Showing posts with label கிரிகெட். Show all posts
Showing posts with label கிரிகெட். Show all posts

பெண்கள் உலக கோப்பை கிரிகெட் : வெளுத்து கட்டிய காமினி !

பெண்கள் உலக கோப்பை கிரிகெட்!

10-வது பெண்கள் உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி நேற்று மும்பையில் துவங்கியது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன.


நேற்று நடந்த "ஏ பிரிவு லீக் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. நேற்றைய லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீசை 105 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

தமிழக வீராங்கனை காமினி சதம் அடித்து அசத்தினார். சர்வதேச ஒரு நாள் அரங்கில் முதல் சதம் அடித்த காமினி (146 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்) துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார்.

உலக கோப்பை தொடரை இந்திய அணி வெற்றிகரமாக துவக்கியது.

வெளுத்து கட்டிய காமினி !

நேற்று ஒரு நாள் போட்டி அரங்கில், தனது முதல் சதத்தை பதிவு செய்தார் தமிழகத்தின் திருஷ் காமினி முருகேசன்(22).

அரைசதத்தை கடக்க 93 பந்துகளை எடுத்துக் கொண்ட போதிலும், அதன் பிறகு துரிதமான ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். அதன் பிறகு அடி வெளுத்து கட்டினார். அபாரமாக ஆடிய அவர் தனது முதலாவது ஒரு நாள் போட்டி சதத்தை பூர்த்தி செய்தவுடன் ரன்–அவுட் ஆகி போனார். அவர் 100 ரன்களுடன் (146 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினார்.

காமினி வாழ்க்கை

கடந்த 1990ல் சென்னையில் பிறந்தார். ஒன்பது வயதில், தந்தையுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாட துவங்கினார்.

தனது 16ம் வயதில் ஜெய்ப்பூரில் நடந்த, ஆசிய கோப்பை போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக 19 ரன்கள் மட்டும் கொடுத்து, 3 விக்கெட் கைப்பற்றினார். இத்தொடரில் இந்திய அணி கோப்பை வென்றது. இதில் பவுலிங்கில் அசத்திய காமினி 8 விக்கெட்டுகள் வீழ்த்த, தொடர் நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

இடது கை ஆட்டக்காரரான காமினி, இதுவரை 22 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று, 382 ரன்கள் எடுத்துள்ளார்.

பவுலிங்கில் 9 விக்கெட் வீழ்த்தியுள்ளார். தவிர, ஒரு "டுவென்டி-20 போட்டியிலும் பங்கேற்றுள்ளார்.

மேலும் பல சதம் அடிக்க வாழ்த்துக்கள் காமினி!

இந்தியாவின் முதல் சதம்

முந்தைய 9 உலக கோப்பை தொடரில் மொத்தம் 34 சதங்கள் அடிக்கப்பட்ட போதிலும், இந்திய வீராங்கனைகள் யாரும் செஞ்சுரி அடிக்கவில்லையே? என்ற நீண்ட கால ஏக்கத்தை இந்திய வீராங்கனை காமினி நேற்று போக்கினார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் அவர் 100 ரன்கள் எடுத்து பிரமாதப்படுத்தினார். 22 வயதான காமினி சென்னையில் பிறந்தவர். 40 ஆண்டு கால பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற அரிய பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.

முதல் விக்கெட்டு அதிகபட்ச ரன்குவிப்பு சாதனை

இந்த ஆட்டத்தில் காமினி–பூனம் ரவுத் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 175 ரன்கள் குவித்தது. உலக கோப்பை போட்டியில் இந்திய ஜோடி ஒன்றின் அதிகபட்ச ரன்குவிப்பு இதுவாகும்.

இதற்கு முன்பு 2000–ம் ஆண்டு உலக கோப்பையில் இலங்கைக்கு எதிராக இந்தியாவின் அஞ்சும் சோப்ரா–சந்திரகாந்தா கவுல் ஆகியோர் 3–வது விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.

இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா நேற்று எடுத்த 284 ரன்களே உலக கோப்பையில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோராவும் பதிவாகியிருக்கிறது. இதற்கு முன்பு 2000–ம் ஆண்டு உலக கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிராக 4 விக்கெட்டுக்கு 275 ரன்கள் எடுத்ததே இந்தியாவின் அதிக ரன்களாக இருந்தது.

உலக கோப்பையை நமது பெண்கள் கிரிகெட் டீம் வாங்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள் !!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



இந்திய கிரிகெட் கடவுள் ஓய்வு

கிரிக்கெட்டின் சகாப்தம், மாஸ்டர் பிளாஸ்டர், கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். ஒருநாள் போட்டியில் பல்வேறு உலக சாதனைகளை படைத்துள்ள தெண்டுல்கரின் இந்த ஓய்வு முடிவு அதிர்ச்சியானதே. இதுகுறித்து முன்னாள் பிரபல வீரர்கள் தெரிவித்த கருத்து வருமாறு:-


கவாஸ்கர் - முன்னாள் கேப்டன், டெலிவிசன் வர்ணனையாளர் :
தெண்டுல்கரின் ஓய்வு முடிவுக்கு அவர் மீதான விமர்சனமும் ஒரு காரணமாக இருக்கலாம். அவர் ஒருநாள் போட்டியில் 49 சதம் அடித்துள்ளார். 50 சதம் அடித்த பிறகு ஓய்வு பெற்று இருந்தால் மிகவும் சிறப்பாக இருந்து இருக்கும். என்னை பொறுத்தவரை அவர் இன்னும் நல்ல உடல் தகுதியுடன் தான் இருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சார்ஜாவில் 1998-ம் ஆண்டு 143 ரன் குவித்ததே அவரது சிறந்த ஆட்டமாக நான் கருதுகிறேன். உலக கோப்பையை வென்றது அவரது வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தெண்டுல்கரின் ஓய்வுக்கு பிறகு இந்திய அணி இனி கவனமுடன் விளையாட வேண்டும். அவரது ஓய்வு இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும்.

ஸ்ரீகாந்த் - முன்னாள் கேப்டன், முன்னாள் தேர்வு குழு தலைவர் :
தெண்டுல்கரின் இந்த முடிவு வியப்பளிக்கிறது. ஒருநாள் போட்டியில் சிறந்த பார்மில் உள்ள போது தான் ஓய்வு பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

ரமீஷ் ராஜா - பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் :
தெண்டுல்கரின் இந்த முடிவு புரிந்து கொள்ளக்கூடியதே. 23 ஆண்டுகளாக விளையாடி ஒருநாள் போட்டியில் தன்னால் முடிந்த சாதனைகள் அனைத்தையும் நிகழ்த்தியுள்ளார். உலக கோப்பையையும் வென்றுள்ளார். ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதன் மூலம் ஆண்டுக்கு 30 நாட்கள் மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவர். இதனால் டெஸ்டில் அவர் சிறந்த பங்களிப்பை தருவார்.

கங்குலி - இந்திய அணி முன்னாள் கேப்டன் :
இந்த ஓய்வு அவரது சொந்த முடிவு. அவரை யாரும் நீக்க முடியாது. அவரது ஓய்வு முடிவால் கிரிக்கெட் உலகமே வேதனை அடைகிறது. அவரது ஓய்வு இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.

கும்பளே - இந்திய அணி முன்னாள் கேப்டன் :
இந்திய கிரிக்கெட்டில் சச்சின் இல்லை என்பதை நினைத்து பார்ப்பது என்பது கடினமானதே. இந்த ஓய்வு மூலம் அவர் நிம்மதி அடைந்து இருப்பார். பேட்டிங்கில் சாதனைகள் புரிந்த அவர் ஒரு சிறந்த சுழற்பந்து வீரர் ஆவார்.

வார்னே - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் :
தெண்டுல்கரால் எனது இரவு தூக்கம் பலமுறை பாதித்துள்ளது. அவரது ஆட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது. டான் பிராட் மேனை தவிர யாருடனும் அவரை ஒப்பிட இயலாது.
பிராட்மேனை போல அனைத்து நுணுக்கத்துடன் விளையாடிய ஒரே வீரர் தெண்டுல்கர் ஆவார்.

ராகுல் டிராவிட்- இந்திய அணி முன்னாள் கேப்டன் :
தெண்டுல்கர் தனி சிறப்புடைய கிரிக்கெட் வீரர் ஆவார். அவரது சாதனைகளை பார்த்தால் தெரியும். ரன் குவிப்பில் அவருக்கும், மற்ற வீரர்களும் இடையே மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது.

ஜவகல் ஸ்ரீநாத் - இந்திய முன்னாள் வேகப்பந்து வீரர் :
ஒருநாள் போட்டியில் அவரது பேட்டிங்கை பார்ப்பது என்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஆட்டத்தின் தன்மையை மாற்றக்கூடிய மிக சிறந்த வீரர். அவர் அதிரடியாக விளையாடினால் எதிர் அணி பவுலர்களின் நிலை திண்டாட்டம் தான். அவருடன் ஒன்றாக இணைந்து ஆடியது மகிழ்ச்சி அளிக்கிறது. டெஸ்டில் தொடர்ந்து விளையாடுவது என்று அவர் எடுத்த நிலை சரியானதே.

சரத்பவார் - மத்திய மந்திரி, கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் :
கிரிக்கெட்டில் எப்போதும் சிறந்த பேட்ஸ்மேன் தெண்டுல்கர் தான். அவர் எனது சிறந்த நண்பர். அவரால் இந்திய அணி மிகுந்த பெருமை அடைந்து உள்ளது. இதற்காக அவருக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Source : Maalaimalar



Related Posts with Thumbnails
 
back to top