Showing posts with label குட்டிக்கதை. Show all posts
Showing posts with label குட்டிக்கதை. Show all posts

ஜென் கதை: பிரார்த்தனையின் வழி


எப்படி பிரார்த்திக்கிறோம் என்பது முக்கியமில்லை. இறைவனை பிரார்த்திக்க வேண்டும் அவ்வளவே. இதை உணர்த்தும் ஒரு ஆன்மிக கதையை பார்க்கலாம்.


சமய நூல்களையும், சூத்திரங்களையும் திறம்பட கற்ற மகா குரு ஒருவர் இருந்தார். அவர் இறைவனை வழிபடும் போது இந்த முறையில், இந்த வழியில்தான் பிரார்த்திக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டைக் கொண்டவர். அவர் கூறும் தத்துவங்களையும், அறிவுரைகளையும் கேட்டு மக்கள் பலரும் மெய்மறந்து போவார்கள்.

ஒரு முறை அந்த மகா குரு கப்பல் பயணம் மேற்கொண்டார். கப்பல் பயணம் தொடங்கிய சில நாட்களிலேயே, பலர் அவரது சீடர்களாக மாறிவிட்டனர். ஒரு நாள் அதிகாலை நேரம் மகா குரு கப்பலில் நின்று கடலின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது கண்ணில் மணல் திட்டு ஒன்று தென்பட்டது. உடனடியாக கப்பல் மாலுமியை அழைத்து, ‘அது என்ன மணல் திட்டு?’ என்று கேட்டார்.

‘ஆத ஒரு சிறிய தீவு. கடலில் மூழ்கிய ஒரு மலையில் சிறு பகுதி’ என்றான் கப்பல் மாலுமி.

உடனே மகாகுரு, ‘அந்த இடத்தில் யாராவது இருக் கிறார்களா?’ என்றார்.

மாலுமி, ‘அங்கு மக்கள் யாரும் வசிக்கவில்லை. யாரோ மூன்று துறவிகள் இருப்பதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கு ஓரிரு இலந்தை மரங்கள்தான் இருக்கின்றன. இவர்கள் எப்படித்தான் அங்கு வசிக்கிறார்களோ?’ என்றான்.

அவனது வார்த்தையைக் கேட்ட மகாகுரு, ‘என்ன துறவிகளா?’ என்று வியந்தபடி, அந்த பகுதிக்கு கப் பலைச் செலுத்தும்படி உத்தரவிட்டார்.

அவர் சொல்படியே, கப்பல் அந்த மணல் திட்டின் அருகில் போய் நின்றது. கப்பலை விட்டு இறங்கிய மகா குரு, ‘நான் அந்த துறவிகளைக் காண வேண்டும். அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்று அறிய வேண்டும். அவர்கள் பண்டிதர்களாக இருந்தால், அவர்களுடன் வாதிட்டு, புத்தரை வழி படும்படி செய்துவிட்டு திரும்புவேன். பாமரர்களாக இருந்தால் என்னுடைய கருத்துக்களை போதிப்பேன். மாலைக்குள் நான் இந்தக் கப்பலுக்கு வந்துவிடுவேன்’ என்று கூறிவிட்டு மணல் திட்டில் இறங்கி காட்டிற்குள் நடக்கத் தொடங்கினார்.

கொஞ்ச தூரத்தில் ஒரு குடில் இருந்தது. அதில் மூவர் இருந்தனர். அவர்கள் அனைவரும் வயோதிகர்களாக இருந்தனர். சாதாரண உடையால் அவர்களின் தோற்றம் பிச்சைக்காரர்களைப் போல் காணப்பட்டது.

மகா குருவின் தோற்றத்தைப் பார்த்ததும் மூவரும் வணக்கம் தெரிவித்தனர். குருவும் பதில் வணக்கம் கூறிவிட்டு, ‘நீங்கள் மூவரும் துறவிகளா?’ என்றார்.

‘இல்லை ஐயா..’ என்றார் அவர்களில் ஒருவர். ‘துறப்பதற்கு எங்களிடம் என்ன இருக்கிறது? நாங்கள் எதைத் துறப்பது? எதனிடம் இருந்து துறப்பது?’ என்றார் மற்றொருவர்.

இப்போது குரு, ‘நீங்கள் எந்த மதம்?’ என்றார்.

அவர்களுக்கு ஒரே குழப்பம், ‘மதமா..? அப்படியென்றால்..?’

‘நீங்கள் யாரை வழிபடுகிறீர்கள்?’ என்று கேட்டார் குரு.

மூவருக்கும் மீண்டும் குழப்பம் ‘வழிபாடா?’ என்ற படி ‘நீங்கள் யாரை வழிபடுகிறீர்கள்?’ என்று கேட்டனர்.

மகா குரு, ‘நான் புத்தரை வழிபடுபவன்’

‘ஓ.. புத்தரா? அவர் வணக்கத்திற்கு உரியவர்தான். நாங்களும் அவரை வணங்குவோம்’ என்றனர்.

‘எப்படி வணங்குவீர்கள்?. உங்கள் வழிபாட்டு முறை என்ன?’ என்றார் மகா குரு.

‘வழிபாட்டு முறை.. வழிபாட்டு நேரம் என்றெல்லாம் எதுவும் கிடையாது. எப்போது தோன்றுகிறதோ அப்போது மனதிற்குள், ‘பூமியை படைத்தவனுக்கு வணக்கம். புத்தருக்கு வணக்கம். புத்தருக்கு முன்னும், பின்னும் உலகின் துயரங்களுக்கு விரிவு காண முயன்ற அனைவருக்கும் வணக்கம்’ என்று பிரார்த்திப்போம். அவ்வளவுதான்’ என்றனர் மூவரும்.

குருவிற்கு சிரிப்புதான் வந்தது. ‘இது சரியான முறை அல்ல.. எல்லாவற்றுக்கும் ஒரு முறை இருக்கிறது. நியதி இருக்கிறது. அதுபோலத்தான் வழிபட வேண்டும். அதை நான் உங்களுக்குச் சொல்லித்தருகிறேன்’ என்று கூறியவர், அவர்களுக்கு ஸ்தோத்திரங்கள், பாடல்கள், சூத்திரங்கள் அனைத்தையும் கற்றுக்கொடுத்தார். சொல்லிக்கொடுத்ததை அவர்களிடம் ஒப்புவிக்க கூறினார். அவர்கள் திணறினர். மீண்டும் மீண்டும் சொல்லிக்கொடுத்தார். ஓரளவு புரிந்து கொண்டதுபோல் தெரிந்தது குருவிற்கு. அதற்குள் மாலை நேரம் வந்து விட்டதால் குரு, மூவரிடமும் விடைபெற்றுக் கொண்டு கப்பலுக்குத் திரும்பினார்.

கப்பல் புறப்படத் தயாராக இருந்த நேரத்தில், தீவில் இருந்த மூவரும் ஓடிவந்தனர். அவர்கள் குருவிடம், ‘எங்களை மன்னிச்சிடுங்க. நீங்க சொன்னது எல்லாம் மறந்து போச்சு.. இன்னொரு தடவை சொல்லிக் கொடுங்க’ என்றனர்.

மகா குருவிற்கு இப்போதுதான் அனைத்தும் விளங்கியது.

‘நீங்கள்தான் என்னை மன்னிக்க வேண்டும். உங்களின் வழிபாடு எதுவோ, அதையே செய்யுங்கள். ஏனெனில் அதைத்தான் புத்தர் விரும்புகிறார். அதில் எளிமை உள்ளது. அவர் நேசிப்பது அந்த எளிமையைத்தான்’ என்றார்.

எப்படி பிரார்த்திக்கிறோம் என்பது முக்கியமில்லை. இறைவனை பிரார்த்திக்க வேண்டும் அவ்வளவே.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image



ரஜினி சொன்ன குட்டி கதை - 05


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் செல்லும் பொது மேடைகளில் குட்டி கதைகளை சொல்வதுண்டு. அவ்வாறு சொன்ன குட்டிகதைகளின் தொகுப்பே இந்த பதிவு.

ஒருவருக்கு ஒரு தடவைக்கு மேல் உதவி செய்யாதே!

ஒரு ஊரில் இரண்டு பேர் தவம் இருந்தார்கள்.

அவர்கள் கனவில் கடவுள் தோன்றி, “நான் சொல்லும் இடத்துக்குப் போ. அங்கே ஒரு குரு இருப்பார். நீங்கள் கேட்டதை கொடுப்பார்” என்றார்.

அதன்படி அவர்கள் இரண்டு பேரும் அந்த குருவை சந்திச்சாங்க. “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று குரு கேட்டார். ஒருத்தன் சொன்னான், ‘எனக்கு பணம், பெயர், புகழ், பட்டம், பதவி வேண்டும்’னு. ‘எடுத்துக்கொள்” என்று குரு சொன்னார்.

இன்னொருத்தன், ‘எனக்கு நிம்மதி மட்டும் போதும்’ என்றான். ‘எடுத்துக்கொள்’ என்றார் குரு.

5 வருடங்கள் கழித்து அந்த குரு, பணம் கேட்ட சிஷ்யனைச் சந்திச்சார். ‘எனக்கு பணம் வந்தது. ஆனால் நிம்மதி இல்லை’ன்னு சொன்னான்.

நிம்மதி வேணும்னு கேட்டவன்கிட்ட போனார் குரு. அவனோ, ‘எனக்கு நிம்மதி இருக்கு. சந்தோஷம் இல்லை’ன்னு சொன்னான்.

பணம் கேட்டவனைப் பார்த்து, ‘நீ சம்பாதிச்ச பணத்தை நீயே வச்சிக்கிட்டே. அதனால்தான் நிம்மதி இல்லை”ன்னு குரு சொன்னார்.

அடுத்த 5 வருடங்கள் கழித்து அந்த குரு அவனை சந்தித்தபோது, “நீங்க சொன்னபடி நிறையபேருக்கு உதவிகள் செய்தேன். ஆனால் உதவி பெற்றவர்களே மீண்டும் மீண்டும் வந்து உதவி கேட்கிறார்களே”ன்னான்.

“ஒருவனுக்கு ஒரு தடவைக்கு மேல் உதவி செய்யாதே. புதுசு புதுசாக வருகிறவர்களுக்கு உதவி செய். அல்லது பணத்தை கொண்டு போய் ஆற்றில் போடு” ன்னு குரு சொன்னார்.

“பணம் நிறைய வந்தாலும், இஷ்டப்பட்ட தொழிலை செய்தால்தான் நிம்மதி கிடைக்கும். அதைச் செய்…”, என்று குரு அறிவுரை சொன்னார்.



கஷ்டப்படாம சம்பாதிக்க ஆசைப்பட்டா!

மதுரைக்குப் போக வேண்டிய ஒருத்தன் பாக்கெட்டில் 350 ரூபாய் வைத்திருந்தான். மதுரைக்குப் போக 300 ரூபாய் பஸ் செலவு. மீதி 50 ரூபாயை சாப்பாட்டுக்கு வைத்திருக்கிறான். ஒரு ஹோட்டலுக்கு போகிறான். ஹோட்டலுக்கு வெளியில் சாப்பாடு இலவசம். அதற்கு பணம் உங்களோடு பேரன் கொடுப்பான் என்று எழுதியிருந்தது.

ஹோட்டலுக்கு போய் கேட்கிறான். என்னங்க சாப்பாடு இலவசம்னு போட்டிருக்கீங்க, பேரன் வந்து பணம் கொடுப்பான் என்று எழுதியிருக்கீங்க. எனக்கு 4 வயது பையன் இருக்கான். நான் சாப்பிட முடியுமா என்று கேட்கிறான். சாப்பிடுங்க. உங்கள் பேரன் வந்து பணம் கொடுப்பான் என்று ஹோட்டல் முதலாளி சொல்கிறார்.

ஹோட்டல் முதலாளி சொன்ன பின்னர் சிக்கன், மட்டன் அது இதுன்னு எவ்வளவு சாப்பிட முடியுமோ ஃபுல்லா சாப்பிடுறான். சாப்பிட்டு எழுந்து கிளம்பும்போது, ஹோட்டல் முதலாளி பணம் கேட்கிறார். சாப்பிட்டவன் சொல்கிறான், என் பேரன் வந்து பணம் கொடுப்பான்.., என்று.

அது இருக்கட்டும். உங்கத் தாத்தா சாப்பிட்டத்துக்கு நீதானே பணம் கொடுக்கணும். அப்படின்னு சொல்லி பாக்கெட்ல இருந்த பணம், கையில் இருந்த வாட்ச், இடுப்பில் இருந்த வெள்ளி கயிறு உட்பட அனைத்தையும் ஹோட்டல் முதலாளி கழட்டிக்கொள்கிறார்.

இப்படித்தான் கஷ்டப்படாம நாம எதுக்காவது ஆசைப்பட்டா, நம்ம கையில் இருப்பது எந்த வழியில் போகும்னு தெரியாது. அதனால வசதியா இருக்கிறவங்க, இலவச உதவிகளை ஏமாத்தி வாங்கினா… உங்க கையில இருக்கிறது எந்த வழியில போகும்னு உங்களுக்கே தெரியாது!

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். மேலும் ஒரு like ஒரு comment போடுங்கள். நன்றி!!!



கண்ணதாசனின் குட்டிக்கதைகள்

கண்ணதாசனின் குட்டிக்கதை - குறக்குளி இழுத்தல்

சுடுகாட்டில் அந்த சடலம் கொண்டு வந்து வைக்கப்பட்டது.

சிதைக்குத் தீ மூட்டியதும், சடலம் சூடுபட்டு நரம்புகள் முறுக்கேறி, பிரேதம் எழுந்து உட்காரும். இதை, "குறக்குளி இழுத்தல்" என்பர். அப்படி பிரேதம் எழுந்ததும், வெட்டியான்கள், அந்த உடலைத் தடியால் அடித்து, மீண்டும் படுக்கையில் கிடத்துவர்.

ஒருமுறை, வட்டிக்காரனின் பிரேதம், தீ மூட்டப்பட்டது. பிரேதம் சூடு கண்டதும், குறக்குளி இழுத்து, எழுந்து உட்கார்ந்தது. உடனே வெட்டியான், "வட்டி எல்லாம் வசூலாகி விட்டது!" என்றான்.

மீண்டும் படுத்துக் கொண்டது பிரேதம், நிம்மதியுடன்!


கண்ணதாசனின் குட்டிக்கதை - மகா ஞானி

ராஜா பர்த்ரூஹரி ஒரு நாள் இரவு திடீரென்று விழித்துக் கொண்டு விட்டார். பக்கத்தில் மனைவியைக் காணவில்லை.

அரண்மனை நந்தவனத்தில் வந்து பார்த்தார் அங்கே குதிரைக்காரனோடு அவள் கூடிக் கொண்டிருந்தாள். மருநாள் ராஜா பர்த்ரூஹரி சந்நியாசியாகி விட்டார்.

மனைவியிடம் விடை பெறப் போனார்.

மனைவி சொன்னாள் "எனக்கு மிக்க மகிழ்ச்சி! ஒரு மகாராஜாவை மகா ஞானியாக்கியது நான் தானே !"

"நீயல்ல, குதிரைக் காரன்"

ராணி அலட்சியமாகப் பார்த்துவிட்டு உள்ளே போவதற்காகத் திரும்பினாள்.

"நில்..! அவனை எப்போது ஞானியாக்கப் போகிறாய் ? !"


கண்ணதாசனின் குட்டிக்கதை - விதி வலியது

ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரன் வாழ்ந்து வந்தான்.அவன் ஒவொரு வீட்டு வாசலிலும் சென்று பிச்சை கேட்கும் பொழுது , "அம்மா பார்வதி பிச்சை போடு" என்று கேட்பது அவன் வழக்கம்.

இவன் குரல் ஒரு முறை கைலாயத்தில் இருந்த பார்வதி தேவி காதுகளில் சென்றடைந்தது. அவளும் இறக்கமுற்றாள். சிவனிடம் பார்வதிதேவி பிச்சைக்காரனிடம் இரக்கம் காட்டும்படி வேண்டினாள்.

சிவபெருமான் இப்பிறவியில் பிச்சையெடுப்பது அவன் பிராப்தம் என்றும், அவன் விதியை தம்மால் மாற்றமுடியாது என்று எவ்வுளவோ சொல்லியும் அவன் மேல் செலுத்திய கருனையை மாற்றிகொள்ள பார்வதி தேவி தயாராக இல்லை. தாய் அல்லவா ?

"முடிந்தால் அவன் விதியை மாற்றி கொள்" என்று சிவபிறான் கூறி விடுகிறர்.

"நான் அவனை மிக பெரிய கோடீஸ்வரனாக மாற்றி அவன் விதியை நான் மாற்றி காட்டிகிறேன்" என்று ஈசனிடம் சவால் விடுகிறாள் பார்வதி தேவி.

ஈசன் மனதுக்குள் சிரித்து கொள்கிறார்.

ஒரு வீடு முடிந்து அடுத்த வீட்டுக்கு வரும் வழியில் மூன்று மூடைகள் தங்க கட்டிகளை அவன் வரும் வழியில் போடுகிறாள் பார்வதி.

அந்த நேரம் பார்த்து பிச்சைகாரனுக்கு திடீரென "ஒரு வேளை தான் குருடாகி விட்டால் என்ன செய்வது ?" என்ற எண்ணம் வருகிறது.

கையில் கிடைத்த ஒரு கம்பை எடுத்துகொண்டு, இரு கண்களையும் மூடிக்கொண்டு பக்கத்து வீடிற்கு செல்கிறான் பிச்சை காரன். வழியில் பார்வதி தேவி போட்டிருந்த பொற்காசு மூட்டைகள் காலில் இடறுகிறது.

பிச்சைகாரனோ, கண்களை மூடிகொண்டு இருப்பதால் அந்த பொற்காசு மூடைகளை கல் எண்று நினைத்து, கால்களால் உதைத்துவிட்டு, அடுத்த வீட்டிற்கு சென்றடைகிறான்.

அடுத்த வீட்டிற்க்கு சென்ற பின் கையில் வைத்திருந்த கம்பை தூக்கி எறிந்து விட்டு, மூடிய கண்களையும் திறந்து கொண்டு, குருடாகி விட்டாலும்கூட தன்னால் தொடர்ந்து பிச்சை எடுக்க முடியும் என்று தனக்குள் திருப்தியடைந்துகொண்டு, அடுத்த வீட்டு வாசலில் நின்றுகொண்டு வழக்கம்போல, "அம்மா பார்வதி பிச்சை போடு" என்று வழக்கம்போல் கூவுகிறான்.

விதி வலியது. அதை யாரும் வெல்லமுடியாது...! என்பது இக் கதையின் நோக்கம்.

கொசுறு செய்தி

திருவையாறு பெயர் காரணம் ..?
சிதம்பரம் நடராஜர் கோவிலின் விமானத்தின் கூரையில், 21 ஆயிரம் பொன் ஓடுகளை, 72 ஆயிரம் பொன் ஆணிகளால் அடித்துப் பொருத்தி இருக்கின்றனர். நாம் தினம் 21 ஆயிரம் தடவை மூச்சு விடுவதாகவும், நம்முடைய உடம்பில், 72 ஆயிரம் நரம்புகள் இருப்பதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.

வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி ஆகிய ஐந்து ஆறுகள் இங்கே பிரிவதால், இவ்வூர் திரு+ஐ(ஐந்து)+ஆறு என்றாகி, அது திருவையாறு என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரில் நாத பிரம்மம் தியாகராஜர் சமாதி உள்ளது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



Related Posts with Thumbnails
 
back to top