக மந்திரமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.



படத்தில் நாற்பது வயது நாயகனாக விஜய் சேதுபதி, இளமை நாயகி சஞ்சிதா ஷெட்டியுடன் இணைந்து நடித்துள்ளார். விறுவிறுப்பான கதையோட்டத்தில் சிம்ஹா, அசோக், ரமேஷ், நெல்லை சிவா, தமிழ் சினிமாவின் சீனியர் நடிகர் ராதாரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இசையமைப்பாளர் சந்தோஸ் நாராயணின் ஆர்ப்பாட்டமான இசையில் "மாமா டவுசுறு...", "காசு பணம் துட்டு மணி..." போன்ற கருத்தாழமிக்க பாடல்களை கணேஷ், முத்தமிழ், கானா பாலா ஆகியோர் எழுதியுள்ளார்கள்.

ஒவ்வொரு பாடலும் பல காலங்களைக்கடந்து நம்மை வேறு ஒரு உலகிற்குக் கூட்டிச்செல்கிறது. போலித்தனமான சமாளிப்புகள் ஏதுமின்றி அந்த அந்தக்காலங்களில் உபயோகித்த இசைக்கருவிகளை வைத்து செவிக்குணவு கொடுத்திருக்கிறார்.

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.


சரி சரி படத்த பத்தி சொன்னது போதும்... கொஞ்சம் பாடலை பற்றி பார்ப்போம் வாருங்கள்...

01. கம் நா கம் கம்னாட்டி கோ...

சின்னா கணேஷ் குமார் குரல்களில் "வயலும் வாழ்வும்" நிகழ்ச்சியுடன் ஆரம்பிக்கும் இந்தப்பாடல் ஒரு ராப் இசை. விஜயகாந்தின் 'ம்ம்ம்... ஆத்த வரட்டா..' டயலாக் சொருகிய இடம் அருமை. அதிரவைக்கும் இசையில்லாது மைல்டாக அடுக்கடுக்காக ராப் பாடலுக்கேயுரித்தான அளவில் வார்த்தைகளை இடையிடையே அடுக்கி வைத்து ரஹ்மானின் பழைய "பேட்டை ராப்" பை ஞாபகப்படுத்துகிறது.

02. மாமா டவுஸர் கழண்டுச்சு...

ஆண்ட்ரியா பின்னி பெடலேடுத்த பாடல். "மன்மதன் அம்பு"வில் அமைந்த ஒரு பாடல் 'Whos the Hero?' பாடல் வகையை சேர்ந்தது. பாட்ட கேட்கும்போதே ஆடனும் போல இருக்கு.

03. எல்லாம் கடந்து போகுமடா...

கோவை ஜலீல்-ன் குரல் Period Film Music ன் Feel கொண்டு வருவதில் பெரு வெற்றி பெற்றிருக்கிறது. எம்ஜியார் மன்னாதி மன்னனில் "அச்சம் என்பது மடமையடா..." என்று குதிரையில் சென்றுகொண்டே பாடிக்கொண்டு செல்வது போல அமைந்திருக்கிறது. தனியாக ஒரு தபேலாவும் , கொஞ்சம் வயலினுமாக நம்மை அந்த 50-60 காலங்களுக்கு வெகு எளிதாகக் கூட்டிச்செல்கிறது.

04. தீம் மியூசிக்(Sudden Delight)...

இந்த தீம் மியூசிக், ஜேம்ஸ் பாண்ட்-ன் வழக்கமான நம் காதுகளுக்கு புளித்துப்போன பின்னணி இசையின் பாங்கில் அமைத்திருப்பது ரசிக்கும்படியில்லை. புதிதாக ஏதாவது செய்திருக்கலாம்.

05. நான் இமை ஆகிறேன்...

அருமையான வயலின் இழைத்து இழைத்து ஆரம்பிக்கிறது. தாளமேயில்லாது வெறும் வயலினும் பின்னால் கூடவே வந்து கட்டிப்போடுகிறது கேட்பவரை. ஒரு Christmas Carol கேட்ட பீலிங் வருவது இயற்கை. பல இழைகளாக வெவ்வேறு தளங்களில் ஒலிக்கும் வயலின் இழைகள் மனதை உறிஞ்சிக்கொண்டு செல்கிறது. "திவ்யா ரமணி" உணர்ந்து பாடியிருக்கிறார்.

06. காசு பணம் துட்டு Money Money...

கானா பாலா & அந்தோனி தாசன் குரல்களில் Mild Rap ஆக ஒலிக்கிறது இந்த காசு பணம் துட்டு Money Money. நன்கு வெறும் கையால் தாளம் போட்டுக் கொண்டே ரசிக்கலாம் இந்தப்பாடலை. பின்னால் ஒலிக்கும் போலீஸ் சைரன் அவ்வப்போது வந்து போய் அல்ர்ட் செய்துவிட்டுப்போகிறது. மிகவும் எளிமையாக Bathroom Singers-க்காகவே இசைத்திருக்கிறார் சந்தோஷ்.


சூது கவ்வும் பாடல்கள் ரொம்ப ஃப்ரெஸ்ஸாகவும் உற்சாகம் கொடுப்பதாகவும் இருக்கிறது. நேத்து நைட் தான் டவுன்லோட் செஞ்சிக்கேட்டேன் "கம் நா கம் கம்னாட்டி கோ" தான் ரொம்ப பிடிச்சிருக்கு "காசு பணம் ..." பாட்டும் காலையிலிருந்து ரிப்பிட்டில் ஓடிக்கிட்டு இருக்கு. "ஓ மாமா டவுசர் கழண்டுச்சு..." நல்லாயிருக்கு. ஏற்கனவே ட்ரைலர் பார்த்ததும் படம் பார்க்கனும் என்று முடிவு செஞ்சாச்சு...இந்த பாடல்கள் வேற இன்னும் எதிர்பார்ப்பை ஏத்தி விடுது...

கோழி இடும் முட்டைகள் : 3.0 / 5
மொத்தத்தில் சூது கவ்வும் பாடல்கள் மிக அருமை. புதிய முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

பாடல்கள் தரவிறக்கம் (Download) செய்ய தொடுக.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Special Thanks to Chinnappayal blog.



வெற்றிப்பட நாயகன் - விஜய் சேதுபதி

வெற்றிப்பட நாயகன்

2012-ல் சத்தமில்லாமல் நுழைந்து வெற்றிப்படங்களில் நடித்து தனது பெயரை ஆணித்தரமாக பதிய வைத்த நாயகன் விஜய் சேதுபதி. அது என்னவோ விஜய் என்று பெயர் வைத்தாலே ஜெயம் தான் போல.

விஜய் சேதுபதி, பல நல்ல நல்ல கதையம்சம் கொண்ட குறும்படங்களில் நடித்தவர். இவர் நடித்த குறும்படங்களில் சில துரு, பெட்டி கேஸ் ஆகியவை. இந்த நடிப்பும் இவருக்கு நல்ல அடித்தளத்தை உருவாகியது.

அறிமுகம்

தேசிய விருது பெற்ற தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நாயகனாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி.



கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்று நடிகனாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். முதல் படத்தில் நாயகன், பின்பு ஒரு சாதாரண கதாப்பாத்திரத்தில் நடித்தார், அடுத்த படத்தில் வில்லன் மீண்டும் இரண்டு படங்களில் நாயகன் என்று வித்தியாசத்தை காட்டும் நடிகன்.


2012ல் வெளிவந்த சுந்தரபாண்டியன், பிட்சா, நடவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய படங்களில் நடித்து படமும் வெற்றி பெற்றதால் குறைந்த பட்ஜெட்டில் படமெடுப்பவர்களை கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைத்துள்ளார் விஜய் சேதுபதியின். மேலும் இந்த வெற்றிகள் புதுமுக இயக்குனர்களையும் ஊக்கப்படுதியிருக்கிறது. அதன் பலனாக கை மேல் படங்கள்.



இதையடுத்து 2013ல் கைவசம் உள்ள படங்கள் புதுமுக இயக்குனர் நளன் இயக்கத்தில் "சூது கவ்வும்", புதுமுக இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் "பண்ணையாரும் பத்மினியும்" மற்றும் புதுமுக இயக்குனர் கே.பாலகிருஷ்ணன் இயக்கத்தில் "ரம்மி".

பண்ணையாரும் பத்மினியும்

மேஜிக்பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர். கணேஷ் தயாரிக்கும் படம் பண்ணை யாரும் பத்மினியும். இதில் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். ஜெயப்பிரகாஷ் மற்றும் முன்னணி நடிகர், நடிகைகள் பலர் நடிக்கின்றனர்.

நாயகி தேர்வு நடக்கிறது. இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி எஸ்.டி. அருண்குமார் இயக்குகிறார். இவர் நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். யதார்த்தமான கிராமத்து கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது.

பண்ணையார் ஒருவர் கார் வாங்குகிறார். ஆனால் அவருக்கு அதை ஓட்ட தெரியாது. எனவே டிராக்டர் ஓட்டும் முருகேசனை அழைத்து டிரைவராக வைத்துக் கொள்கிறார். அவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களே கதை. காமெடி, படமாக தயாராகிறது.

சென்டிமென்ட் இருக்கும். இந்த படத்தில் பத்மினி கார் ஒன்று முக்கிய கேரக்டரில் வருகிறது. இவ்வகை கார்களை வைத்து ஊர்வலம் நடத்துவது வழக்கம். இந்த படம் வந்த பிறகு பத்மினி கார் வைத்திருப்பவர்கள் பேசப்படுவர்.

இசை: ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு: கோகுல் பெனாஸ். எடிட்டிங்: ஸ்ரீகர் பிரசாத்.


ரம்மி

ரம்மி தமிழ்தானா? இந்தப் படத்தை முந்தையப் படங்களைப் போலவே அறிமுக இயக்குனர் ஒருவர்தான் இயக்குகிறார். பெயர் பாலகிருஷ்ணன் கே. முந்தையப் படங்களுக்கு மாறாக இதுவொரு கிராமத்து சப்ஜெக்ட். பிரேம்குமார் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

விமல் களவாணி என்ற ஒரே படத்தில் உச்சாணிக்கு சென்றது போல் சேதுபதியின் கேரியர் அவ்வளவாக சூடு பிடிக்கவில்லை. அவரது பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்கள் ஸ்கிரிப்ட் ஓரியண்ட் என்பதால் இருக்கலாம்.

ரம்மியும் ஸ்கிரிப்டுக்கு முக்கியத்துவம் தந்து உருவாக்கப்படுகிறது. டி.இமான் இசையமைக்கிறார்.

வெற்றி மீது வெற்றி குவிந்து வரும் விஜய் சேதுபதிக்கு 2013ம் வருடம் ஒரு வெற்றி வருடமாக அமைய வாழ்த்துக்கள்!.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



Related Posts with Thumbnails
 
back to top