Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

பப்பாளி (2014) - விமர்சனம்

அரசூர் மூவிஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.அம்பேத்குமார் + ஏ.ரஞ்ஜீவ்மேனன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் பப்பாளி. இந்த படத்தில் செந்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் புகழ் பெற்ற சரவணன் மீனாட்சி தொடரின் நாயகன்.

கதாநாயகியாக இஷாரா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சரண்யா நடிக்கிறார். இளவரசு, ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, ஜெகன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் கௌரவ வேடத்தில் நிரோஷா நடித்திருக்கிறார்கள் .

விஜய் எபிநேசர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ஒளிப்பதிவு செய்ய, யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். 3

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் A.கோவிந்த மூர்த்தி. இவர் வெற்றி பெற்ற கருப்பசாமி குத்தகைதாரர், வெடிகுண்டு முருகேசன் போன்ற நகைச்சுவை படங்களை இயக்கியவர்.

படத்தோட கதை என்னனா ...

சாலையோரம் டிபன் கடை நடத்தி வருகிறார் இளவரசு. இவருடைய மகனான நாயகன் மிர்ச்சி செந்தில் பட்டப்படிப்பு முடித்து விட்டு ஐஏஎஸ் தேர்வு எழுதுவதற்காக பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டு அருகே உள்ள நாயகி இஷாராவை கண்டதும் காதல் வயப்படுகிறார். அவரிடம் தன் காதலை சொல்ல, அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து இருவரும் காதலித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இஷாரா தன் தாய் சரண்யாவிடம் செந்திலை அறிமுகப்படுத்தி வைக்கிறார். செந்திலை பார்த்தவுடன் சரண்யாவுக்கு பிடித்துவிட, காதலுக்கு பச்சைக் கொடி காட்டுகிறார். அப்போது செந்தில் தனது லட்சியமான ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப்பெற வேண்டும் என்று தெரிவிக்கிறார். இதைக்கேட்ட சரண்யா, தன் வாழ்வில் நடந்த கதையை கூறுகிறார்.

'என் கணவர் நரேன் என்னைத் திருமணம் செய்வதற்கு முன் பெரிய விஞ்ஞானியாக வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்கு முன் என்னை திருமணம் செய்து கொண்டதால் இருவீட்டாரின் எதிர்ப்பால் அவரால் அவருடைய லட்சியத்தை அடைய முடியவில்லை.

இன்று வரை அதை நினைத்து அவர் வருத்தப்படுகிறார். என்னால் தான் அவரால் விஞ்ஞானியாக முடியவில்லை என்று நான் நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன். அதேபோல் உங்கள் வாழ்க்கையும் வீணாகிவிடக்கூடாது, உங்கள் லட்சியத்திற்கு என் மகள் முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது’ என்று செந்திலிடம் கூறுகிறார்.

இதைக்கேட்ட செந்தில், உங்கள் பெற்றோர்கள் உங்களை வெறுத்து ஒதுக்கியதால்தான் உங்கள் கணவரால் லட்சியத்தை அடைய முடியவில்லை. உங்கள் பெற்றோர்கள் செய்த தவறை நீங்களும் செய்யாதீர்கள். எங்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள். நான் நிச்சயமாக தேர்வு எழுதி வெற்றிப்பெறுவேன் என்று கூறுகிறார்.

செந்திலின் கருத்தை ஏற்றுக் கொண்ட சரண்யா தன் முடிவை மாற்றிக் கொண்டு, செந்தில் ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றிப்பெற ஒத்துழைப்பு தர முடிவு செய்கிறார். அதே சமயம் செந்திலின் தந்தையான இளவரசு, ஓட்டலுக்கு ஆசைப்பட்டு செந்திலை வேறொரு ஓட்டல் முதலாளியின் பெண்ணுக்கு திருமணம் செய்ய முடிவு செய்கிறார்.

இத்திருமணத்தை நிறுத்த வேறு வழியில்லாமல் தன் மகள் இஷாராவுக்கும், செந்திலுக்கும் திருமணம் செய்து வைக்கிறார் சரண்யா. பின்பு தன் மாப்பிள்ளையை எப்படியாவது ஐஏஎஸ் ஆக்க வேண்டும் என்று சரண்யா மற்றும் அவரது கணவர் நரேன் முயற்சி செய்கிறார்கள். இந்த முயற்சியை இளவரசு தடுக்க முயற்சி செய்கிறார்.

இத்தனை தடைகளையும் கடந்து செந்தில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப்பெற்றாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

மிர்ச்சி செந்தில்
படத்தில் செந்தில் தன் யதார்த்தமான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு வலுவூட்டியிருக்கிறார். நடனம், காமெடி, காதல், சென்டிமென்ட் என நடிப்பை நன்றாக செய்திருக்கிறார். தன்னுடைய தோல்விகளை நினைத்து ஒவ்வொரு முறையும் சரண்யாவிடம் அழுது வருத்தப்படும் காட்சியில் நமக்கே லேசான சோகத்தை வரவழைத்துவிடுகிறார். இன்னும் நிறைய படங்கள் கிடைத்து நடித்தால் ஒரு லெவலுக்கு வரலாம்.

இஷாரா
நாயகி இஷாரா, நடுத்தர குடும்பப் பெண்ணாக பளிச்சிடுகிறார். காதல் காட்சிகளில் ரசிகர்களை கவரும் வண்ணம் நடித்துள்ளார். பாடல் காட்சிகளில் அழகாக இருக்கிறார். பாடல் காட்சிகளில் கொஞ்சம் கண்ணியம் காத்து, சில காட்சிகளில் அதைக் காற்றில் பறக்கவிட்டும் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகி பெரிய அளவில் நம்மை கவரவில்லை என்றாலும் உறுத்தவும் இல்லை.

சரண்யா பொன்வண்ணன்
சரண்யா பொன்வண்ணன் தமிழ் சினிமாவில் அன்னையாக பல படங்களில் நடித்து பாராட்டுகளை பெற்று வந்தார். தற்போது அன்னையாக மட்டுமல்லாமல் சிறந்த மாமியாராகவும் வலம் வருவார் என்பதற்கு இப்படம் உதாரணம். படத்தின் பெரும் பகுதியை இவருடைய கதாபாத்திரமே தாங்கிச் செல்கிறது. அதை உணர்ந்து நடிப்பை திறம்பட செய்திருக்கிறார். போனில் அவர் பாடும் ‘சொய்… சொய்… புபுபுப்…’ பாடல் அமர்க்களம்..!

சிங்கம்புலி
காமெடி கதாபாத்திரத்தில் வரும் சிங்கம்புலி ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக கதாநாயகியை துரத்தித் துரத்தி காதல் செய்யும் காட்சிகள், காதலையும் அரசியலையும் ஒப்பிட்டு பேசும் வசனங்கள் அருமை.


இளவரசு
நரேன், இளவரசு ஆகியோர் கொடுத்த வேலையை திறம்பட செய்திருக்கிறார்கள். அதிலும் தன மகன் தன்னை எதிர்த்து திருமணம் செய்து, தன கனவை தரைமட்டமாக்கிவிட்டான் என்பது தெரிந்ததும் இளவரசுவின் அட்ராசிட்டி இருக்கிறதே.. சூப்பர்..

இசை - விஜய் எபிநேசர்
விஜய் எபிநேசர் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் திறம்பட செய்திருக்கிறார். விஜயின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் பலம். ‘மனைவி வீட்டில் வாழப்போகும் பையா…’ ரீமிக்ஸ் சூப்பர்!

இயக்குனர் கோவிந்த மூர்த்தி
குடும்பக்கதையை மையமாக எடுத்துக் கொண்ட இயக்குனர் கோவிந்த மூர்த்தி, அதில் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்களிடம் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார். ஐஏஎஸ் தேர்வு எழுத முயற்சி செய்பவர்களுக்கு இப்படம் நல்ல ஊக்கமாக இருக்கும்.

இதுவரை ஒருவனின் வெற்றிக்கு அவனது பெற்றோர்களோ, அண்ணனோ, நண்பர்களோ அல்லது மனைவியோ, காதலியோ உதவி செய்வதாக வந்த படங்களை பார்த்திருப்பீர்கள். ஆனால் இங்க ஒரு மருமகனின் வெற்றிக்காக ஒட்டுமொத்த மாமனார் குடும்பமும் துணை நிற்பது என்பது தமிழ் சினிமாவுக்கு புதுசு.

கோழி இடும் முட்டைகள் : 3 / 5
மொத்தத்தில் 'பப்பாளி' - கசப்பும் இனிப்பும் கலந்த சுவை!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Maalaimalar.com



வடகறி (2014) விமர்சனம்

மு.க.அழகிரி மகன் தயாநிதி அழகிரி தயாரிப்பில் ஜெய் & சுவாதி நடித்த படம் "வடகறி".

ஒரு சாதாரணமானவனுக்கு ஒரு நாளில் ஒரு சோதனை ஏற்பட்டால் அதிலிருந்துவிடுபட அவன் என்ன பாடுபடுகிறான் என்பதுதான் கதை.

படத்தின் தலைப்புக்கும் கதைக்கும் வழக்கம் போல எந்த சம்பந்தமும் கிடையாது.

படத்தோட கதை என்னனா ...

சென்னையின் குடிசைப் பகுதியில் தனது அண்ணன் அருள்தாஸ், அண்ணி கஸ்தூரி ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார் ஜெய். இவருக்கு மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை கிடைக்கிறது. சாதாரண செல்போனை வைத்திருக்கும் ஜெய், தனக்கு வேலை கிடைத்துவிட்டதால், முதல் சம்பளத்தில் நல்ல செல்போனாக வாங்கவேண்டும் என்று திட்டம் போடுகிறார்.

முதல் மாத சம்பளத்தை வாங்கி, தனது அண்ணனிடம் கொடுக்கிறார். அவரோ, ஜெய்யிடம் வெறும் ரூ.2000 மட்டுமே கொடுக்கிறார். அதை வைத்து பெரிய போனை வாங்க முடியாது என்பதால் குறைந்த விலையில் ஒரு கொரியன் மொபைலை வாங்கிக் கொள்கிறார்.

அந்த மொபைலுக்கு அழைப்புகள் வரும்போதெல்லாம் அதிக சத்தத்துடன் வருவதால் இவரை சுற்றியுள்ளர்கள் இவர்மீது எரிச்சலடைகின்றனர். அதனால், அந்த போனை எப்படியாவது மாற்றவேண்டும் என்று முடிவு செய்கிறார்.

இதற்கிடையில், ஜெய்யின் நண்பன் பாலாஜி குடியிருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசிக்கும் தோழியின் வீட்டுக்கு வரும் சுவாதியை அந்த ஏரியாவில் உள்ள அனைவருமே ஜொள் விடுகின்றனர். ஒருநாள் பாலாஜி வீட்டிற்கு செல்லும் ஜெய்யும், சுவாதியை பார்த்தவுடனேயே காதலில் விழுகிறான்.

ஆனால், அவளுக்கு வேறொரு காதலன் இருக்கிறான், அதனால் அவளது தோழியை காதலிக்குமாறு அறிவுரை கூறுகிறான் பாலாஜி. அதை ஏற்றுக்கொள்ளும் ஜெய், சுவாதியின் தோழியை ரூட் விடுகிறார்.

இந்நிலையில், ஒருநாள் கடைக்கு செல்லும் ஜெய், அங்கு விலையுயர்ந்த செல்போன் ஒன்று அனாதையாக இருப்பதை பார்க்கிறார். அதைப் பார்த்ததும் எடுத்து வைத்துக் கொள்கிறார் ஜெய்.


ஒருநாள், சுவாதியின் தோழியிடம் சென்று தனது காதலை சொல்லப்போகும் ஜெய், அவள் மூலமாக சுவாதிக்கு காதலன் இல்லை என்பதை அறிகிறான். உடனே, சுவாதியை காதலிப்பதாக அவளது தோழியிடமே சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். கோபமடைந்த தோழி, சுவாதியிடம் சென்று சண்டை போடுகிறாள். இந்த சண்டையால் வெறுப்படைந்த சுவாதி, தோழியை கடுப்பேத்துவதற்காக ஜெய்யிடம் நெருங்கி பழகுகிறார். நாளடைவில் இருவருக்குள்ளும் காதல் வருகிறது.

இந்நிலையில் ஜெய் கண்டெடுத்த போனுக்கு ஒரு நபர் போன் செய்து, கொடுத்த சரக்கை எப்ப வந்து ஒப்படைப்பாய்? சீக்கிரம் வந்து கொடுத்துவிடு என்று சொல்லிவிட்டு கட் செய்துவிடுகிறார். யார் அவர்? என்ன சரக்கு? என்று எதுவும் தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார் ஜெய்.

இதற்கிடையில் அவரது அண்ணனின் நேர்மையை அறியும் ஜெய், தானும் அதேபோல் இருக்க நினைக்கிறார். அதனால், அந்த மொபைல் போனை உரியவரிடம் ஒப்படைக்க நினைக்கிறார். அப்போது, ஜெய்க்கு ஏற்கெனவே போன் செய்த நபர் மீண்டும் போன் செய்கிறார். அப்போது, அவரிடம் முகவரியைக் கேட்டு, அங்கு சென்று ஒப்படைக்கப்போகும் ஜெய்யை அந்த நபரின் கூட்டாளிகள் அடித்து துவம்சம் செய்கின்றனர்.

அவர்கள் யார்? ஜெய்யை அவர்கள் தாக்க என்ன காரணம்? என்பதை பிற்பாதியில் விளக்கியிருக்கிறார்கள்.

படத்துல எனக்கு பிடித்த சில ....

ஜெய்
வழக்கம்போல் ஜெய் வழக்கம்போல் இப்படத்திலும் தனது அப்பாவி முகத்தை படம் முழுக்க பதிவு செய்திருக்கிறார். எல்லா காட்சிகளுக்கும் ஒரேமாதிரியான ரியாக்ஷனை காட்டி சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறார். பார்க்க சற்று குண்டாகி அழகாக இருந்தாலும், நடிப்பில் தேறவில்லை.

சுவாதி
நாயகி சுவாதி அழகாக இருந்தாலும், இவருக்கு படத்தில் நடிப்பதற்குண்டான வாய்ப்பு மிக குறைவாக வழங்கப்பட்டிருப்பது வருத்தமே. நடிக்க அதிக வாய்ப் பில்லாவிட்டாலும் நுட்பமான முறையில் உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் கவர்கிறார்.


ஆர்.ஜே. பாலாஜி
படத்தின் தலைப்போடு வரும் ஆர்.ஜே. பாலாஜி எப்.எம்.இல் இருக்கும் ஞாபகத்தில் இப்படம் முழுக்க பேசிக்கொண்டே இருக்கிறார். ஆனால், கேட்கத்தான் முடியவில்லை. எப்போது நடிக்க ஆரம்பிப்பார் என்று தெரியவில்லை. படத்தில் இடம்பெறும் காட்சி ஒன்றில், பாலாஜி அடிக்கும் காமெடிக்கு ஜெய், ஜோக்கடிச்சியா? நாளைக்கு சிரிக்கிறேன் என்று சொல்லும் வசனம், இந்த படத்தில் பாலாஜிக்கு சரியாக பொருந்தும்.

இயக்குனர் சரவணராஜன்
டத்தில் நடித்திருக்கும் யாருக்கும் வலுவான கதாபாத்திரம் இல்லை. எந்த கதாபாத்திரமும் ரசிகர்களை கவரவில்லை. மருத்துவத்தில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்ட நினைத்த இயக்குனர் சரவணராஜனுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம். ஆனால், அதை கதையோட்டத்தில் அழுத்தமாக பதிவு செய்யாமல் கோட்டை விட்டுவிட்டார். இடையில் வரும் தொய்வுகளை நீக்கியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டிய படம், திரைக்கதையின் வேகத்தடைகளாலும் தர்க்க ரீதியான ஓட்டைகளாலும் தடுமாறுகிறது. உச்சக்காட்சியில் வரும் திருப்பம் செயற்கையாகவே இருக்கிறது.

விவேக் சிவா- மெர்வின் சாலமோன்
விவேக் சிவா- மெர்வின் சாலமோன் ஆகியோர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையும் பரவாயில்லை. வெங்கடேஷ் ஒளிப்பதிவு பாடல் காட்சிகளில் இதமாக இருக்கிறது.

சன்னி லியோன்
சன்னி லியோன் ஆட்டம் போடும் பாடலும், அந்த பாடலை படமாக்கியவிதம் சரியில்லை. படத்தின் மற்ற பாடல்களைப் போலவே இதுவும் திரைக்கதையுடன் ஒட்டவில்லை. செல்போனை வைத்து எடுக்கப்பட்டுள்ள பாடல் காட்சிப் படுத்தப்பட்டுள்ள விதம் அருமை.

கோழி இடும் முட்டைகள் : 3 / 5
மொத்தத்தில் 'வடகறி' - சுவையில்லை!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Maalaimalar.com



இவன் வேற மாதிரி (2013) - விமர்சனம்

"எங்கேயும் எப்போதும்" முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குநர் M.சரவணனின் இரண்டாவது படம். பெரும் சினிமா பின்னணி கொண்ட விக்ரம் பிரபுவின் இரண்டாவது படம். என ஏகப்பட்ட "இரண்டாவது..." எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்தாலும் இந்த வாரத்திலும், இன்னும் சில வாரங்களிலும் முதல் இடத்தைப் பெற முத்தாய்ப்பாய் வந்திருக்கும் திரைப்படம் தான் "இவன் வேற மாதிரி.

அநியாயத்தைக் கண்டு பொங்கி எழும் நாயகனைப் பற்றிய ஆயிரத்தி ஒன்றாவது படம்தான் இதுவும்.‘இவன் வேற மாதிரி’ என டைட்டில் வைத்தாலும் வழக்கமான மசாலா படத்தைத்தான் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சரவணன்.

அருமையான கதைகளம் .... பிரமாண்டம் இல்லாமல் நமக்கு அருகாமையில் நடந்தது பொல இருந்தது!

படத்தோட கதை என்னனா ...

சட்டத்துறை அமைச்சர் சட்டக்கல்லூரியில் தனக்கு 30 சீட்டுகள் ஒதுக்கித் தரவேண்டும் என அக்கல்லூரி முதல்வரிடம் முறையிடுகிறார். ஆனால், கல்லூரி முதல்வரோ அவருக்கு சீட் ஒதுக்கித் தரமுடியாது. ஏற்கெனவே தங்களுக்கு ஒதுக்கித் தந்த சீட்டுகளில் சேர்ந்த மாணவர்கள் எல்லாம் ரவுடிகளாக இருக்கின்றனர். இதனால், அவ்வப்போது கல்லூரியில் கலவரம் வருகிறது. அதனால் இந்த முறை தங்களுக்கு சீட் ஒதுக்கித்தர முடியாது என கூறுகிறார்.

தனக்கு சீட் தராத முதல்வருக்கு பாடம் புகட்டும்விதமாக, தனது சிபாரிசில் அக்கல்லூரியில் சேர்ந்த ஒரு மாணவன் மூலமாக அக்கல்லூரியில் கலவரம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்கிறார். அந்த கலவரத்தில் அப்பாவி மாணவர்கள் 3 பேர் கொல்லப்படுகின்றனர். இதை டிவியில் பார்த்துக் கொண்டிருக்கும் நாயகன் விக்ரம் பிரபு இதற்கு காரணமானவர்களை பழிவாங்க வேண்டும் என துடிக்கிறான்.

இந்நிலையில், ஜெயிலில் இருக்கும் தனது தம்பி வம்சி கிருஷ்ணாவை சட்டத்துறை மந்திரி தனது பரிந்துரையின் பேரில் பரோலில் வெளிக்கொண்டு வருகிறார். வெளியில் வரும் வம்சி கிருஷ்ணாவை விக்ரம் பிரபு கடத்தி விடுகிறார். இதையடுத்து தன் தம்பியை கடத்தியவர்கள் யார் என்று மந்திரி தேடிக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் பரோலில் வெளியே வந்த வம்சி கிருஷ்ணாவின் பரோல் முடிந்துவிட, அவரைத் தேடி போலீஸ் சட்டத்துறை மந்திரியிடம் செல்கிறது. வம்சி கிருஷ்ணா அங்கு இல்லாததால் மந்திரியை கைது செய்து ஜெயிலில் அடைக்கின்றனர். இதனால் மந்திரியின் பதவியும் போய்விடுகிறது. மந்திரியை பழிவாங்கும் தன்னுடைய எண்ணம் நிறைவேறிவிட, கடத்திய மந்திரியின் தம்பியை விடுவித்துவிடுகிறார் விக்ரம் பிரபு.

இதற்கிடையில், பஸ்ஸில் நாயகி சுரபியிடம் விக்ரம் பிரபு செய்யும் சிறுசிறு குறும்புகள் சுரபியை அவர் மீது காதல்கொள்ள வைக்கிறது. ஆனாலும் தன் காதலை நாயகனிடம் வெளிப்படுத்தாமலேயே இருக்கிறார்.

இந்நிலையில் தன்னை யார் கடத்தியது என்பது தெரியாத வம்சி கிருஷ்ணா, கடத்தியவனை எப்படியாவது கண்டுபிடித்து கொன்றுவிட வேண்டும் என முடிவெடுக்கிறான். இதனால், விக்ரம் பிரபுவை தேடி அலைகிறான்.

இறுதியில், வில்லன் நாயகனை கண்டுபிடித்து அவனை பழிவாங்கினானா? நாயகி தன் காதலை விக்ரம் பிரபுவிடம் வெளிப்படுத்தி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

விக்ரம் பிரபு
இயக்குநர் M.சரவணனின் எதிர்பார்ப்பை அவர் கற்பனையில் உருவாக்கிய குணா (அ)குணசேகரன் பாத்திரமாகவே மாறி நடித்து, அடித்து உடைத்து தூள் பரத்தியிருக்கிறார் விக்ரம் பிரபு. கும்கியில் ஒரு மாதிரி விக்ரம் பிரபு என்றால் இதில் "வேற மாதிரி" விக்ரம் பிரபு. ஆக்ஷன் காட்சிகளில் தூள் கிளப்பியிருக்கிறார்.

புதுமுகம் சுரபி
புதுமுகம் சுரபி டில்லி பொண்ணாம்! செவத்த சேலத்து பக்கம் பொண்ணு மாதிரி மாலினியாகவே மாறி நடிப்பில் பொளந்து கட்டியிருக்கிறார். அதுவும் விக்ரம் பிரபு தந்த மீன்களும் தொட்டியும் கையுமாக முன்பாதியில் கடும் காதல் தவம் புரியும் அம்மணி, பின் பாதியில் தன் காதலன் ஒரு நல்ல விஷயத்திற்காக அமைச்சர் தம்பி அண்ட் கோவினரை அடித்து, அடைத்து உதைத்திருக்கிறார் என தெரிந்ததும் அதை காட்டிக்கொள்ளாமல் விக்ரமை தொடர்ந்து காதலித்து வில்லனின் கைகளில் சிக்கி உண்மையை சொல்ல மறுத்து திருஷ்டி பொம்மையாகும் இடங்கள் கண்ணீர் இல்லாதோர் கண்களையும் கரைத்து விடும்!.
நாயகனிடம் வம்பு இழுக்கும் காட்சியில் அழகாக நடித்து இருக்கிறார். மற்றபடி நடிப்பில் இன்னும் கொஞ்சம் மெருகேற வேண்டும்.

நாயகியை விட நாயகியின் தங்கையாக வருபவர் முகத்தில் அதிக எக்ஸ்பிரசன்களை கொடுக்கிறார்.

கணேஷ் வெங்கட்ராமன், வம்சி கிருஷ்ணா
அரவிந்தன் ஐ.பி.எஸ்., ஆக கணேஷ் வெங்கட்ராமன். கம்பீரமா இருக்கிறாரு, ஆனால் நடிக்கத்தான் அதிக வாய்ப்பில்லை. சட்டத்துக்கு புறம்பான சட்ட அமைச்சராக வள்ளி ஹரிராஜன்(ரஜினிகாந்த் தயாரிச்ச ‘வள்ளி’ படத்தோட ஹீரோ ஹரிராஜ்), அவரது தம்பியாக வம்சி கிருஷ்ணா, அம்மா சார்மிளா, புதிய அப்பாக்கள், நாயகியின் புதுமுக தங்கை எல்லோரும் பாத்திரமறிந்து பளீச்சிட்டிருக்கிறார்கள்.

இசை, ஒளிப்பதிவு, சண்டை
C.சத்யாவின் இசையில் "லவ்வுல... லவ்வுல விழுந்துட்டேன்... என்னை மறந்தேன்... இது தான்..." உள்ளிட்ட ஆறு பாடல்களும் எங்கேயும் எப்போதும் பட சாயலிலேயே இருந்தாலும் அதுவும் இவன் வேற மாதிரி படத்துக்கு ப்ளஸ் தான்!

சண்டை பயிற்சியாளர் ராஜசேகரின் அதிரடியும் அசத்தம்!

சக்தியின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் எடுத்த விதம் அருமை. விபத்து காட்சிகளை படமாக்கிய விதம் அழகு. சக்தியின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் சக்தி கூட்டுகிறது.
இயக்குநர் M.சரவணன்
நாயகி சுரபியை காணோம் என போலீஸ் ஸ்டேஷன் வரும் இரு வீட்டு பெற்றோரிடமும், போலீசார் இந்த காதலன் இல்லாமல் பொண்ணுக்கு வேறு காதலர் யாரும் உண்டா? எனக் கேட்டு விட்டு, இப்படி கேட்கறதால எங்களை மாதிரி போலீஸை தப்பா நினைக்காதீங்க... உங்க பொண்ணை பத்தி உங்களுக்கு நல்ல அபிப்ராயம் தான் இருக்கும். ஆனா அந்தப் பொண்ணை தேட இதுமாதிரி டீடெயில் எல்லாம் உதவியா இருக்கும் எனும் வசனத்தில் ஆகட்டும், விக்ரம் பிரபு - சுரபி வீட்டினர் இவர்கள் காதல் தெரிந்து முதன் முதலில் சந்திக்கும் காட்சியில், இவர் வீட்டினருக்கு அவரும், அவர் வீட்டினருக்கு இவரும் குடிக்க ஏதோ பானம் எடுத்து செல்லுகின்ற காட்சியில் ஆகட்டும் புரட்சி படைத்திருக்கிறார் இயக்குநர்.

கதைக்கு தேவையில்லாத காட்சிகளை ஆங்காங்கே நுழைத்து சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறார். நாயகியைத் தேடி நாயகன் அலையும் போது ஏற்படும் விபத்து காட்சிகளை அழகாக எடுத்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சிகள் பிரம்மாண்டத்தை ஏற்படுத்தவில்லை.

அதேநேரம் முன்பாதியில் தெரியும் சற்றே குறைவான வேகம், வாட்ச் மேன் கொலையை தாமதமாக துப்பு துலக்குவது உள்ளிட்ட ஒரு சில குறைகள் இருந்தாலும் "இவன் வேற மாதிரி - ரொம்ப புது மாதிரி.!

கோழி இடும் முட்டைகள் : 3 / 5
இவன் வேற மாதிரி - ஒரு நல்ல படம்!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



பட்டத்து யானை (2013) - விமர்சனம்

மலைக்கோட்டை படத்தை தொடர்ந்து ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷால்-பூபதி பாண்டியன் கூட்டணி மீண்டும் கைகோர்த்திருக்கும் படம் பட்டத்து யானை. இதில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமாகியுள்ளார் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா.

இவர்களுடன் சந்தானம், ஜெகன், மயில்சாமி, பட்டிமன்றம் ராஜா, 'நான் கடவுள்' ராஜேந்திரன், மவுலி, அழகம் பெருமாள், உமா பத்மநாபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.

மும்பையை சேர்ந்த முரளி ஷர்மா, ரோஹித் முன்னா, ஐதராபாத்தை சேர்ந்த அஜய் சேனா, தடையற தாக்க மகா காந்தி, ஜான் விஜய் ஆகிய 5 பேரும் வில்லன்களாக நடித்துள்ளார்கள்.

படத்தோட கதை என்னனா ...

காரைக்குடியில் சமையல்காரராக இருக்கிறார் சந்தானம். அவரிடம் சமையல் வேலைக்கு வந்து சேர்கிறார் விஷால் & Co. ஒரு ரவுடியிடம் ஏற்பட்ட பிரச்சினையில் காரைக்குடியை காலி பண்ணிட்டு திருச்சிக்கு இடம் பெயர்கிறது சந்தானம் கோஷ்டி.

திருச்சிக்கு போன இடத்தில் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யாவின் அறிமுகம் கிடைக்கிறது. இந்த அறிமுகம் விஷால் மனதில் காதலை விதைக்கிறது. இந்நிலையில் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ள வில்லன் ஒருவன் முயற்சிக்க இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. ஐஸ்வர்யாவை அந்த பிரச்சினையில் இருந்து விஷால் எப்படி காப்பாற்றுகிறார் என்பது மீதி கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

ஹீரோ விஷால்
எப்படியாவது ஒரு ஹிட் படம் கொடுக்க வேண்டும் என்று விஷால் சமீபகாலமாக தீயா வேலைசெய்கிறார். ஆனால், காலம் அவரை ஏமாற்றியே வருகிறது. விஷாலுக்கு அதே நடிப்புதான். இடைவேளை பிளாக்கில் தான் யார் என்பதை சீரியஸாக சொல்லும்போதுதான் விஷால் சிரமப்பட்டு நடித்திருக்கிறார் போலும்.

விஷால் சண்டைக்காசிகளில் சக்கைபோடு போட்டாலும், திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாததால் அது எதுவுமே பெரிய அளவில் பிரம்மிப்பை ஏற்படுத்தவில்லை. சண்டை காட்சிகளை அமைத்தவரின் புண்ணியத்தில் ஆக்சன் ஹீரோவாக அதகளம் செய்து தப்பித்து கொண்டிருக்கும் ஹீரோக்களில் விஷாலும் ஒருவர் என்பதால் ஆக்சனில் காது கிழிகிறது..! மனிதர் ஒவ்வொரு சண்டைக்காட்சியிலும் நூறு, இருநூறு அடியாட்களை அடித்து போடுவது நம்பும்படியாக இருப்பது படத்திற்கு பெரும் ப்ளஸ்!

விஷாலைப் பொறுத்தவரை கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். நடனத்தில் விஜய்யின் சாயல் தெரிகிறது. சந்தானத்துக்கு கொடுத்த முக்கியத்துவம் விஷாலுக்கு கொடுக்கவில்லை என்றே தோன்றுகிறது.

ஹீரோயின் ஐஷ்வர்யா
ஐஷ்வர்யா அர்ஜூன் சும்மா வந்து போகிறார். + 2 படிக்கும் பாத்திரத்திற்கு பொருந்துகிறார். படம் முடியும்வரை விஷாலிடம் காதலை சொல்லாமலே போகிறார். பாடல் காட்சிகளில் ஜிகினா டிரெஸ்ஸில் ஜொலித்தாலும், கனவுக்கன்னியாக வரும் வாய்ப்பு குறைவுதான்..!

சந்தானம்
சந்தானம் தான் நிஜ ஹீரோ. படம் பூரா இவர் ராஜ்ஜியம் தான். ஆனா சிரிப்பு கம்மியாதான் வருது. பழைய படங்களின் ஸ்டைலையே இதிலும் தொடர்ந்திருந்தாலும் சிற்சில இடங்களில் நகைக்க வைத்திருக்கிறார். ஓட்டல் வைப்பதற்காக திருச்சிக்கு சென்று சீரழியும் இவரின் நகைச்சுவை கலாட்டா தியேட்டரில் விசில் பறக்கவைக்கிறது. மொத்ததில் சந்தானம் ரசிகர்களுக்கு இப்படம் விருந்து!

மயில்சாமி
மயில்சாமி சின்ன கேரக்டரா இருந்தாலும் மனசுல நிக்கிற மாதிரி நல்ல கேரக்டர். கானா பாலாவின் குரலில் அவர் பாடும் பாட்டு அசத்தல். அவர் போட்ட டான்ஸும் கலக்கல். மனிதர் டயலாக் டெலிவரியில் பின்னியெடுக்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் சித்ரா லஷ்மணனிடம் தான் எப்படி திருடினேன் என்பதைச் சொல்லும் காட்சியில் சந்தானத்தை ஓவர்டேக் செய்திருக்கிறார்

இசை தமன்
தமனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். கானா பாலாவின் பாடல் & 'என்ன ஒரு என்ன ஒரு...' மட்டும் ரசிக்கும்படி இருந்தாலும் அதற்கான நடன அமைப்பு அலுத்துப்போன ஒன்று. 'என்ன ஒரு என்ன ஒரு..' பாடல் டியூனை கேட்டால் வேறு எங்கோ போய் இடிக்குது.. கண்டுபிடிச்சிருவோம்.. மண்டைக்குள்ளேயே இருக்கு.. ( சிவாஜி நடித்த எங்கள் தங்க ராஜா படத்தில் வரும் இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை என்ற பாடலின் அப்பட்டமான காப்பி.)

ஜான் விஜய்
கொஞ்சம் வில்லத்தனம் நிரம்பிய குணசித்திர வேடத்தில் ஜான் விஜய் மட்டும் சோபிக்கிறார். ஆனால் விஷாலிடம் ஓர் உதை கூட வாங்காமல் எல்லாக் காட்சிகளிலும் எப்படியோ நழுவி விடுகிறார். ஜான் விஜய் மற்றும் அவரது கும்பல் செய்யும் கலாட்டா மிரட்டலுடன் சிரிப்பையும் வரவழைத்திருக்கிறது.

சண்டைக்காட்சி ஆன்டனி
சண்டைக்காட்சிகளில் ஆன்டனி செமயாக எடிட்டிங் செய்திருக்கிறார். தேவைப்படும் இடங்களில் மட்டும் ஸ்லோ மோஷன் வைத்து சண்டைக் காட்சிகளில் சீட் நுனிக்கே வர வைக்கிறார் ஆன்டனி.

இயக்குனர் பூபதி பாண்டியன்
முக்கியமான வில்லனாக வரும் அண்ணாச்சியும் செம பெர்பாமன்ஸ். ஓரிரு காட்சியில் வரும் நெல்லைசிவா, திருடுறவன் எல்லாம் ஜென்டில்மேன்தான் என்று சொல்வதற்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. இது போன்று கலகலக்க வைக்கும் வசனங்கள் படம் முழுவதும் தொடர்ந்து வந்து சிரிக்க வைக்கின்றன. வைத்தியின் ஒளிப்பதிவில் சண்டைக்காட்சிகளும், பாடல் காட்சிகளும் படமாக்கிய விதம் அருமை.

வசனங்களில் சில படம் முடிந்த பின்னரும் நினைவில் இருக்கின்றன. கதை என்று பார்த்தால் அரைத்த மாவையே அரைத்து இருக்கிறார்கள். காமெடி பாதி, ஆக்சன் மீதி என்று கொடுக்க முயன்று ஏதோ ஒன்றை திரையில் காட்டி இருக்கிறார்கள். முதல் பாதியில் காமெடியும், இரண்டாம் பாதியில் பாசம், காதல், சண்டை என கலந்து கொடுத்திருக்கிறார்.

கண்டிப்பாக எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. விஷால் ரசிகர்களும், காமெடிப் பிரியர்களும் வேண்டுமானால் பார்க்கலாம்.

கோழி இடும் முட்டைகள் : 2.5 / 5
பட்டத்து யானை - படம் அவ்வளவு சிறப்பு இல்லை.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



கருப்பம்பட்டி (2013) - விமர்சனம்

அஞ்சாதே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் அஜ்மல். அந்த படம் வெற்றிப்படமாக அமைந்ததால் அஜ்மலைத் தேடி சிலபல வாய்ப்புகள் வந்தன. அதனைத் தொடர்ந்து திருதிரு துறுதுறு, தநா 07 அல 4777, கோ உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதனை தொடர்ந்து இப்போது அவர் நடித்து வெளிவந்த படம் தான் "கருப்பம்பட்டி".

டைரக்டர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவத்துடன் கருப்பம்பட்டி படத்தை இயக்கியுள்ளார் பிரபுசோழன். அஜ்மல் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம்.

கருப்பம்பட்டி என்ற தலைப்பிலேயே கதையைச் சொல்லி, பாசம், கூட்டுக்குடும்பம் போன்றவற்றின் அறுமை பெருமைகளை இப்படத்தின் மூலம் சொல்லியிருக்கிறார்.


படத்தோட கதை என்னனா ...

கருப்பம்பட்டி ஊரில் சொத்து பத்தையெல்லாம் அடகு வைத்து தனது பிள்ளையை நன்றாக படிக்க வைக்கும் அப்பா-அம்மாவுக்கு மகனாக அஜ்மல். இவர் தான் படிக்கும் கல்லூரியில் தன்னை மிகப்பெரிய பணக்காரராக சித்தரித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், கல்லூரி விழா ஒன்றில் தனது அப்பா-அம்மாவாக கோட் சூட் போட்டு, பட்டுப்புடவை கட்டி என வாடகைக்கு அப்பா, அம்மா அமர்த்திக் கொள்கிறார். இந்த நேரத்தில் அஜ்மலின் உண்மையான அப்பா-அம்மா அங்கு வர, அவர்களை தன் வீட்டு வேலைக்காரர்கள் என சொல்லும் அஜ்மல், "ஏன் இங்கு வந்தீங்க? இங்கிருந்து போங்க..." எனக்கூறி அவர்களை விரட்டியடிக்கிறார்.

இதே கவலையில் ஊருக்கு திரும்பும் அம்மா இறந்து போகிறார். அம்மாவின் சாவுக்கு ஊருக்கு வரும் அஜ்மல் அவருக்கு கொள்ளிபோட மறுக்கிறார். ஏனென்றால் கொள்ளி போட்டால் மொட்டை அடிக்க வேண்டும். அழகு கெட்டுவிடும் என நினைக்கிறார். இதனை அந்த ஊர் மக்கள் கண்டிக்கின்றனர்.

தன்னை கண்டிக்கும் ஊர் மக்களின் சொத்து பத்திரங்களை திருடிக் கொண்டுபோய் அடகு வைத்து, அந்த பணத்தில் பாரீஸ் சென்று குடியேறுகிறார். அதன்பின் கருப்பம்பட்டி ஊரே காலியாகிறது. இவருடைய சொந்த பந்தங்கள் எல்லாம் சிதறிப் போகிறது. இந்த விஷயத்தை தனது மகன் அஜ்மலிடம் சாவு நிலையில் கிடக்கும்போது சொல்கிறார் தந்தை அஜ்மல்.

அப்பாவின் ஆசையை நிறைவேற்ற தனது சொந்த ஊருக்கு வருகிறார். தனது சொந்தங்களையெல்லாம் ஒன்று திரட்டுகிறார். இதற்கிடையில் அபர்ணா பாஜ்பாயை காதலிக்கிறார். இறுதியில் தன் ஊர்க்காரர்களுடன் அஜ்மல் சேர்ந்து வாழ்ந்தாரா? தனது காதலியை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.


படத்துல எனக்கு பிடித்த சில ....

ஹீரோ அஜ்மல்
அப்பா- மகன் என இருமாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கிறார் அஜ்மல். 90-களில் வரும் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். ஒரு சில இடங்களில் நடிப்பை வரவழைக்க கஷ்டப்பட்டிருந்தாலும், பல இடங்களில் பரிதாபத்தை வரவழைத்திருக்கிறார்.

கதைகளை நிறையே சலித்துச் சலித்து செலக்ட் செய்துதான் நடிக்கிறேன் என்கிறார் அஜ்மல். இந்தக் கதையும் அப்படித்தானோ..? பாவம் அஜ்மல் :(

ஹீரோயின் அபர்ணா பாஜ்பாய்
அஜ்மல்போல், நாயகி அபர்ணா பாஜ்பாய்-ம் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பாஜ்பாய் பாவாடை,தாவணியில் மட்டுமே கிராமத்து பெண்ணாக ரசிக்க வைக்கிறார். ஆனால் க்ளோசப்பில் பயமுறுத்துகிறார்.

கல்லூரி காலங்களில் அஜ்மலிடம் தனது காதலை சொல்லும்போது, அவர் அதை மதிக்காமல் கிண்டல் செய்யும்போது தன்னுடைய உணர்ச்சியை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். காதல் காட்சிகள் குறைவு என்பதால் இவரது நடிப்புக்கு வாய்ப்பு குறைவே.

எம்.எஸ்.பாஸ்கர், ஜெகன், ஸ்ரீநாத்
கல்லூரி விடுதி வார்டனாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் முதல் பாதி முழுவதும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார். இவருடைய தோற்றம், நகைச்சுவை கலந்த ஆங்கிலப் பேச்சு என அட்டகாசமாக பண்ணியிருக்கிறார். இடைவேளைக்குப் பிறகு வரும் நண்டு ஜெகன், ஸ்ரீநாத் என இருவரும் காமெடி என்கிற பெயரில் காதுகளுக்கு இரைச்சலைக் கொடுத்திருக்கிறார்கள்.

காமெடிக்காக ரொம்பவே கஷ்ட்டப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுடைய கஷ்ட்டத்தைப் பார்த்து, ரசிகர்கள் இறக்கப்பட்டு சிரிக்கிறார்கள். காமெடி என்ற பெயரில் ஜெகனின் காட்டுகத்தலில் நமது இரண்டு காதுகளும் பஞ்சரானது தான் மிச்சம்.



இயக்குனர் பிரபுராஜ சோழன்
உறவுகளோடு வாழ்கிற வாழ்க்கைதான் சந்தோஷம். பணம் ஒன்றும் பெரிதில்லை என்ற கதையை மையப்படுத்தி உருவாக்கியிருக்கிறார். சென்டிமென்ட்டுக்கள் கொஞ்சம் காமெடியை புகுத்தி சொல்லியிருக்கிறார். கதை நன்றாக இருந்தாலும், திரைக்கதை, வசனத்தில் கவனம் செலுத்தாமல் போனதுதான் வருத்தமளிக்கிறது.

இசை கண்ணன்
கண்ணனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். இந்தி இசையமைப்பாளர் பப்பிலகரியின் குரலில் ஒலித்த 1980 காலகட்டப் பாடலும், கருப்பம்பட்டி பாடலும் ஆட்டம் போட வைக்கிறது.

அஜ்மலின் உறவினர்கள் கும்பலில் தேவதர்ஷினி, சேத்தன், மகாதேவன் ஆகிய மூன்று பேர் மட்டும் மனதில் நிற்கிறார்கள்.

சந்தோஷ் ஸ்ரீராம், சஞ்சீவியின் கேமரா கருப்பம்பட்டி கிராமத்தின் பசுமை, வெறுமை என அனைத்தையும் அழகாக படமாக்கியிருக்கிறது.

கோழி இடும் முட்டைகள் : 2.5 / 5
கருப்பம்பட்டி - சுமார்.!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



Related Posts with Thumbnails
 
back to top